இது தம்மு...இது ரம்மு....

அது கல்லூரி பருவம்.
இளங்கலை மூன்றாம் ஆண்டு.
என்.எஸ்.எஸ் மூலமா ஒரு கேம்ப்.
நடந்த இடம் கேரளாவில் காலடி சம்ஸ்க்ருத பல்கலைக்கழகம்.
தமிழ்நாடு , கேரளா, கர்நாடகா, ஆந்திரா னு ஏராளமான பல்கலைக்கழகங்கள் கலந்துகொண்ட நிகழ்வு.
தமிழ்நாட்டில் இருந்து பாரதியார் பாரதிதாசன் பெரியார் மனோன்மணீயம், அப்புறம் காமராசர் பலகலைக்கழகங்கள்னு மாணவ மாணவிகள் கலந்துகொண்ட ஒரு கலர் கலர் நிகழ்வு.

நம்ம காமராசர் பலகலைக்கழகத்திலிருந்து கம்பம் மகேஷ் பாளையம் வீணா சிவகாசி சந்திரு, மதுரைல இருந்து கேசவன், கார்த்திக், அப்புறம் தான் முக்கிய்மான என்ட்ட் ரி  நானு.

கேம்ப் என்ன னு சொன்னாத்தான் நான் எழுதப்போற புறணி உங்களுக்குப் புரியும். ஜனவரி 26 குடியரசு  விழாவில் குடியரசுத் தலைவர் முன்னாடி டில்லியில் பரே டில் கலந்துக்க நடக்குற செலக்ஷன் கேம்ப்.;  இது தெரியாம இரண்டு மூணு பக்கிக சமூக சேவைனு ஜாலியா வந்திருக்குதுக...

மாலை 4 மணிக்கு பல்கலைக்கழகம் ரீச் ஆனதும் பல பட்டாம்பூச்சிகள் பாக்குற உணர்வு. வெங்கட் பிரபு  படத்துல வர்ற பிரேம்ஜி கேரக்டர் மாதிரி நம்ம நண்பன் ஒருத்தன வச்சுக்கிட்டா நல்லாருக்கும்ல....கிடைச்சான் சிவகாசி சந்திரு.
ஒண்ணா ட்ராவல் பண்ணதுனால எல்லாரும் க்ளோஸ் ஆயிட்டோம்.
 குறிப்பா என் கண்ணுல கம்பம் மகேசையும் பாளையம் வீணாவையும் கோர்த்துதான் பார்க்கத்தோணியது.
 பக்கத்து பக்கத்து ஊர்ன்றனால பேசிக்க்ட்டே இருந்தானுக....
நான் எதுவும் பேசிக்கல.
 நிகழ்ச்சி நிரல் இது தான். காலை  முழுக்க பரேட். மாலை முழுக்க கலைநிகழ்ச்சிகள். ரெண்டுக்கும் மார்க் உண்டு.
கலை நிகழ்ச்சிகளில் எல்லோரும் கண்டிப்பா கலந்துக்கணும். (அதிகப்பட்சமா நான் கலந்துக்கிறதே ஆடியன்ஸா கை தட்டுறது தான்..) அதுனால எனக்கு கொஞ்சம் கிலி தான்.

நாங்களா ஒரு குழுவா அமைஞ்சோம். அதுல நான், சந்துரு, வீணா, கேசவன், சேலத்துல இருந்து வந்த மாணவி சுஜாதா,  உமா, இது ஒரு டீம்.

மைதானத்துல ரவுண்ட் கட்டி எல்லாக் குழுக்களும் உக்கார்ந்தோம். ஒவ்வொரு நாளுக்கும் ஒரு ப்ளான். ஒரு நாள் டான்ஸ்.  ஒரு நாள் பாட்டு. இரண்டு நாள் நம்ம இஷ்டம்.
கையில அந்த ப்ளான வச்சுக்கிட்டு எங்க குழுவை ஆக்கிரமித்தது சுஜாதாவோட ஆளுமை.

 தலைமைப்பொறுப்பை அவளே எடுத்துக்கிட்டாள்.

சேலத்தில் படித்துக்கொண்டே அங்க இருந்த டி.வி சேனல் சி.டி.என் னில் தொகுப்பாளினியாம். அவளது ஆளுமை எல்லோரையும் அபகரித்தது.

