வெள்ளை நியூட் ரின் சாக்லேட்

இப்பொழுது தான் அம்மாவிற்கு அழைப்பு வந்தது.
என்னிடம் கேட்கலாம் எனச் சொல்லி அம்மா ஃபோனை அணைக்கும்வரை அவர் யாரிடம் பேசுகிறார் என்று  நான் கவனிக்கவில்லை.

அவர் ஃபோனை அணைத்துவிட்டு வெளியில் வருவதற்கும் நான் என் பைக்கை வெளியில் எடுக்கத் தயாராவதற்கும் சரியாக இருந்தது.

டே ப்ரவீன்... அரவிந்த் டா ஃபோன்.
இதைச் சொல்லிவிட்டு அம்மா வாசலுக்கு என்  அருகில் வரும் வரை அரவிந்த் க்கான ஒரு சிறு ட்ரெய்லர் என் மனதில் ஓடியது.

இரண்டு வருடத்திற்கு முன் இப்படித்தான் ஃபோன் செய்தான். அதுவும் அவன் அல்ல. அவனது அம்மா. மாணிக்கம். அம்மாவோடு ஒன்றாய் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். தன் இரண்டாவது மகன் அரவிந்த் விசயமாக ஃபோன் செய்திருக்கிறார். எம் பி ஏ அரியர் . வேலை இல்லை. வீட்டிலேயே சொத்தை அழிக்கும் படியாக அமர்ந்து உணவு உண்ணும் தறுதலைப் பையன் .
அவனது அப்பா இப்படித்தான் சும்மா இருந்து வேலை வெட்டி என்று எதுவும் இல்லாமல் புகை தண்ணீர் என எல்லாக் கெட்ட பழக்கங்களுடனும் வீட்டில் சுமையாக மாறி விட்டார்.. இவனும் அப்படி ஆயிரக்கூடாது என்று சொன்னார். ஆதலால்
அவனுக்கு ஏதாவது வேலை. இது தான் அன்று வந்த ஃபோன். என்னை அழைக்கச்சொல்லுங்கள் என்று சொல்லியிருந்தேன். இரண்டு வருடமாக என்னை அவன் கூப்பிடவே இல்லை. நான் ஒண்ணும் எம்ப்ளாய்மெண்ட் ஆபிஸ்காரன் இல்லை. ஒரு சாதாரண ஃபினான்ஸியல் கன்சல்டண்ட். என்னால் முடிந்தவரை என்னுடைய அலுவலகத்திலோ அல்லது என் வாடிக்கையாளர்கள் அலுவலகத்திலோ அவனுக்கு ஏதாவது செய்திருக்க முடியும் என்ற நம்பிக்கை தான். அதுவும் அவனுக்காக இல்லை. மாணிக்கம் அத்தைக்காகவும் இல்லை. இரண்டாவதாக என்று ஆரம்பித்திருந்தேன் அல்லவா..அப்பொழுது முதலாவதாக என்று இருந்திருக்க வேண்டும் அல்லவா. அது அவனது அக்கா. ஸ்வாதி. 

அம்மா வந்து சொன்னது கிட்னி டயாலிஸிஸ் பிரச்சினைக்கு இன்ஷ்யூரன்ஸ் கவரிங் எந்த மருத்துவமனையில் தருவார்கள் என்று கேட்டது தான்.
விசாரித்துவிட்டுச் சொல்கிறேன் என்று       அவசரத்தில்நான் கிளம்பிவிட்டேன்.

அரவிந்தோட அப்பா குடித்து குடித்து எதுவும் கிட்னி பிரச்சினையா இல்லை அவனது அம்மா மாணிக்கம் அத்தைக்கா எனத் தெரியவில்லை. ஆம். அம்மாவுடன் வேலை பார்த்த அனைவரும் அத்தைகள் தான். அதுவும் ஸ்வாதியின் அம்மா அத்தையாகத்தானே இருக்க முடியும். அம்மா வேலை பார்த்த காலத்தில் அவர்கள்து அலுவலகத்தில் குடும்பச்சுற்றுலா ஏற்பாடு செய்தார்கள். ஸ்வாதி வருகிறாள் என்று கூறி என்னையும் அழைத்துப் போனார்கள். அப்பொழுது ஒன்பதாம் வகுப்பு.

