ஹலோ...

.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை என்றாலே நவீன் காப்பிக் கடையில் கூட்டம் அதிகம். கவுண்டரில் இருப்பவருக்கு முன் நானகைந்து கைகள் நீட்டிக்கொண்டிருக்கின்றன டோக்கன் வாங்க.
அதில் ஒரு கை ப்ரவீன் உடன் ஒரே நேரத்தில் நடக்க வருபவர். முதியவர். சமயத்தில் இருவருமே ஒன்றாக நடந்திருப்பார்கள்.
ப்ரவீன், அவருடைய டோக்கனையும் வாங்கிக்கொண்டு, ஓரமா இருங்க சார். நான் வாங்கிட்டு வரேன் என்று கூட்டத்தின் நடுவே இரண்டு காப்பி டம்ளர்களை வாங்கிக்கொண்டு வந்தான்.
இருவரும் ஓரமாய் பேசிக்கொண்டே காப்பி குடிக்க, அந்த வயதானவருக்கு ஒரு ஃபோன்.
ஹலோ...
எதிர்புறத்தில் பேசுவது பக்கத்தில் இருக்கும் ப்ரவீனுக்கு லவுட்ஸ்பீக்கர் போடாமலேயே கேட்டது. ஆனால் தெளிவாய் கேட்கவில்லை.
ஆங்க்...ஆங்க்..மாப்ள சௌக்கியமா..என்றார் உடன் நடப்பவர்.
எதிர்புறத்தில் ஏதோஒன்று கேட்க....
ஆமா மாப்ள இப்பத்தான் வாக்கிங்க். நீ என்ன இந்நேரத்துலயே கூப்டுட்ட.....
எதிர்புறத்தில் மிக நீளமாய் ஏதோ ஒன்று கேட்க....
அது விசாரிக்கனுமே மாப்ள...என இழுத்தவர்..இரு மாப்ள நல்ல நேரமா கூப்ட...என் கூட ஒரு தம்பி இருக்காப்ல..அவர் மெடிக்கல் ஃபீல்டு தான். அவர்ட்ட ஃபோன குடுக்குறேன். நீயே கேளு மாப்ள என்று ப்ரவீனைப் பார்த்து...

தம்பி, ஃபோன்ல என் சினேகிதன். காரைக்குடில இருக்கான். அவனுக்குத் தெரிஞ்சவங்களுக்கு ஏதோ ஒடம்பு சரியில்லையாம். மதுரைல ஆஸ்பத்திரில காமிக்கனுமாம். ஏதோ ஆஸ்பத்திரி பத்தி கேட்குறான். சொல்லுங்களேன் என்று ஃபோனைக்கொடுத்தார்.

ப்ரவீன் ஃபோனை வாங்கி,

வணக்கம் சார்...
சார் வணக்கம்..நான் சிகாமணியோட ஃப்ரண்ட். காரைக்குடில இருந்து பேசுறேன்.
சார் சொன்னாங்க சார். நீங்க சொல்லுங்க என்றான் ப்ரவீன்.
இல்ல சார் . மதுரைல கேன்சர் க்கு ட்ரீட்மெண்ட் எங்க நல்லா இருக்கும்னு விசாரிக்கனும் அதான் சிகாமணிட்ட கேட்டேன். அவன் உங்கட்ட கொடுத்தான். நீங்க டாக்டரா சார்.

இல்ல இல்ல. நான் மெடிக்கல்ரெப் மேனேஜரா இருக்கேன். எந்த விதமான கேன்சர்னு தெரிஞ்சாத்தான் என்ன கண்டிஷனு தெரிஞ்சாத்தான் விசாரிச்சு சொல்ல முடியும் சார்.

ஓ அப்படியா..சார். நான் ஒரு புத்தக கடை வச்சிருக்கேன். நம்மட்ட வழக்கமா புத்தகம் வாங்குவாப்புடி. நம்ம கஷ்டமர் கம் ஃப்ரண்ட் வச்சுக்கோங்களேன். அவரோட சொந்தக்காரங்களுக்குத்தான். ஒரு நிமிஷம்  சார். அவர் என் பக்கத்துல தான் நிக்குறார். அவர்ட்ட கொடுக்குறேன்.
ப்ரவீன் , தன் உடன் நடப்பவரின் மொபைலை வாங்கிப் பேசுவது போல் காரைக்குடிக்காரர் தன் மொபைலை அவர்க்கு அருகில் இருப்பவரிடம் தருகிறார்.
வணக்கம் சார், என் பெயர் பழனி...

சார் என் பெயர் ப்ரவீன் .

இருவரும் அறிமுகமாகிக்கொண்டிருந்தார்கள்
.
எனக்கு சொந்தக்காரர் சார். அவருக்குத்தான் கேன்சர் ன்ற மாதிரி சொல்றாங்க.