ஒரு நாள் நாடகம் போடலாம் என்றாள்.
அவளைத்தவிர குழுவில் இருந்த அத்தனைபேரும் தலையை தலையை ஆட்டினோம்.
நானும் தான்.

கேசவன் மட்டும் அவள் டோலக்கு ஆடுறதைப் பார்த்துட்டு தலையை தலையை ஆட்டுனான். அவன் பக்கத்துல இருந்து லலல்லா...லல்ல..லல்லலா...னு ஒரு தீம் ம்யூசிக் வர ஆரம்பிச்சது.

கூட்டத்துல எவனும் எந்த நாடகத்தையும் போடுங்க...நாங்க எங்க வேலைய பாக்குறோம்னு வீணாவும் மகேஷும் இருந்தாங்க...




சரி
நாடகத்துக்கு வருவோம்.
நாடகத்துக் கதையைச் சொன்னாள் சுஜி..( அட ஆமாங்க..சுஜாதா தன்னை எல்லோரும் சுஜி னு தான் கூப்பிடனும் னு சொல்லிட்டா...சுஜி...னு மனசுக்குள் சொல்லிப் பார்த்தேன்..வாவ்..ச்ச்சுஜி...ச்ச்ச்சுஜ்ஜி...னு கேசவனோட மைண்ட் வாய்ஸ்லாம் கேட்டுச்சு...)
அந்த நாடகத்தை அவளது கல்லூரியில் போட்டிருக்காளாம்.

நாடகத்திற்கு டைரக்டர் அவளாகத்தான் இருப்பாள் எனக்குத் தோன்றியது.  மைதானத்துல எங்கேயோ எரிஞ்ச சோடியம் லைட் அப்புறம் பாதரச லைட் வெளிச்சத்துல
சுஜி கதையைச் சொன்னாள்.
ஏனோதானோனு கேட்டேன். என்னைப் பொறுத்தவரை தலைமைத்துவப்பண்புலாம் இல்லை. பத்து பேர் இருந்தா பத்தாவது ஆளா இருப்பேன். இதுலயும் கிரிக்கெட் விளையாட்டுல தண்ணீர் எடுத்துட்டு வர ஆள் மாதிரி இருந்துக்கலாம் னு வட்டமா உட்கார்ந்து இருந்ததுல கொஞ்சம் பின்னாடி தள்ளித்தான் இருந்தேன்;
சுஜி கதையைச் சொல்ல சொல்ல அவளது ஆர்வம் தெரிந்தது.
அவ டைரக்டர் மட்டும் இல்ல.. வசனகர்த்தாவும் அவ தான் தெரிஞ்சது.
கதை இது தான்.

ஒரு ஊர்ல ஒரு  அப்பா.  அம்மா. அவன்களுக்கு ஒரு பையன். பணக்காரக் குடும்பம்.
அப்பா தொழிலதிபர். பிஸி
அம்மா லேடிஸ்கிளப் னு பிஸி.
பையன கவனிக்கல.
படிக்கிறான். கோல்ட்மெடல். அத பெற்றோர் பாராட்டல.
விரக்தில தம் அடிக்கிறான். தண்ணீ அடிக்கிறான்.
நோயாளி ஆகிறான்.
டாக்டர் ட்ட கூப்பிட்டு போறாங்க.
டாக்டர் தம் அடிச்சா என்ன என்ன வரும். தண்ணீ அடிச்சா என்ன என்ன ஆகும்னு சொல்றார். இல்லை பாடம் நடத்துறார்.
டாக்டரா நடிக்கப்போறது சுஜி. அந்த வசனத்தப் புல்லா ஒப்பிச்சா. அப்ப காமிக்க சில புகைப்படங்களையும் பிரேம் போட்டு கொண்டு வந்திருக்காளாம்.
ஓஹோனானா....சுஜி டைரக்டர் வசனகர்த்தா மட்டும் இல்ல புரோடியுசரும்  அவ தானு அப்பத்தான் தெரிஞ்சது. இன்வெஸ்ட்மெண்ட் போட்டு போட்டோலாம் கொண்டு வந்திர்ந்தாள்.

