பேராசிரிய. கு. ஞானசம்பந்தன் உரையிலிருந்து எழுதப்பட்டது.

உறவுகளில் உயர்ந்த உறவு அம்மா!

அம்மா என்ற வார்த்தைக்கு இணையான வார்த்தை இல்லை.

அம்மா என்ற வார்த்தையில் உடல், உயிர் என எல்லாம் அடங்கும்.

எடுத்துக்காட்டாக

" அம்மா"  என்ற வார்த்தையில்
 
'அ'  என்பது உயிர் எழுத்து
'ம்'   என்பது மெய் எழுத்து
'மா' என்பது  'ம்+ஆ'  உயிரும் மெய்யும் சேர்ந்த உயிர்மெய் எழுத்து.

அம்மா என்பவள் நமக்கு உயிரைத் தருவதால் உயிரெழுத்து.
நம் மெய்யாய் இருப்பதால் மெய் எழுத்து.
இவ்வாறு உயிரும் உடம்புமாய் பாலூட்டி வளர்ப்பதால் உயிர்மெய் எழுத்து.


உலகத்தை வெறுக்கும்  துறவிகள் கூட அம்மா மீது பாசம் கொண்டிருந்தனர்.

எடுத்துக்காட்டாக

பட்டினத்தார் மற்றும் ஆதிசங்கரரையும் சொல்லலாம்.

ஆதிசங்கரர் ஆன்மீகப் பாதையில் ஒரு துறவியாக எங்கெங்குச் சென்றாலும், அம்மா மரணமடைந்ததும் தான் பிறந்த ஊரான 'காலடி' க்கு வந்தார்.

அதே போல் பட்டினத்தாரும் அவருடைய தாய் இறந்ததைக் கேள்விபட்டதும், தன் சொந்த ஊருக்கு விரைகிறார்.
அங்கு அவருடைய அம்மாவை விறகுகளை அடுக்கி எரிக்கச் செய்கிறார்கள். ஆனால் பட்டினத்தாரோ - 'என் அம்மாவின் உடம்பு மிகவும் மெல்லிய உடம்பு- பச்சை உடம்பு அதை எரிக்க விறகு தேவையில்லை - வாழைத்தண்டு போதும் என வாழைத்தண்டுகளை அடுக்கி

   ' யானுமிட்டத் தீ மூழ்கு மூழ்கவே ' என பாடல் பாடுகிறார். வாழைத்தண்டு தீப்பிடித்து எரிந்ததாக வரலாறு கூறுகிறது.

இது போல் முற்றுந்துறந்தத் துறவிகள் கூட அம்மாவின் மீது பாசம் கொண்டிருந்தனர்.


குழந்தைகளை வளர்ப்பதில் தாய் முக்கிய பங்கு வகிக்கிறாள்.

" நாளெல்லாம் பசி பொறுத்துக் கொள்வாள்
 ஒரு நாளிகை கூட நம் பசி பொறுக்கமாட்டாள்

அன்னையின்றி ஒரு தெய்வம் உண்டோ..." என்ற பாடல் அன்னையின் பெருமை சொல்கிறது.



குழந்தைகளுக்கு அறிவைச் சொல்லித் தரும் முதல் பள்ளிக்கூடம் அம்மா தான்.
அப்பாவை, அக்காளை, அண்ணனை, தம்பியை என எல்லாவற்றையும் சொல்லித்தருபவள் அம்மா தான்.

   " அவள் வாத்திச்சி
     அறைவீடு கழகம்"       என பாரதிதாசன் கூட அம்மாவைப் பற்றிப் பாடுகிறார்.

ஒரு மனிதனின் ரசனையைச் சொல்லித்தருபவள் அம்மா தான். பிற்காலத்தில் அந்த ரசனை தான் அம்மனிதனின் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது.

 உணவு, உறவு, உணர்வு என மூன்றையும் உண்டாக்கித் தருபவள் அன்னை தான்.




முந்தைய காலத்துத் தாய்மார்களைக் காட்டிலும் இப்பொழுது இருக்கும் தாய்மார்கள் முன்னோடிகளாய் இருக்கிறார்கள்.
இப்பொழுது இருக்கும் தாய்மார்கள் மருத்துவர்களாக, ஆசிரியைகளாக, அதிகாரிகளாக இருப்பதால் அவர்கள் தங்கள் குழந்தைகளை எளிதாக வழி நடத்துகிறார்கள்.

இரண்டு, மூன்று மொழி தெரிந்தவர்களாக தாய்மார்கள் விளங்குவதால், அவர்கள் குழந்தைகளின் "தாய்மொழி அறிவு" விரிவடைகிறது.