எப்ப சார் கண்டுபிடிச்சாங்க.

ஒரு வருஷம் ஆச்சு சார்.
ட்ரீட் மெண்ட்ல இருக்காங்களா...

ஆமா சார்.சென்னைல அடையார் இன்ஸ்ட்யூட்ல..ஹீமோ தெரபி பண்ணாங்க சார். நாளைக்கு மூணாவது சிட்டிங்க். பெட் ஸ்கேன் பார்ப்பாங்க போல. அத பாத்தா தெரியும். சென்னை போய்ட்டு வர கஷ்டமா இருக்கு. அதான் மதுரைனா பக்கமா இருக்குமேனு கேக்குறாங்க.
ஓ..சரி சரி..இப்ப அங்க ஹீமோதெரபி அங்க ஓடிட்டு இருக்கும்போது மாத்தவேணாம்னு தோணுது. இன்னொன்னு அதுவும் நல்ல ஹாஸ்பிட்டல் தான். ஒண்ணு செய்யச்சொல்லுங்க. நாளைக்கு அங்க மூணாவது சிட்டிங்க் முடிஞ்சு பெட் ஸ்கேன் எடுத்துட்டு வரச்சொல்லுங்க. அந்த ரிசல்ட் வச்சுட்டு மதுரைல ஏதாவது ஆஸ்பத்திரி விசாரிச்சுட்டு சொல்றேன். அவங்க அங்க போய்ட்டு வரட்டும் சார்.

நன்றி சார். உங்க நம்பரை நான் சார்ட்ட வாங்கிக்கிறேன்.
இல்ல சார் நீங்க என் நண்பரோட நண்பருடைய நண்பர். அதுனால அவர்ட்ட என் நம்பர் இருக்காது. குறிச்சுக்கோங்கனு தன்னுடைய மொபைல் நம்பரை ப்ரவீன் சொல்ல பழனி குறித்துக்கொண்டார்.

அலைபேசி அழைப்பு 2

முதல் அழைப்பிற்கும் இப்பொழுது வரும் இரண்டாவது அழைப்பிற்கும் உள்ள கால இடைவெளி சுமார் பதினைந்து நாட்கள்.

ஹலோ...
ப்ரவீன் சார்ங்களா

ஆமா...நீங்க.
சார் நான் பழனிச்சாமி..காரைக்குடில இருந்து பேசுறேன். கொஞ்ச நாளைக்கு முன்னாடி உங்கட்ட சிகாமணி சார் ஃபோன்ல பேசுனேன்ல...கேன்சர் பேஷண்ட் விசயமா.....ஞாபகம் இருக்கா...

(கொஞ்சம் நினைவு வந்த உணர்வுடன்)

சொல்லுங்க சார் ...நல்லாருக்கீங்களா..உங்க நம்பரை சேவ் பண்ணல. இப்ப பண்ணிரேன். உங்க சொந்தக் காரங்க நல்லாருக்காங்களா..

அவங்க பத்தி பேசத்தான் கூப்பிட்டேன் சார். அவருக்கு வயிறுவலி மாதிரி இருக்குனு சொல்லித்தான் ட்ரீட்மெண்ட் ஆரம்பிச்சது. கடைசில கேன்சர்னு கண்டுபிடிச்சு சொந்தக்காரங்க சொன்னாங்கனு அடையாறுல போய் ட்ரீட்மெண்ட் எடுத்தாங்க. அது ஆச்சு ஒரு வருஷம். உங்கட்ட பேசுனப்ப மூணாவது சிட்டிங்க் போய் பாத்துட்டு பரவால குணமாயிட்டே வராருனு மாத்திரை கூட குறைச்சாங்க சார். ஒரு வாரத்துல அவருக்குத் தீராத தலைவலி ஒரு நாள் பாத்தாங்க இரண்டு நாள் பாத்தாங்க. இங்க பக்கத்துல ஒரு டாக்டருட்ட கேட்டதுக்கு ஸ்கேன் எடுக்கனும்னு சொன்னாங்க. எடுத்துப் பார்த்ததுல நீங்க அடையாறுக்கே போய் அந்த ஆஸ்பத்திரில போய் பாக்கனும்னு சொல்லிட்டாங்க சார்.
இப்ப அவங்க அங்க தான் இருக்காங்க சார். அவர் கொஞ்சம் பயப்புடுறாப்புடி. ஒரு இடத்துல வந்த கேன்சர் இன்னொரு இடத்துல பரவுமா சார். அந்தப் பையனுக்கு கல்யாணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கு. அதை நினைச்சே அவன் பயப்படுறான்.

(ப்ரவீனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.)

