ஆச்சி.

அந்த மருத்துவமனையில் காத்திருந்த பொழுது மணி இரவு பத்து இருக்கும். ஒரு சக்கர நாற்காலியில் ஒரு முதியவரை அமர வைத்து மருத்துவரைப் பார்த்துவிட்டு வெளியில் அவரை இருக்க வைத்துவிட்டு கூட வந்த உறவினர்கள் மருந்துக்கடைக்குச் சென்று விட்டனர். அப்பொழுது அவர்களைத் தேடி வந்த இன்னொரு நபர்..அந்த தாத்தாவைப் பார்த்து 'இப்ப எப்படி இருக்கீங்க தாத்தா எனக் கேட்டார்.

பதிலுக்கு அவர்..'யாரு முத்துவா ' னு கேட்டார்.
இல்ல...ராசு...னு பதில் சொன்னார்.

எனக்குக் கூட அப்படி அனுபவங்கள் உண்டு . பதில் சொல்லி.
என் ஆச்சியிடம்.
ஆச்சினா அம்மாவோட அம்மா.

தாத்தா இறந்தப்பின்னாடி ஆச்சி மாமா வீட்டோட இருந்தாங்க. எங்க வீட்ல இருந்து நாலு தெரு தாண்டி மாமா வீடு.
ஆச்சி நல்லா நடக்கிறப்ப எங்க வீட்டுக்கு வரும். எங்கள பாக்கும். அம்மாவும் ஆசிரியைன்றனால சனிக்கிழமை சாயந்திரம் வந்திட்டு திங்கட்கிழமை காலைல போயிருவாங்க...

அந்த மூணு நாள் தங்குறது பேரங்களாகிய எங்கள பாக்க மட்டுமல்ல. மக கொஞ்சம் வாய்க்கு நல்லா சமைச்சு கொடுப்பானு.

அந்த காலத்துல இருந்து அப்பாக்கும் தாத்தா ஆச்சிக்கும் வாய்க்கால் தகராறு இருந்தாலும் ஆச்சி தங்குற காலத்துல அப்பா ஆச்சிக்குனு தனியா காச என்ட கொடுத்து வெத்தல பாக்கு வாங்கி கொடு ஆச்சிக்குனு சொல்வாங்க...

கொஞ்ச நாள் கழிச்சு ஆச்சிக்கு கண்பார்வை மங்க ஆச்சி வர்றது இல்லை. அப்ப நான் கல்லூரிக்குள நுழைஞ்ச சமயம். ஆச்சிய நான் போய் பாப்பேன் மாமா வீட்ல.

எங்க மாமா வீடு பெரிய வீடு.
பெரிய வீடு னு எத வச்சு சொல்றேன்னா...கீழ மூணு வீடு . அதை வாடகைக்கு விட்டுட்டு அதுக்கு மேல இரண்டு வீடு. அதை எங்க மாமாவே உபயோகப்படுத்தினார். மாமாக்கு மூணு பசங்க. அவங்கள அத்தான் னு தான் கூப்பிடுவேன். இரண்டு மகள்கள். மூத்தவங்க. அத்தாச்சி னு தான் கூப்பிடுவேன். ஒரு அத்தான் வெளிநாடு போயிட்டார். ஒரு அத்தாச்சிக்குக் கல்யாணம் ஆயிருச்சு.

இந்த மாடிக்கு மேல இரண்டாவது மாடில ஒரு அறை உண்டு. அஸ்பெட்ட்டாஸ் போட்டு. அதுல தான் எங்க ஆச்சி இருந்தாங்க.

நான் கல்லூரி விடுமுறையப்ப ஞாயிற்றுகிழமை வாக்குல மாமா வீட்டுக்குப் போயி ஆச்சிய பார்ப்பேன். அம்மா அனுப்புவாங்க. ஏதாவது வடை , பழம் அப்படி இப்படி னு கொண்டு போவேன்.

மேல போனதும் அந்த அறைக்குள இருட்டுல ஆச்சி கால் விரிச்சு உட்கார்ந்திருக்கும். இல்லாட்டி அறைக்கு வெளில இருக்குற இடத்துல மாடில துணி துவைச்சிட்டு இருப்பாங்க.