மெல்ல சந்துரு கேட்டான்.
.பாஸ்..கதை மொக்கையா இருக்கே...
நீங்க எதுக்கு பாஸ்  அத பாக்குறீங்க..நம்ம மகேஷையும் வீணாவையும் பாப்போம்..அவிங்களுக்கு முன்னாடி இவிங்க ஒரு நாடகத்த கூட்டுறானுக.....மகேஷுக்கு வாழ்க்க தான்னு நான் சொன்னேன்...

ஒரு கதையைச் சொல்லி முடிச்சுட்டு இதுல டாக்டர் நான்.
வேற யார் யார் லாம் நடிக்கிறீங்க னு சொல்லுங்க னு சுஜி கேட்டா.

நான் அம்மா னு சொல்லிட்டா.உமா.  இருந்தது ஒரே ஒரு பொண்ணு கேரக்டர். எடுத்துக்கிட்டா.

சுஜி-  கேசவன் உயரம் அப்புறம் எடைய பாத்து நீ அப்பாவா நடி னு சொன்னா...
சுஜி சொன்னா அவன் அப்பாவா வே ஆயிர்வான்.. நடிக்கமாட்டானா..ஆயிட்டான்.



டக்குனு என்னைய பார்த்தாள் சுஜி.
பாக்க அப்பாவியா இருக்க...பையனா நடிக்கிறியா ன் கேட்டாள்..

எனக்கு தூக்கிவாரி போட்டது. கொஞ்சம் நல்ல பையனா நடிச்சா நாடகத்துல நடிக்கக் கூப்பிடுறாஙைக...

அதுவும் தம் அடிக்கிற மாதிரி தண்ணி அடிக்கிறமாதிரி... கொஞ்சம் யோசிச்சுப்பார்த்தேன்...எட்டாப்பு படிக்கிறப்ப ரஜினி மாதிரி சிகரெட்ட பிடிக்கிறேனு சாக்பீஸ வாயில போட்டேன். பாத்துட்டு எங்கப்பா சப்புனு ஒரு அறை விட்டார். சாக்பீஸ்ல பாதி உடைஞ்சு கீழ விழுந்தது. இன்னொரு பாதி வாயில நிண்டது. இன்னொரு அறை விட்டார். அந்தப் பாதியும் விழுந்தது. நல்லா கேட்டுக்கங்க மக்கழே...முத அறை எனக்கு. அடுத்த அறை சாக்பீஸுக்கு... 
சுஜி சொன்னதும் வேதம்புதிது சத்யராஜ் மாதிரி கன்னத்த திருப்பிட்டே இருந்தேன்.

என்ன நடிக்கிறீயா...சுஜி கேட்டா
இல்ல நடிப்பு வராது.. 
ஏ பாக்க பழமா நல்லபையனா இருக்க உன்னத்தான் கெடுக்கமுடியும் ...னாள்.
உமா வீணா எல்லாரும் சிரிச்சாங்க..

நான் வேணும்னா பையனா நடிக்கவானு கேசவன் கேட்டான்..
கெடுக்கலாம்ன்றத பயபுள்ள தப்பா புரிஞ்சுட்டான் போல...

சுஜி உனக்கு செட்டாகாதுனு அவன்ட்ட சொல்லிட்டா...
கேசவன் சந்திரு வற்புறுத்த சரி நடிக்கிறேனு ஒத்துக்கிட்டேன்.

ஆனா அவ டைரக்டர்னு அவளாகவே நம்பிட்டு இருந்தா.
சேம்பிள்க்கு நடிச்சுக்காமி னு சிட்டுவேஷன் சொன்னா.
ஸ்டேஜ்ல பாத்துக்கலாம்னு சொன்னேன்.
அவ விடல.

அம்மாட்ட கோல்ட்மெடல் வாங்கிருக்கேன் மம்மி இங்க பாருங்கனு கழுத்த செயின காமிக்கச்சொன்னாள்.
நான் உமாவ பாத்து உக்காந்துக்கிட்டே சட்டை காலர காமிச்சு டயலாக் சொன்னேன். உமா தன்னோட கழுத்துலருந்த செயின அவுத்து இத போடுனாள்..

என்னங்க ஒரு டயலாக்தான் சொன்னேன். அதுக்கே செயின அவுத்து கொடுத்து கௌரவிக்கிறீங்க னேன்...

அப்பத்தான் நான் வாய் னு எல்லாத்துக்கும் தெரிஞ்சது....