இல்ல சார். கேன்சர் பரவுமானு கேட்டா என்ன சொல்றது. நோயோடு தாக்குதல் எப்படி எப்படிலாம் இருக்கும்னு யாருக்கு சார் தெரியும். ஒருத்தர்ட்ட இருந்து ஒருத்தர் பரவுறதில்லை. ஆனா ஒரே உடம்புக்குள்ள பரவும். அதற்கான சிகிச்சை முறைகள் நிறைய வந்திருக்கு. ஒரே விசயம் தான் சார். நோயோட வேகத்தையும் மருத்துவமுறையோட வேகத்தையும் வைத்துத்தான் எதையும் சொல்ல முடியும். இன்னைக்கு அங்க போயிருக்காங்கள...முதல்ல செக் பண்ணட்டும். அது கேன்சரா இருக்காதுனு நம்பச்சொல்லுங்க சார்...

சரிங்க ப்ரவீன் சார்...உங்க வேலைய கெடுக்க விரும்பல. நம்ம அப்படியே நம்புவோம் சார்...

அலைபேசி அழைப்பு 3

இரண்டு நாட்கள் கழித்து

ஹலோ...
வணக்கம் பழனி சார். நல்லாருக்கீங்களா. 
அந்த பேஷண்ட் சாரி உங்க ரிலேட்டிவ் நல்லாருக்காங்களா....அன்னைக்கு ஸ்கேன் எடுத்தாங்களா..

வணக்கம் ப்ரவீன் சார். . அன்னைக்கு ஸ்கேன் எடுத்துப் பார்த்ததுல மூளைல புதுசா ஒரு கட்டி வந்திருக்கு. அது கேன்சர் தான்னு சொல்லிருக்காங்க. கன்ஃபர்மே பண்ணிட்டாங்க. இன்னைக்கு அவங்க காரைக்குடி கிளம்பிட்டாங்க. இப்ப ட்ரீட்மெண்ட்க்காக அங்க இருந்து வரவேண்டாம். அங்கேயே மதுரைலயே பாத்துக்கோங்கனு ஒரு இன்சார்ஜ் டாக்டர் சொல்றார். அலையனும்னு. அவ்வளவு வசதி இங்க பாக்க இல்ல சார். மதுரைல நல்ல டாக்டர் யார் யார் இருக்காங்க சார்.

மதுரைல நல்ல டாக்டர் நிறைய பேர் இருக்காங்க. பட் எதுக்கு அவங்க இங்கேயே பாத்துக்கோங்கனு கழட்டி விடனும்னு தெரியலயே..ஒவ்வொரு டாக்டரும் ஒவ்வொரு விதமான சிகிச்சை முறைக்கு ஃபேமஸ். இவருக்கு எந்த விதமான சிகிச்சை முறைனு தெரிஞ்சாத்தான் விசாரிக்கமுடியும். ஒண்ணு செய்யுங்க. என்னோட இமெயில் அனுப்புறேன். அதுக்கு அவங்களோட ரிப்போர்ட்டை அனுப்புங்க. தெரிஞ்ச டாக்டர்ட்ட ஒப்பினியன் வாங்கிட்டு நல்ல டாக்டரை பாத்துரலாம்.

சரிங்க சார். அனுப்புறேன். ஆனா சார் இன்னொரு டாக்டர்னா சிகிச்சையை முதலில் இருந்து ஆரம்பிக்கனுமா சார்...

இருக்கலாம். ஏன்

இல்ல ஏற்கனவே ஹீமோதெரபி பண்ணிருக்காங்க. அதுல அவருக்கு முடிலாம் கொட்ட ஆரம்பிச்சிருச்சு. ஏதோ தோல் அலர்ஜி லாம் வந்திருக்கு. இவ்வளவு பண்ணியும் மறுபடியும் வருது சார். ஹீமோதெரபி பண்ணாம எதுவும் பண்ண முடியாதா சார். அதிலயும் பெட் ஸ்கேன்னு கூப்டுபோய் நரம்புல ஊசி போட்டு படுக்கச்சொல்றாங்க. அந்த மருந்து உடம்புக்குள ஏறி ஊறி ஊறி போக அரைமணி நேரம் கழிச்சு ஸ்கேன் எடுத்து கட்டி எங்கலாம் இருக்குனு பாக்குறாங்க. மூணு மணி நேரம் ஆயிருது. 
உடம்புல சூடு உண்டாகி வெறுமனே படுத்துக்கிட அசையாதனு சொல்றாங்க.
இதுலாம் வேதனை சார். டிஜிட்டல் ன்றாங்க. மருத்துவத்துறைல முன்னேற்றம்ன்றாங்க. இந்த வலி இல்லாம எதாவது டாக்டர் ட்ரீட்மெண்ட் தருவாங்களா...