என்னைப் பார்த்ததும் ஆதி யா னு கேப்பாங்க. ஆதி எங்க மாமா பையன்.
இல்ல ஆச்சி பழனிக்குமார் னு சொல்வேன்.
கண்ணு தெரில ப்பா னு சொல்வாங்க...
சில நாட்களில் ஆச்சி என்னைப் பார்த்து ஆதியா னு கேப்பாங்க. காதுல நான் சொன்னாலும் சரியா கேக்காதுனு நான் ஆமா ஆதினு சொல்லிருவேன்..
வேலைக்குப் போகலையா னு கேப்பாங்க..
லீவுனு சொல்வேன்.

ஒரு தடவை அப்படிச் சொன்னப்ப பழனிய வரச்சொல்லுப்பா...ஆளக்காணாம்னு சொன்னாங்க.
எனக்குக் சங்கடமா ஆயிருச்சு. அதுல இருந்து கத்திக்கூட பழனிதான்னு சொல்வேன்.

எங்க அத்தான்ட பழனியா னு கேட்பாங்களாம்.
இல்ல ஆதினு சொன்னா...இந்த சின்ன பைய வருவான் ஆளக்காணாம் னு சொல்வாங்களாம்.
ஆதி அத்தான் என்ட சொன்னப்ப அப்பத்தா உன்ன தேடுதுடா...ஏதாவது காசு கேளு னு சொல்வார்.


ஒரு விடுமுறை நாளில் காலைல ஒன்பது மணிக்கு மார்க்கெட் போறப்ப மாமா வீட்டுக்குப் போயிட்டு போலாம்னு போனேன். போனதும் மாடிக்குப் போனா எங்கள பாக்க வரலையானு எல்லாரும் கேப்பாங்கனு அத்தை அத்தாச்சிட பேசிட்டு அவங்க காப்பி போட்டுக்கொடுத்தா குடிச்சிட்டு மேல போனேன். போகும்போது ஆச்சிக்கு சாப்பாட்ட அத்தாச்சி எடுத்துட்டு வந்தாங்க. நான் ஆச்சி பக்கத்துல நிண்டு அவங்க சாப்பிடுறத பார்த்தேன்.
அம்மா அண்ணன் அப்பா எல்லாத்தையும் விசாரிச்சாங்க.
சாப்பிட்டு முடிச்சு தட்ட கழுவ போகும்போது வயசானவங்க பண்ணுவது போல புலம்பிக்கிட்டே போனாங்க...நீ வந்திருக்கனு தான் உன் அத்தைக்காரி சீக்கிரம் சாப்பாட்ட போட்டுருக்கானு..
மணி அப்ப பத்து.
அதுவே சீக்கிரம்னா ஆச்சிக்கு எப்ப சாப்பாடு வரும்னு தெரியல.
அதுல இருந்து லீவு விடுறப்பலாம் நான் மாமா வீட்டுக்குச் சாப்பாடு நேரமா போவேன். நான் வந்ததும் ஆச்சிக்கு அத்தை சாப்பாடு எடுத்து வைப்பாங்க. அத்தானோ அத்தாச்சியோ நானோ கொண்டுபோவோம்.

மத்த நாள்ல எப்படியோ தெரியல.
அம்மா மாசத்துக்கு ஒரு நாள் மாமா வீட்டுக்குப் போயி ஆச்சிய பார்ப்பாங்க. எங்க வீட்டுக்கு வர மறுத்துட்டாங்க ஆச்சி.
மாமாவும் எங்க வீட்டுக்கு விடல.
ஆச்சி கழுத்துல போட் ருக்குற அஞ்சு பவுண் செயின் தான் அதுக்குக் காரணம்.

இப்படி ஒரு நாள் அப்பா பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் எங்க அம்மாட்ட
'நீ போய் உங்க அம்மாவ பாக்கலையா னு கேட்டாங்க
இல்லங்க..பாக்கல..அடுத்த வாரம் போகனும்..னு அம்மா சொன்னாங்க
நாளைக்குப் ஸ்கூல் விட்டு வரப்ப உங்க அண்ணன் வீட்டுக்குப் போயி உங்க அம்மாவ போயி பார்த்துட்டு வா னு அப்பா சொன்னாங்க..

ஏன்னு சொல்லல...

அம்மா போனாங்க...

