ஹீலர்களின் அரெஸ்ட்

பொதுவாக mocking டைப் பதிவுகள் எனக்குப் பிடிக்கும். போதுமான அளவு க்ரியேட்டிவிட்டி பயன்படுத்த வாய்ப்புகள் அதில் இருக்கும்.
சில நாட்களுக்கு முன் வந்த வாட்ஸப் பதிவு ஒன்றில் வீட்டிலேயே சமைத்துச் சாப்பிட்ட ஒருவர் கைது. வீட்டிலேயே குழாய் குடிநீர் குடித்தவர் கைது. இப்படி வீட்டிலேயே பிரசவம் பார்த்தவரும் கைது என்று வந்தது.
ஒருவருக்கு முகநூலில் ட்விட்டரில் லைக்குகள் அதிகம் விழுந்துவிட்டால் போதும். அவர் தான் தேவதூதராகி விடுகிறார். அவர் சொல்வதைக் கேட்கவேண்டும் என்று சிக்கலில் மாட்டுகிறார்கள் மக்கள். வீட்டில் பிரசவம் பார்த்து ஒரு உயிர் பலி.
இப்படித்தான் ஒரு சிலரின் சின்ன சைகையால் மக்கள் அவரது திறமைக்கு ஏற்ற உயரத்தைவிட அதிக உயரத்தில் தலையில் தூக்கி வைத்து நிறைய எதிர்பார்ப்பார்கள்.
இது சார் சிக்கல்களில் இப்பொழுது மக்கள் குழம்புவது வீட்டிலேயே பிரசவம் பார்க்கக்கூடாதா..அலோபதி மருத்துவம் மற்ற வழி மருத்துவத்தை அழிக்கிறதா ...ப்ளா..ப்ளா ..ப்ளா எனக் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.
புரியும்படி பேசலாம்.

நம்ம பாட்டிக்கு நார்மல் டெலிவரி.
நமக்கு முந்தையத் தலைமுறைக்கு நார்மல் டெலிவரி. 
இப்ப ஏன் இல்லனா..முந்தி காட்டுல மேட்டுல வேலை பாத்த கிழவிக இன்னும் குடத்தைத் தலைல தூக்கிட்டு கம்பா சுத்துதுக.நம்ம தங்கச்சிக அக்காமார்க அப்படி சுத்துதுகளா.
மூணு மணிக்கு எந்திரிச்சு மாட்டு கொட்டத்துல மாட்ட அவுத்து வெளிய கூப்ட்டு போயிட்டு பால கறந்து ஊத்திட்டு வயல்வெளியா நடந்து சின்னமனூர்ல இருந்து உத்தமபாளையத்துக்கு ஆத்துவழி கடந்து நடந்து தாத்தாக்கு கஞ்சிய கொடுத்துட்டு திரூம்பவந்து கிளம்பி பள்ளிக்கூடம் போவாங்களாம் எங்க அப்பாவும் அத்தையும். என்னால முடியுமா.
கலாச்சாரம் மாற மாற நாகரிகம் மாற மாற நம் உடல் தாங்கக்கூடிய சக்தியும் மாறும்தானே.
ஒரு காலத்துல பொம்பளைகளுக்கு வேலை ஒரு அடிமை வேல மாதிரி.
வீட்டு வேல பாக்கனும். புருஷனக்கு தொண்டூழியம் பண்ணனும். அப்புறம் படுக்கனும் . குழந்தை பெத்துக்கனும். பத்து வயசாம் எங்க அப்பாயிக்கு கல்யாணம் பண்ணப்ப. வருஷம் பூரா குழந்தைய பெத்துப்போட்டக் கதைலாம் நாம கேள்விபடுறதுதான..
ஒரு பக்கம் முட்டாள்தனமா இருந்தாலும் அந்த ஆரோக்யம் உடல் திடம் இப்ப இருக்கா நம்மகிட்ட. 
பிராய்லர் கறி அப்ப கிடையாது. 
நூடுல்ஸ் அப்ப கிடையாது. 
கார்பனேட்டட் டிரிங்க்ஸ் அப்ப கிடையாது.