கோல்டுமெடல்னு இத காமி னா உமா...
செயின தலை வழியா போட்டுவிட்டா...
சந்துரு என்ட..பாஸ் இப்ப நான் உங்கள பாக்குறேன்..வாழ்க்கதான் பாஸ் .னான். 

நடிச்சுக் காமிச்சேன்... அன்னைக்கு அவ்ளோதான் ரிகர்சல்..
அங்கு இருந்த ஒரு வகுப்பறைல பசங்களுக்குத்  தங்க இடம் கொடுத்தாங்க. 
ஓட்டுவகுப்பறை...
கேசவன் சுஜி பத்தி பேசுனான்.
மகேஷ் வீணா பத்தி...

நானும் சந்திரும் கொஞ்சம் தள்ளி நிண்டு இவைங்கள பத்தி பேசுனோம்.

மூணாவது நாள் தான் எங்க ட்ராமா னு ஷெட்யூல் வந்தது.
அடுத்த நாள் ரிகர்சல் பண்ணோம்.
நாடகத்த நடிச்சே முடிச்சோம். நான் கோல்ட் மெடல் வாங்குனத கவனிக்காத பெற்றோர். அடுத்த சீன் நான் தள்ளாடிட்டே வர சீன். சட்டை பாக்கெட்ல சிகரெட் பாத்து அப்பா அம்மா அழுகுற சீன். ரெண்டுபேரும் டாக்டர்ட கூப்பிட்டு போற சீன். இதுவர...நடிச்சோம்.
அன்னைக்கு ரிகர்சல் முடிஞ்சது.

அன்னைக்கு நடந்தத எங்க ரூம்ல கிண்டல் பண்ணி சிரிச்சோம். எனக்கென்னமோ நாடகம் பிடிக்கல. அடுத்த நாள் சுஜிட்ட சொல்லனும் .

அடுத்த நாள் காலைல பரேட்ல
காலை உணவு வேளைல சுஜி பக்கத்துல நிண்டு மனசுல பட்டத சொன்னேன்.
இடைல ரூம்க்கு போயி ஸ்கிரிப்ட்ட எடுத்துட்டு வந்தா. பசங்களோட நிண்டு பேசிட்டு இருந்தேன். ஸ்கிரிப்ட என்ட கொடுத்து நீ சொன்னத யோசிச்சு மாத்துனு கொடுத்தா...

எல்லாப்பசங்களும் எங்கள பாத்தாங்க.
சந்திரு கேட்டான் என்ன பாஸ்..நீங்க உண்மையிலேயே நாடகத்தப் போடுறீங்க போல.... வாழ்க்க தானா...

நான் சுஜிட்ட சொன்னது இது தான். கர்நாடகா கேரளா ஆந்திரா ஸ்டூடண்ட்ஸ் இருக்கிறப்ப தமிழிலிலேய பேசுனா போரடிக்கும் சுஜி.  அந்த ஆடியன்ஸ அட்ராக்ட் பண்ண ஏதாவது ஸ்கிப்ட்ல சேக்கனும் னேன்.

அவ ஒரு நல்ல லீடர். ஒத்துக்கிட்டா.

நான் சில மாற்றம் பண்ணேன். நாடகம் போடுற அன்னைக்கு மதியம் ரிகர்சல்.
பையன் தானா கெட மாட்டான். ஒரு நண்பன் கெடுக்குறான். அது சந்திரு. அவன இழுத்து உள்ளே போட்டேன். கெட்டுப்போன பசங்கள ஒரு என் எஸ் எஸ் கேம்ப் மாணவி டாக்டர்ட்ட கூப்பிடுப்பொறதா வீணாவையும் இழுத்து ஒட்டு மொத்த டீம்மையும் உள்ள இழுத்தேன்.

ஆடியன்ஸ்க்கு சர்ப்ரைஸ் கொடுக்கனும். அப்பத்தான் நாடகம் ஹிட் அடிக்கும்னு சுஜிய நம்பவச்சேன். இவங்களுக்கேத் தெரியாம நானும் சந்திரும் ஒரு சீன் எக்ஸ்ட் ரா சேத்தோம்.

நாடகம் ஆரம்பம் ஆனது. எங்க பெயர் அறிவிச்சாங்க..