ஒரு வேலை நாள்ல அம்மா அப்படி மாலைல போயிட்டு ஆச்சி அறைக்குப் போய் பார்த்தா ஆச்சி படுத்திருந்திருக்காங்க...படுக்கைலயே சிறுநீர் கழிச்சு மலம் கழிச்சு....
தட்டைக் கழுவாமல்.
அம்மா அழுதுட்டு ஆச்சியைத் தூக்கி வெளியே அமர வைத்து குளிக்க வைத்து தலை சீவி அறையைக் கழுவி துடைச்சி உள்ள படுக்க வச்சுட்டு வந்தாங்க.
அத்தையைக் கோபிக்க முடியாது. கோபிச்சு இன்னும் மோசமா பார்த்தா என்ன பண்ணுறது.
வந்ததும் அம்மா அழுத முகத்தை நாங்களும் அப்பாவும் கண்டுபிடிச்சுட்டோம்.

அப்பா சொன்னாங்க. மாமா வீட்டுக்குப் பின்னாடி அப்பாக்கூட வேலை பார்க்கிற ஒரு டீச்சர வீடு இருந்தது.
முதல் நாள் மத்தியானம் மூணு மணி வரை ஆச்சிக்கு சோறு போடலையாம். ஆச்சி அறைல இருந்து தவழ்ந்துட்டே மாடிப்படி வரை வந்து எங்க மாமாவ

சந்திரா...( மாமா பேரு சந்திரன்)
சந்திரா...சந்திரா ..பசிக்குதுப்பா...னு மாடில இருந்து கத்துனாங்களாம்.
அந்த டீச்சர் அன்னைக்கு லீவாம் . அவன்க காதுல கேட்டது கஷடமா இருந்ததாம். அதை அப்பாட்டச் சொல்லிருக்காங்க.
தினமும் ஒரு தடவையாவது உங்க மாமியார் இப்படி கத்துறாங்க..உங்க மச்சினன் ரொம்ப மோசம் னு அந்த டீச்சர் சொல்லிருக்காங்க.
 அதான் அப்பாவும் அம்மாவை நேரில் பார்க்கச்சொல்லியிருக்கிறார்கள்.

அதிலிருந்து அம்மா பள்ளிக்கூடம் முடிஞ்சதும் நேரா மாமா வீட்டுக்குப் போயி ஆச்சியைப் பார்த்து குளிக்க வைத்து சுத்தம் செய்து தான் வந்தாங்க.
எங்கள் அத்தைக்கும் அத்தாச்சிக்கும் எந்த அக்கறையும் அப்படி இருந்தபடி இல்லை.

எங்களிடம் அம்மா பேசும்பொழுது எங்கள் அத்தைக்கு எங்கள் அம்மா நிறைய சாபமாகச் சொல்லியிருக்கிறார்கள். ஒரு கோபத்தின் வெளிப்பாடாக.

ஆச்சி ஒரு நாள் இறந்துவிட்டார்.

இப்படி ஒ ரு கடைசிக்காலத்தை யாரும் வாழ்ந்துவிடக்கூடாது என்று எங்கள் உறவினரகள் எல்லோருக்கும் காட்டி விட்டுத்தான் ஆச்சி இறந்துபோனார்.

சில நடுநிலை உறவினர்கள் எங்கள் அத்தைக்கு அப்படி ஒரு கடைசிகாலம் வரும். பாவம் சும்மாவிடாது என்றுலாம் சொன்னார்கள்.

ஆனால் எங்கள் அத்தைக்கு வந்த மருமகள்கள் மிக்க நல்லவர்கள்.
இன்றைய காலகட்டத்தில் எல்லோரும் எல்லா விசயங்களையும் மறந்துவிட்டார்கள்.

நன்றாகப் பராமரித்து இருந்தால் கவனித்து இருந்தால் ஆச்சி இன்னும் மூன்று வருடங்கள் இருந்திருப்பார். ஆனால் சமூகம் புரிந்துகொண்டது அல்லது புரியவைக்கப்பட்டது என்னவென்றால் வயதாகிவிட்டது ஆச்சி இறந்துருச்சுனு தான்.

ஆனால எந்த  ஒரு சாபத்தையும் அந்த கனத்து அன்புக்காரி எங்கள் ஆச்சி தன்னோட மகனின் மனைவிக்கு விட்டுச் செல்ல வில்லை என்பது தான் உண்மை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....