லவாப்பழம்னா அணில் கிடைச்சு மண்ணா பொடிசா விதை பெருசாத்தான் கிடைச்சது. 
இப்ப இருக்குற மாதிரி விதையே இல்லாம இருந்திருக்காது.
போலிஸ்காரன் தொப்பை மாதிரி சுரக்காய் காய்ச்சது. இப்ப என்னடானா க்ளாரிநெட்ட விட ஒல்லியா வருது.
புடலைங்காய் சார பாம்பாட்டம் நெடுசா கிடக்கும். இப்ப பேண்ட் பாக்கெட்ல சொருகிட்டு போயிரலாம்.
கருப்பு திராட்சைய வெள்ளையா குண்டுகுண்டுனு தரானுக.
தக்காளில ஒரு வகை தான் இருந்துச்சு.
இப்படி மரபணு மாத்தி நம்ம மண் சார்ந்ததா இல்லாம எல்லாத்தையும் திண்பேன். 
ஒடம்ப கெடுத்துக்குவேன். 
பிரசவம் மற்ற பிற மருத்துவம்லாம் எங்க அம்மாச்சிக்கு இருந்தமாதிரிதான் நடக்கனும்னா ஹாரிபட்டர் டாலர வாங்கி சுத்தவிட்டு பழைய காலத்துல போயி படுத்துக்க வேண்டியது தான்.
அம்மிக்கு குணிய மாட்டேன். 
உரலுக்கு குத்தவைக்கமாட்டேன். 
இடுப்பு காட்டத்தான். என் இடுப்பு என் உரிமைனு தண்ணி குடத்த வைக்கமாட்டேனு எந்தப் பயிற்சியும் இடுப்பெலும்புக்கு கொடுக்காம கர்ப்பமாகி ஒன்பது மாசத்துல நார்மல் டெலிவரிக்கு முக்கு முக்குனா இடுப்பெலும்பென்ன ஆண்ட்ராய்டு ஆப்பா மடங்கி கொடுக்க.
அப்படி அந்தக் காலத்துலயும் ஒழுங்கா நடக்காத கதையும் இருக்கு. முத பத்து குழந்த செத்து போச்சு. அடுத்து வந்ததுதான் தப்பிச்சுச்சுனு சொல்ற கதையும் உண்டு தான.
முந்தி மாதிரி மெண்டலி ரிடார்டட் குழந்தைகள் இப்ப பிறக்குதா..
அம்மாக்காரி முக்கி குழந்தைய தள்ளுறப்ப சிசுவோட தலை இறங்குறப்ப அந்த வழியில சிக்கி சிசுவோட மூளைக்கு போற இரத்தத்துல ஆக்ஸிஜன் கொஞ்சம் ஏறி இறங்குனா போதும். அந்தக்குழந்தை மரணிப்பதற்கும் மனநிலை பாதிக்கப்பட்டக் குழந்தையா போவதற்கும் வாய்ப்பு அதிகம்.
அப்படிப்பட்ட மனநிலை குறைபாடு உள்ளக் குழந்தைகளுக்கான விகிதம் உடனே நெட்ல தட்டி டேட்டாவோடு வராதீர்கள். நார்மல் டெலிவரியில் பிரச்சினையில் சிக்கி மனநிலைக் குறைபாடுள்ள குழந்தைகளுக்கான விகிதம் இப்பொழுது குறைவு.