அப்பா கேசவனும், அம்மா உமாவும் ஸ்டேஜ்ல நடிக்க ஆரம்பிச்சாங்க.
நான் ஏறுனேன். டயலாக்குலாம் பேசுனோம்.  ஒட்டு மொத்த ஆடியன்ஸும் அமைதி. தமிழ்நாட்டு ஆடியன்ஸான மாணவர்கள் அடுத்த ரிகர்சலுக்கு வெளிய இருந்தாங்க. இருந்தது. கேரளா ஆந்திரா கர்நாடக மாணவர்கள்.

அடுத்த சீனுக்கு நான் மட்டும் போகனும் சுஜி சொன்னாள். அப்பத்தான் நானும் சந்திருவும் போட்ட பிளான்.
யாரும் எதிர்பாராதவிதமா நாங்க உள்ளே போனோம்..
சந்திரு தான் எனக்கு தம் அடிக்க சொல்லித்தரமாதிரி சீன்.
 2 பேப்பர கட் பண்ணி சுருட்டிக்கிட்டோம். சந்திரு என் கையில அத தந்தான். அது  தடிமனா உண்மையிலேயே சிகரெட் மாதிரி இருந்தது.

அவன் இழுக்கச் சொல்லித்தரனும்.  நான் இழுத்தேன்.
கொஞ்சம் தடுமாறுற மாதிரி இறுமுனேன்.
அப்படித்தான் இருக்கும்....நல்லா இழு...ஒலகமே...பறக்கும் பாரு னு சந்திருக்கு எழுதிக்கொடுத்து இருந்தேன்.
அதச் சொன்னான்.... ஆடியன்ஸ் முகத்துல ஒரு மாற்றம்.
அடுத்து இரண்டு தண்ணிபாட்டில் எடுத்து...ஊத்துனான் சந்திரு.
குடி னான்.
நான் குடிச்சு புர ஏறுற மாதிரி நடிச்சேன்.
ம்ம்ம்ம்..அப்படித்தான் இருக்கும்...குடி...ஒலகமே மிதக்கும் பாரு னான் சந்திரு.
கூட்டத்துல யாரோ கை தட்டுனாங்க...

நான் குடிச்சு..

ஓஓஓ...கிக்கு ஏறுதே..னு பாட்டா படிச்சேன்..
பதிலுக்கு சந்திருவும் பாட்டா பாடுனான். .படையப்பா பாட்டு வந்த சமயம் னால கூட்டத்துல ஒரு விசில சத்தம் கேட்டது.
அடுத்த சீன் ல நான் சிகரெட்டோடயும் சாராய பாட்டிலோடு வீட்டுக்குபோற சீன்.
அப்பா கேப்பார். மை சன் வாட் இஸ் திஸ்...
தெரியல...இது தம்மு....இது ரம்மு....அப்படினு சொன்னேன்...
கூட்டத்துல பயங்கர கிளாப்.

கடைசி சீன் டாக்டர் பேசனும். அப்பா அம்மாக்கு அட்வைஸ் பண்ணனும். சுஜி பேசுறா...பேசுறா...பேசிட்டே இருக்கா.... ஆடியன்ஸ் பக்கம் முணுமுணுப்பு வந்திருச்சு....கேசவன் மெதுவா என்ட என்னடா இவ இப்படி மொக்கை போடுறா னு ஸ்டேஜ்லயே கேட்டான்.... கேசவன் உமா கையைத் தட்டி சுஜிய நிறுத்தச்சொல்லு னு சைகை காமிக்க...உமாவும் காமிக்க சுஜி கேக்கல...அவளோட சொந்த ஸ்கிரிப்ட்ட்னு ஒப்பிச்சுட்டே இருந்தா..

கேசவன் உமா வீணா..சந்திரு னு எல்லோரும் ஸ்டேஜ்லயே என்னைய பாக்க ஆரம்பிச்சுட்டாங்க....
நான் பார்த்தேன்...சரிப்பட்டு வராதுனு...வாட்டர் பாட்டில டமாலுனு கீழ போட்டு...

டாக்டர்....என் கண்ண திறந்துட்டீங்க டாக்டர்....னு கத்திட்டு அவ காலுல விழுற மாதிரி விழுந்துட்டேன்...விழுந்து சுஜி கால் விரல திட்டி...போதும் நிறுத்துப்பா...னு சொன்னேன்...
உமாவும் வீணாவும் சிரிச்சுட்டாங்க....ஸ்டேஜ்லயே....