சார் இதுலாம் டாக்டர்ட்ட தான் கேக்கனும். அவங்க ரிப்போர்ட்டை அனுப்பச்சொல்லுங்க. கேட்டுப்பாக்கலாம்.

அலைபேசி அழைப்பு 4

நான்கு நாட்கள் கழித்து.

சார்..மதுரைல .......நாங்களே ஒரு டாக்டர பாக்க ஆரம்பிச்சுட்டோம். நேத்து தான் பாத்தோம். அவர் எல்லாத்தையும் பார்த்துட்டு மாத்திரை கொடுத்துருக்காரு. அவரால தலைவலி தாங்கமுடியவே இல்லை. டாக்டர்ட்ட  சொன்னோம். நேத்து பரவால. இன்னைக்கு பயங்கர தலைவலி. தலைய தனியா கழட்டி வச்சிரலாம்னு வலிக்குதாம். டாக்டருக்கு ஃபோன் பண்ணி இன்டர்காம்ல கேட்டா அப்படித்தான் வலிக்கும். மாத்திரை போட்டு தூங்குங்க னு சொல்றார். நீங்க எதாவது மாத்திரை இருந்தா சொல்றீங்களா சார்.

பழனி சார் ...டாக்டரே அந்த வலி அப்படித்தான் இருக்கும்னு சொல்றார். அந்த வலியோடேயே அந்த வகை நோயாளிகளோடேயே புழங்குற ஆட்கள் அவங்க. அவங்களூக்குத் தெரியாதா அந்த வலியோட வேதனைய பத்தி. அதுக்குலாம் சேத்து தான் மாத்திரை தந்திருப்பாங்க. அதையும் மீறி நான் என்ன சார் சொல்லப்போறேன்.

இல்ல...நேத்து நடுராத்திரி அவர் வலி தாங்கமுடியாம உட்காரவும் மூடியாம படுக்கவும் முடியாம தலைய தரைக்கு முட்டுகொடுத்து அழுத்தி படுத்து பாத்தாராம். ரெண்டு கையால தலைய பக்கவாட்டுல அழுத்தி புடிச்சு அமுக்கிட்டே இருந்தாராம். ஒருகட்டத்துல வலி தாங்காம  நடு ரோட்டுக்கு வந்து நிண்டுக்கிட்டு என் வலிய போக்கு இல்லாட்டி விஷம் வச்சு கொண்டுருனு சொன்னாராம். அவ்வளவு வலியாம். இப்ப மருத்துவமனைக்கு மறுபடியும் வந்து ஏதோ ஊசி போட்டுருக்காங்க போல. இப்ப பரவாலன்றார். ஆனா போட்ட ஊசி ஆறு மணி நேரத்துக்குத்தான சார்.... அப்புறம் வலி வரும் தான...


பழனி சார்..போதும் நீங்க சொல்றதே எனக்கு வலியா இருக்கு. அந்த ஆளோட வலி என்னனு தெரியுது. நீங்க அனுப்புன ரிப்போர்ட்டை எனக்குத் தெரிந்த டாக்டர்ட்ட கேட்டேன். தைரியமா இருக்கச்சொல்லுங்கனார். யாரைனு தெரியுமா..அவங்க மனைவிய சொந்தக்காரங்கள...

தெரியும் சார். டாக்டர்லாம் குறிப்பாத்தான் சொல்வாங்க. சீக்கிரம் செத்துட்டா தேவல தான் சார்.

சார் இப்படி பேசாதீங்க. நாளைக்கு காரைக்குடி வேலை விசயமா வரேன் உங்களை ப் பார்க்கலாம். யார் யாருக்கோ பேசப்போகி நம்ம அடிக்கடி பேசி நண்பர்களாகிட்டோம். நாளைக்கு பாக்கலாமா சார்..

தாராளமா வாங்க ப்ரவீன் சார்..காரைக்குடி டிசோட்டா பழைய பேக்கரிக்கு பக்கத்துக் கட்டிடம் தான் எங்க வீடு. வீட்டுக்கு வாங்க ...

மறுநாள் காரைக்குடி டிசோட்டா பழைய பேக்கரியின் பக்கத்துக் கட்டிடத்தை ப்ரவீன் அடையும்பொழுது அப்பொழுதுதான் அந்த வீட்டில் யாரோ இறந்து விட்டதாக வெளியில் கொட்டகை போட்டுக்கொண்டிருந்தார்கள்.
வீட்டு வாசலில் பழனிச்சாமி என்று பெயரிட்டு முடிகளை இழந்த உருவத்துடன் நாற்பது வயது தக்க ஆண்  புகைப்படத்துடன் ஒரு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....