மாணிக்கம் அத்தை முன் இவன் தான் என் பையன் ப்ரவீன் என்று அம்மா காட்டியதும், அத்தைக்குப் பின் மெதுவாக எட்டிப்பார்த்து முகத்தை மறைத்துக்கொண்ட ஸ்வாதி தான் இப்பொழுதும் ஞாபகம் வருகிறது.ஒரே வகுப்பு என்றதும் யார் நல்லா படிப்பார்கள் என்ற மறைமுக போட்டிக்கு நான் தயாராகவே இருந்தேன். அட ஆமாம், நான் கொஞ்சம் தயிர்சாதம் தான்.
சுற்றுலாக்கான பேருந்து வந்ததும் ஸ்வாதி ஒரு ஜன்னலோர சீட்டில் அமர்ந்து அதற்குப் பின்னிருக்கும் இருக்கையில் ஒரு பை வைத்து எனக்கு இடம் போட்டு வைத்தாள்.
அமர்ந்ததும் கண்னாடிக்கும் சீட்டுக்கும் இடையே நாங்கள் பேச ஆரம்பித்தோம். அப்பொழுது நான் கேட்ட கேள்வி சிலப்பதிகாரம் மனப்பாடச் செய்யுள் படிச்சுட்டியா..என்பது.
நான் இப்பொழுது கூட சிரித்துக்கொள்கிறேன். என் கேள்வியை நினைத்து.
பதிலுக்கு தலையில் அடித்துக்கொண்ட ஸ்வாதியை எப்படி எழுதுவது.
அந்த காலத்து பைனாப்பிள் படம் போட்ட நியூட் ரின் சாக்லேட் ஒன்றைக் கொடுத்தாள். தித்திக்க தித்திக்க சாக்லேட் சாப்பிட்டக் காலம் அது.

அதற்கு அடுத்த வருடமும் அம்மா அலுவலகத்தின் மூலம் சுற்றுலா போனார்கள்.
 ஸ்வாதி வருவதாக இருந்தால் நான் வருகிறேன் எனக்கூற ஸ்வாதியும் அப்படித்தான் சொல்லியிருக்கிறாள்.
முதல் வருடத்து ஞாபகங்களோடு சென்ற எனக்கு அங்கு ஒரு தோழியும் அதே ஞாபகங்களோடு எனக்காக அவளது பை வைத்து இடம் பிடித்திருந்தாள். அவளுக்குப் பின் இருக்கையில்.
நீ கேட்பியேனு உனக்காகக் கலிங்கத்துப்பரணி படிச்சுட்டு வந்து இருக்கேன் என்ற போது என்னை மீறி எனக்கான வெட்கம் வந்து விழுந்தது.

மறக்காமல் பஸ் கிளம்பியதும் கண்ணாடிக்கும் சீட்டுக்கும் இடையே ஒரு வெள்ளைக் காகிதத்தில் பைனாப்பிள் படம் போட்ட ந்யூட் ரின் சாக்லேட் வந்தது. சம்பந்தமே இல்லாமல் சில நேரம் சில பொருட்கள் நமக்கு மிகவும் நெருக்கமாக மாறிவிடுகின்றன. அப்படித்தான் அந்த வெள்ளைக்காகித நியூட் ரின் சாக்லேட்டும்.

ட்விட்டர் வாட்ஸப் ஃபேஸ்புக் இல்லாத அந்தக்  காலகட்டத்தில் சுற்றுலா முடிந்ததும் அடுத்த சுற்றுலா இல்லாமல் போக ஸ்வாதிக்கும் எனக்கும் தொடர்பு இல்லாம்ல போனது. காலம் ஓட ஓட கல்லூரி முடிந்து அப்போதைக்கு வேலை ஆரம்பித்த ஒரு சமயத்தில் பெரியார் பேருந்து நிலையத்தில் சேலை மற்றும் இடுப்புக் குழந்தையுமாக ஸ்வாதி நின்றிருந்தாள். ஒரு கிராமத்துப் பொண்ணாக நகை எல்லாம் மின்னிக்கொண்டு ...

என்னைப் பார்த்ததும் ...ப்ரவீன்..ஆளே மாறிட்டடா, பெரிய ஆளாயிட்ட...என்று கூறினாள். உண்மையில் அவள் தான் மாறியிருந்தாள்.
அவள் குழந்தைக்கு ஏதாவது வாங்கிக்கொடுக்க பக்கத்துக் கடையில் சில பிஸ்கட்டுகளும் வெள்ளை கலர் பேப்பரில் சூட்டப்பட்ட பைனாப்பிள் படம் போட்ட நியூட் ரின் சாக்லெட்டுகளும் வாங்கிக்கொண்டு அவள் குழந்தையின் கையில் திணித்தேன். எந்த சஞ்சலமும் அற்று இந்த சாக்லெட்டையே வாங்கிட்டியா...எனச் சிரித்தாள். கள்ளம் கபடம் ஏதும் இல்லாத அவளது சிரிப்பு.

