எங்கே இருக்கிறீர்கள் பாலு...

எங்கே இருக்கிறீர்கள்
பாலு..

நெடுநாட்களாக
நீங்கள் எங்களுடன் தான்
இருந்திருக்கிறீர்கள் என்பதும்
நீங்கள் இனியில்லை
எனும்போதுதான்
தெரிகிறது.

பெரும்வாதையும்
நெடிய கோடையும்
சூழ்ந்திருந்த ஒரு
தருணத்தில் தான்
'இளவேனில் உன் வாசல்
வந்தாடும்' என்று
பாடியிருந்தீர்கள் பாலு..

கண்களை மூடி
நின்ற 
அத்தருணங்களிலெல்லாம்
ஏதோ ஒரு காற்று
நெற்றி தழுவி
போனதாயிருந்தது..
உங்கள் மூச்சுக்காற்றிற்குத்
தன்னை
அடையாளப்படுத்திக்கொள்ளாத
உங்கள் பாங்கு பாலு..

யாரிடமோ
யாரோ 
இறைஞ்சுகிறார்கள்..
அழுதுவிடக் கூட
அவர்களுக்கு
ஒரு குரல் 
தேவைப்பட்டது...
உங்கள் குரலில்
வேண்டுவதெல்லாம்
கிடைப்பதாக
நம்புகிறார்கள் பாலு .

'நானும் கம்பன் தான்
கொஞ்சும்போது...'என
எவனோ ஒருவன்
எவளோ ஒருத்தியைக்
கொஞ்ச உங்கள்
குரலைக் கொஞ்சம்
கை மாற்றாய் கேட்கிறான்..

மெழுகைத் 
தீயேற்றாமல்
உருக்குகிறது 
பாலு
அந்தக் குரல்..

'இதயமே..இதயமே'
என 
ஒருவனுக்குச் 
சாய 
உங்கள் குரல் தான்
இருக்கிறது பாலு...

நீங்கள் காற்று..

எப்பொழுதும் ஞாபகம்
வைத்துக்கொள்ளும்
மழை...

கைகளில் தூக்கிய
முதல் குழந்தையின்
வெம்மை பாலு..

முதல் முத்தம்
உங்கள் குரல்..

பல யுகங்களுக்குப்
பிறகும்
நினைவில் 
வந்துபோகும்
ப்ரியமானவர்களின்
முகம் -
உங்கள் குரல்...

இங்கு தான் 
பாலு 
இருக்கப்போகிறீர்கள்..
ஒரு மூங்கிலுக்குள்
புல்லாங்குழலாக..
ஏதோ ஒரு தாயின்
தாலாட்டாக..
அழுபவனைத்
தேற்றிக்கொண்டு..
விழுந்தவனுக்குக்
கைகளைக் கொடுத்துக்கொண்டு....

இருந்தபோதும்
இன்னும் கொஞ்சம்
இருந்திருக்கலாமே
பாலு.....

பழனிக்குமார்
மதுரை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....