கபாலி

எல்லாரும் பார்த்திருப்பீங்க.
இல்லாட்டி விமர்சனம்னு படிச்சிருப்பீங்க. என் கைக்கு கபாலி ஃபீவர் இன்னும் குறையவில்லை.

இது என்னோட பார்வை.
பெரிய மார்க்கெட்டிங் வெற்றிகள் எல்லாமே சாதாரண ஒரு ஐடியாலத்தான் அமையும். பெரிய அளவுல மூளைய சிந்திக்க விடாம சர்வச் சாதாரணமாக அமையும் சில கருவிகள் தான் வெற்றி.
ஒரு கதை கிடைச்சிருக்கு. அந்தக் கதைக்குச் சரியான பாத்திரம் அமைத்துவிட்டால் வெற்றி. 
ரஞ்சித்துக்கு ரஜினி.
ரஜினிக்கு என்ன பண்ணலாம்
ரஜினிய வச்சு என்ன பண்ணலாம் இது தான் அடிப்படை. ரஞ்சித் எடுத்தது இரண்டாம் வகை.
சதுரங்க வேட்டை வசனம் பில்லா இரண்டாவது பாகத்துல வர்ற கூர்மையான வசனம்
இது போன்ற வசனங்களை விட இப்பொழுது பேசப்படும் வசனத்தின் வீச்சு அதிகம் என்றால் அதற்கு ரஜினி மட்டும் தான் காரணம். 
ரஞ்சித்தின் சாதி வெளியே தெரியாமல் இருந்திருந்தாலும் ரஞ்சித் பேசப்பட்டிருப்பார். வசனங்கள் வந்து அடைந்திருக்கும்.
 ரஞ்சித்தைப் பொறுத்தவரை ரஜினியை பயன்படுத்திவிட்டார். சாதிக் கூண்டை நாம் ரஞ்சித்திற்கு வைப்பது அழகல்ல. படைப்புகள் சாதிகளை மீறி ஒளிருபவை. கபாலி அப்படித்தான்.
ஒரு புதிய இயக்குனராக இருந்திருந்தால் அவரின் சாதியைக் கண்டுபிடித்து அதற்கு முகம் காண்பித்து பிறகு கொண்டாடப்படுதலும் புறக்கணிக்கப்படுதலும் வேண்டாத வேலை. ஒரு படைப்பாளிக்குச் சாதி இல்லை. சாதிகளைத் தூக்கி எறிந்து விட்டு வெறும் படத்தைப் பார்த்தாலும் அது படமாகவே இருக்க வேண்டும். கபாலி அப்படித்தான். 

தாணு. விளம்பரத்திற்கே விளம்பரம். படத்திற்கு ரஜினியே பெரிய விளம்பரம். இது அதற்கும் மேல் . 
ஒருவர் காரில் கபாலி ரஜினியை வரைந்துள்ளார். அவர் அப்படிச்செய்து அவர் அறியாமலேயே விளம்பரத்தூதர் ஆகிறார். Ownership quality ஆக விளம்பரத்தைப் - பார்ப்பவர்கள் எடுப்பதால் அந்த விளம்பரம் வெற்றி பெறுகிறது. தியேட்டர் கூட்டத்தைப் பார்த்துவிட்டு என் தந்தை கூறினார் மதுரையில் ஆசியாவிலேயே பெரிய தியேட்டர் தங்கம் தியேட்டரில் எம்ஜிஆரின் படத்திற்கு நின்ற கூட்டத்தைவிடவா இது என்று. சிவகார்த்திகேயன் விஜய் சேதுபதியின் அறுபது வயதுகளில் ஏரோப்ளேன்ல அந்த காலத்துல ரஜினிக்கு விளம்பரம் வந்ததுனு ஒரு முதியவர் கூட்டம் சொல்லும். தாணு அதில் வெற்றி பெறுகிறார்.