இப்பொழுதெல்லாம் பன்னிரெண்டு வயதிற்குப் பிறகு குழந்தைகளுக்குத் தாய் ஒரு நெருங்கிய தோழியாகவே இருக்கிறாள். இது இந்த நூற்றாண்டின் கொடை என்றே கூறலாம்.


அம்மாவிற்கு வயதான காலத்தில் வரும்  "மெனோபாஸ் டென்ஸன் " பிரச்சினைகளும் குழந்தைகளால் மாறிவிடுகின்றது.
குழந்தைகளெல்லாம் ஒன்று சேர்ந்து அன்னைகளுக்கு அழகிப் போட்டி வைக்கிறார்கள்.

  " திரிஷா வும் அழகாக இருக்கிறார்
     திரிஷாவின் அம்மாவும் அழகாக இருக்கிறார் "

குழந்தைகள் கற்றுக்கொடுக்க ஆரம்பிக்கும்போது அம்மா ஒரு மாணவியாக மாறிவிடுகின்றாள்.



இவ்வாறு அம்மா பெற்றுத் தருபவளாக, கற்றுத் தருபவளாக, உலகத்தை நமக்கு அறிமுகப்படுத்துப்வளாக, உடனிருந்து காக்கும் செவிலியாக, அவளுடைய அனுபவத்தால் எதிர்காலத்தைத் திட்டமிடுபவளாகவும் இருக்கிறாள்.



இப்பொழுதெல்லாம் " தந்தை வழி சமூகம்" என்பது போய் "தாய்வழி சமூகம் " என மாறியிருக்கிறது.

 நித்யஸ்ரீ மகாதேவன் என்ற பாடகி  மறைந்த டி.கே. பட்டம்மாள் வம்சாவளி எனச் சொல்லும்பொழுது ஒரு சமூக அந்தஸ்து கூடுகிறது.

சில வீடுகளில் தந்தைமார்கள் பகுத்தறிவு வாதிகளாய் இருந்தாலும் தாய்மார்கள் தான் ஆன்மீகவாதிகளாய் குழந்தைகளுக்கு ஆன்மீக அறிவைப் போதிக்கிறார்கள்.

கல்கத்தாவில் ஒரு பள்ளிக்கூடத்தில் ஓர் ஆசிரியர் தன் மாணவர்களை நீங்கள் எதிர்காலத்தில் என்னவாகப் போகிறீர்கள் என கேட்கிறார்.
எல்லா மாணவர்களும் ஆசிரியராக, காவலராக, மருத்துவராக எனச் சொல்ல , ஒரே ஒரு மாணவன் மட்டும் ' நான் குதிரைவண்டிக்காரன் ஆவேன் " என்கிறான்.

ஆசிரியர் திடுக்கிட்டு, அம்மாணவனின் தாயை அழைத்து இது பற்றிச் சொல்லி அறிவுரை வழங்கச் சொல்கிறார்.

அந்தத் தாயும் தன் மகனை அழைத்து ஏன் குதிரைவண்டிக்காரன் ஆவாய் எனக் கேட்கிறாள்.
அதற்கு அந்தக் குழந்தை - குதிரை வண்டி ஓட்டுவது பிடித்திருக்கிறது எனச் சொல்கிறது.

உடனே அந்த தாய் தன் குழந்தையைத் திட்டாமல் தன் பூஜை அறைக்கு அழைத்துச் செல்கிறாள்.அங்கு பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜீனருக்குத் தேரோட்டியாக இருக்கும் புகைப்படத்தைக் காண்பித்து ' க்ருஷ்ணரும் தேரோட்டி தான், நீயும் கிருஷ்ணர் மாதிரி ஆவாயா ?" எனத் தாய் கேட்கிறாள்.
அதற்கு அந்தக் குழந்தையும் சரி எனச் சொல்கிறது. அப்படி ஒரு தாயால் வழி நடத்தப்பட்ட அந்தக் குழந்தை தான் 'சுவாமி விவேகானந்தர்'


  ஒரு தாய் தான் மகாத்மா காந்தியைத் தந்திருக்கிறாள்.
  ஒரு தாய் தான் வீர சிவாஜியை உருவாக்கியிருக்கிறாள்.
  ஒரு தாய் தான் சுவாமி விவேகானந்தரையும் வழி நடத்தியிருக்கிறாள்.

"பொறுமையில் சிறந்த பூமியுண்டு
 பூமியை மிஞ்சிய தாய் மனம் உண்டு
 தாயிற் சிறந்த கோயில் இல்லை"


 " நீயே எல்லாம் தாயே...."


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....