நன்றாக ஞாபகம் இருக்கிறது. அன்றைய இரவில் அம்மாவிடம் கேட்டேன். ஸ்வாதிக்குக் கல்யாணம் ஆயிருச்சும்மா..ஆளே மாறிட்டா..னு
பி.ஏ படித்து பாதியிலேயே படிப்பை நிறுத்திக் கல்யாணமாம். கணவன் வக்கீல். குடிகாரன் இன்ன பிற எனப் பல கதைகள் வந்து விழுந்தன.

பிறகு பல வருடங்கள் கழித்து அரவிந்த் ஃபோன் விசயமாக மாணிக்கம் அத்தை பேசினார். அப்பொழுது ஸ்வாதி எப்படி இருக்கா எனக் கேட்க மூன்று பெண் குழந்தைகள் கணவன் வக்கீல். நிறைய டவுரி கேட்டுட்டே இருக்கான் பா என்று மாணிக்கம் அத்தை அடுக்கினார். ஆனால் அரவிந்த் பேசவில்லை. இப்பொழுது இரு வருடங்கள் கழித்து இன்று அம்மா மூலமாக ஃபோன்.

இரவு அம்மாவிற்குச் சொல்ல வேண்டும். அம்மாவிற்கு நெருங்கிய தோழி மாணிக்கம் அத்தை.

வேலையோடு வேலையாக கிட்னி டயாலிஸிஸ்க்கு எந்த மருத்துவமனை சிறந்தது. எங்கு இன்ஷ்யூரன்ஸ் கவராகும் போன்ற தகவல்களை அம்மாவின் தோழிக்காகச் சேகர்த்துக்கொண்டேன்.அம்மாவிடம் கூறும்போது பொத்தம்பொதுவாக அரசு மருத்துவமனை மிக எளிது என்பதைச் சொல்லிவிட்டு அரவிந்த்க்கு இப்பவே என்ன மா பிரச்சினை எனக் கேட்டேன்.

அது அரவிந்த்க்கு இல்லடா ஸ்வாதிக்கு என்றார் அம்மா.

நான் மேற்கொண்டு  அதைப் பற்றிக் கேட்க வில்லை.


டவுரி அதிகமாகக் கேட்கும் குடிகாரக் கணவன். மூன்று பெண்குழந்தைகள் இது தான் அந்த இரவுக்கெல்லாம் எனக்கு ஓடியது. ஒரு குடும்பத்தில் மூன்று சின்னஞ்சிறு குழந்தைகள் இருந்தால், தாய் எவ்வளவு முக்கியம். அந்தத் தாய் நோய்வாய்ப்பட்டு அதுவும் கிட்னி டயாலிஸிஸ் வகையறா நோய்களைச் சுமந்துகொண்டு இருந்தால் அவளது துணை, அவள் கணவன் எவ்வளவு பொறுப்பாக இருக்க வேண்டும். அந்தக் குழந்தைகளின் தேவைகளைக் கவனிக்கவாவது அவன் குடிக்காமல் இருக்கச் சொல்ல வேண்டும்.
அந்த இரவு என்னை ஏதோ செய்தது. முகமே தெரியாத அந்த மூன்று குழந்தைகளின் அரவணைப்பிற்கானத் தாகம் ஒரு இருளாக ஆட்கொண்டு என்னை தூக்கத்திலும் துக்கத்திலும் மூழ்கடித்தது.


மறுநாள் காலை நான் எழுந்து வெளியே வருவதற்கும் அம்மா விற்கு ஃபோன் வருவதற்கும் சரியாக இருந்தது.

எப்பப்பா....என்னப்பா சொல்ற..திடீருனு....
அம்மா எப்படிப்பா இருக்காங்க. .அம்மா எப்படி தாங்குவாங்க..

.சரிப்பா புதுக்குளம் தான இல்ல அவ புகுந்த வீட்டுக்கு கொண்டுபோறீங்களா  இல்ல உங்க வீடா என்றேல்லாம் பேசினார்.

சில நேரம் கழித்து பேசி முடித்துவிட்ட போனோடு அம்மா அப்படியே அமர்ந்திருந்தார். நான் எதுவும் கேட்கவில்லை.

நான் வெள்ளைக் காகிதத்தில் பைனாப்பிள் படம் போட்ட நியூட் ரின் சாக்லெட்டுகளை இப்பொழுதெல்லாம் சாப்பிடுவதில்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....