ரஜினி. -ஒருவருக்கு மார்க்கெட்டிங்கில் தேவை அப்டேட். இன்றைய சந்தைக்கு ஏற்றவாறு சரக்கைக் கொண்டுவருவது. அப்பொழுது பெரிய மாற்றத்திற்கு நாம் தயாராக வேண்டும். ஐம்பதைத் தாண்டும் மனிதமூளை எதையும் நம்பாது. மாற்றத்தை விரும்பாது. ஆனால் மாற்றமும் மாறுவதும் நிகழ நிகழத்தான் சரித்திரங்கள் நிகழும். வெறும் இரண்டு படம் எடுத்தவனுடன் கைகோர்க்கும் ரஜினி ஒரு ட்ரெண்ட்செட் செய்கிறார்.மாறுவதற்குத் தயாராகிறார்.  சரக்கிருந்தால் வெற்றி கிட்டும் என்ற நம்பிக்கையை பரப்ப காரணமாகிறார்.
ஜெயிலில் இருந்து வெளியே வரும் கபாலி பழைய ரஜினியாக இருந்தால் நேரடியான சண்டையில் இறங்கியிருப்பார். காரை அவரே ஓட்டி கதவை உடைத்து உள்ளே சென்றிருப்பார். கபாலியின் ரஜினி சம்பத் கதாபாத்திரத்திடம் ஏதோ சொல்லி அவர் கதவை உடைத்து உள்ளே செல்ல பிறகு கபாலி நுழைவது மாற்றம்.
ஒவ்வொரு பறவையும் ஒரு விதையைச் சுமந்து செல்கிறது. அந்த விதையில் ஒரு காடு இருக்கிறது. அப்படித்தான் உங்களைப் பார்க்கிறோம் என்ற வசனம் கபாலியின் முன்னிலையில் அவரது உதவியாளர் பேசுவது. மதுரையிலிருந்து 225 ரூபாய்க்குச் சென்னை செல்ல முன்பதிவில் ஜன்னலோரச் சீட்டு மேல் படுக்கை கீழ்படுக்கை என யோசிப்பவன் நான். ரஜினியின் இடத்தில் நின்றுகொண்டு வீச்சு அதிகமான வசனத்தை இன்னொருத்தருக்குத் தாரை வார்ப்பது இயலாத ஒன்று. அப்படி யோசிப்பதில் தான் ரஜினியின் வெற்றி.
மேலே செல்லச் செல்ல சிலவற்றை இழக்க வேண்டும். ரஜினியின் உயரத்திற்கு ரஜினி அந்த அலைவரிசையைக் கெட்டியாகப் பிடித்துள்ளார்.
சில இடறல்கள் கபாலியில் இருக்கத்தான் செய்கின்றன்.
உலகம் ஒருவனுக்கா என்ற பாடலின் ஒரு வரி
 இதற்குப் பெயர்தான் தலைவர் அதிரடி.
 இந்த வரியை பாடலாசிரியரும் இசையமைப்பாளரும் கொண்டுவந்ததே ரஜினியைப் பார்க்க பார்க்க இருக்கையில் அமராமல் ஆர்ப்பரிக்கும் ரசிகனுக்காக. அந்தக் காட்சிக்காக ரஞ்சித் ரஜினியை பயன்படுத்தவில்லை. வெறுமனே நடனக்காரர்களைக் காட்டி ஏமாற்றிவிட்டார். க்ளைமேக்ஸில் மகிழ்ச்சி உச்சரிக்கும் ரஜினியின் முகத்தைக் காட்டாதது ரசிகனுக்கு வருத்தமாகவே இருக்கும்.
தாணு எதை விளம்பரப்படுத்தினால் கூட்டம் வரும் என அனுமானித்து எதிர்பார்ப்புகளை எதிர்மறையாகக் கிளப்பிவிட்டார்.

இணையத்தில் வெளிவரும் விமர்சனங்கள் நடுநிலைமையானவை இல்லை. பிரபலமாயிருப்பதற்கு எதிராகக் குரல் கொடுத்தால் கவனம் பெறுவோம் எனச் செய்தால் அது ஒரு மனவியாதி.
ரஜினியைக் குறை சொல்ல வேண்டும் என்றால். கபாலி கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை. சரியாக நடிக்க வில்லை. நடிக்கத் தெரியவில்லை. இப்படிச் சொன்னால் பரவாயில்லை.
அவர் மீது குற்றச்சாட்டாக விமர்சனம் என்ற போர்வையில் வந்தது வெள்ளம் வந்த பொழுது ரஜினி கூழ் ஊற்றவில்லை என்பது போன்றனவே. வெறும் சென்னை மாவட்ட படித்த மன அழுத்த இணைய வியாதிக்காரர்களின் கூற்றாகவே அதைப் பார்க்கவேண்டுமே தவிர விமர்சனமாக அல்ல. 
சம்பந்தமில்லாதக் கருத்துகள் படத்தின் விமர்சனமாக ஏற்றுக்கொள்ளக்கூடாது.
கபாலி சமூகத்திற்கு ஏதாவது ஒன்றைச் சொல்ல வேண்டும் எனத் துடித்த ஒரு இயக்குனரின் முயற்சி.
மொத்தமாக கபாலி மேலாண்மையில் பல பாடங்களைக் கற்றுக்கொண்டும் கற்பித்துக் கொண்டும் உள்ளது. ஒரு வெற்றி என்பது பதிலீடு அற்றதாக இருக்க வேண்டும். ரஜினியைத் தவிர கபாலியின் கோர்ட்சூட்டுக்குள் இன்னொரு நடிகரால் நுழைந்து ஒளிரமுடியாது. அந்த வகையில் ரஜினியின் தோளில் கபாலி வெற்றி. இதே கதையில் இன்னொருவரைப் பொருத்திப்பார்த்தால் தான் தெரியும் கபாலியின் பராக்கிரமம்.
பத்து வருடங்களுக்குப் பின் ரஜினியின் பில்லா மாப்பிள்ளை போல இன்னொருவரை வைத்து முயற்சித்தால் கைகளைச் சுடும் நெருப்புடா...இந்த கபாலி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....