நாடகம் முடிஞ்சது. நல்ல நாடகமா இருந்தா டெல்லில குடியரசுத்தலைவர் முன்னாடி அரங்கேற்றலாம்னு அறிவிப்பு இருந்தது.
நம்மது வராதுனு எனக்குத் தெரியும். சுஜிக்குத் தெரியல..நகத்தைக் கடிச்சுட்டே வெயிட் பண்ணாள்.
எங்களுக்கு மூன்றாவது ரேங்க். அதுல வருத்தம் தான்.

அடுத்த நாள் காலைல உணவுக்கு போனோம். கேரள பசங்கல ஒருத்தன் என்னைய பார்த்து ...ஏதோ மலையாளத்துல சொல்லிட்டு....இது ரம்மு...இது தம்மு...வல்லிய பஞ்ச்சாக்கும் சேட்டா....னான்...

இன்னொருத்தன் என்னையவும் சந்திருவையும் கட்டிப்பிடிச்சு அவன் கேங் குக்கு கூப்பிட்டு போயி மலையாளத்துல ஏதோ சொல்லி எங்களுக்கு கை கொடுத்தானுக..நைட்டு க்ரவுண்ட்ல யாருக்கும் தெரியாம தண்ணி அடிக்கலாம். ட்ரீட் கொடுக்குறோம் வாங்கனானுக...எனக்கு அந்தப் பழக்கம் இல்லங்க னேன்...எல்லாரும் சிரிச்சானுக...

சாப்பாட்டு தட்ட எடுத்துட்டு ஓரமா நிண்டேன். சுஜி வந்தா...நமக்கு ஏன் மூணாவது ரேங்க் தெரியுமானு கேட்டா..

தெரியும்..
ஏன்
என்னாலதான...னு கேட்டேன்..
போடா லூசு...
அப்புறம்....
ஸ்டேஜ்ல வீணா உமா கேசவன் சிரிச்சுட்டாங்களாம்...
ஓ...
அப்புறம்...
அப்புறம்...?
போதை கொஞ்சம் ஓவரா இருந்ததாம்..னு சொன்னா...
ஸாரி..னேன்...
இல்ல...நான் சொன்ன மாத்ரி நடிச்சிருந்தா மூணாவது ரேங்க் கூட வந்திருக்காது பழனி..பாதிலேயே விசிலடிச்சு பசங்க நிப்பாட்டிருப்பானுக..நல்லவேல நீ டயலாக்கலாம் மாத்திட்ட...னு சொன்னாள்..

உன் பெர்மிஷன் இல்லாம சந்திருவும் நானும் அத சேத்துட்டோம்...
அது ரொம்ப நல்லாருந்ததுடா...நானே சிரிச்சுட்டேன்...அப்பாவியா இருந்து தண்ணிக்கே போதை ஏறுற மாத்ரி என்ன ஆட்டம்  போடுறீங்கடா..யூ கைஸ் வேர் ராக்கிங்க் டா..னு சொன்னாள்....

இது நடந்து பதினைஞ்சு வருஷமாச்சு. இந்தக் கட்டுரை அடிச்சு ஒரு வருசமா பாதியிலேயே நிண்டுருச்சு. அந்த டீம் ...அந்த நண்பர்கள்.யாரும் இப்ப தொடர்பில் இல்லை.
.கேசவன மூணுவருஷம் முன்னாடி பார்த்ததோட சரி.

சந்திரு....பத்து வருஷத்துக்கு முன்னாடி வெளிநாடு போறேனு சொன்னான். இப்ப தொடர்பு இல்லை.
உமா சுஜியும் அப்படித்தான்.
 பதினோரு வருஷத்துக்கு முன்னாடி நான் கோயம்புத்தூர்ல வேலை பார்க்கிற சமயத்துல காந்திபுரம் மேல் பாலத்துல சுஜி போயிக்கிட்டு இருந்தா...கீழ நான் டூவீலர்ல சிக்னல் கிராஸ் பண்ணேன். மறுபடியும் யூ டர்ன் போட்டு வந்து பார்த்தேன்...சுஜிய காணாம்... எனக்கு கேசவன நினைச்சாத்தான் சிரிப்பா வந்தது....


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்