 அரசு மருத்துவமனைகளில் நார்மல் டெலிவரி தான் நடக்குதுனு ஒருத்தர் சொல்றார். அப்படி அல்ல. நார்மல் டெலிவரியும் நடக்குது. 
ஒரு நிகழ்தகவு பார்க்கலாமா.
அரசு மருத்துவமனை, பி ஹெச் சி என்ற ஆரம்ப சுகாதார நிலையம் போயி பிரசவம் பார்க்கும் ஆட்கள் யாருனு கொஞ்சம் அடையாளம் சொல்லுங்களேன்.
முகநூலில் அறச்சீற்றம் ஆகி, ட்வீட்டரில் நியாய தர்மங்களைப் போதிக்கும் குடும்பமா..
இல்லை. சாதாரணமான நடுத்தர மற்றும் நடுத்தரத்திற்கும் கீழ் இருக்கும் குடும்பம் தான். காம்ப்ளிக்கேட்டட் அதாவது சிக்கலுக்குரிய தகவமைப்புக்கான வாழ்வியல் முறை கொண்டவர்கள் அங்கு எத்தனை பேர் இருக்க முடியும்.
நடுத்தர வர்க்க மற்றும் நடுத்தர வர்க்கத்திற்கு மேல் அல்லது அதற்கு ஈடாக வளரும் இளம் தலைமுறையினர் தான் நார்மல் டெலிவரிக்கான உடல் தகவமைப்பை இழந்து வருகிறார்கள். 
அப்படி என்றால் மருத்துவர்கள் எல்லாரும் நியாயமானவர்கள் என்று ஜால்ரா அடிக்கிறீர்களா எனக் கேட்டால் இல்லை. அறுவை சிகிச்சையைத்தான் மருத்துவர் பரிந்துரை செய்கிறார் என்றால் அவர் அதில் காசு பார்க்கிறார் என்ற உண்மை இருக்கு என்றால் அது மட்டுமே உண்மை என்பதில்லை. நார்மல் டெலிவரிக்கான உடலமைப்பை நாம் வைத்துக்கொண்டுள்ளோமா என்ற எதார்த்தத்தை நாம் புரிந்துகொண்டு அதற்கேற்றபடி நாம் நடவடிக்கை எடுக்கலாம். குறை நம்மிடமும் இருக்கிறது என்பது உண்மை.
பிரசவத்தின் போது வெளியேறும் இரத்தப்போக்கு மிக மிகச் சவாலான ஒன்று.
அப்படி அந்தக் காலத்துல இரத்தப்போக்குல மரணித்தத் தாய்மார்கள் எண்ணிக்கை என்ன. இப்ப எண்ணிக்கை கூடுவதன் காரணம் என்ன.

இங்கு ஒரு குட்டிக்கதை சொல்கிறேன். அப்படி பிரசவ இரத்தப்போக்கைக் கட்டுப்படுத்த ஆக்ஸிடோசின் மருந்தைச் செலுத்தி இரத்தப் போக்கைக் கட்டுப்படுத்தி உயிரைக் காப்பாற்றுவார்கள்.
ஒரு பசுமாடு தன் மடியில் உள்ள பாலைக் கறக்க அனுமதிக்கும்பொழுது ஒரு குறிப்பிட்ட அளவு பாலை மடியிலேயே வைத்துக்கொள்ளும். தன் ஆற்றலுக்கோ கன்றுக்கோ தேவைப்படும்போது கொடுக்கும். நம் மாண்புமிகு மனிதர்கள் அப்படி கறந்தும் வராதப் பாலை வெளிவரவைக்க இந்த ஆக்ஸிடோசின் மருந்தை மாட்டுக்குப் போட்டுவிடுவார்கள். விளைவு மாட்டால் பாலை அடக்கவேமுடியாது. பால் தானாய் சுரந்து வெளிவந்துவிடும். தனக்கோ அதன் கன்றுக்கோ அதனது உடலில் வரும் உணவுப்பொருளை அதனாலேயே பயன்படுத்தமுடியாது.
இந்தக் கதை ஏன் இப்பொழுது எனக் கேட்கிறீர்களா...மாடு அப்படி உள்வாங்கிய ஆக்ஸிடோசின் இரத்தத்தில் கலந்து பாலிலும் கலந்துவிடுகிறது. அதைக் குடிக்கும் மனிதனுக்கு வரும் நோயில் ஒன்று மலட்டுத்தன்மை.
எந்த உயிரினத்திற்கு அதன் வாரிசிற்கு உணவிட துரோகம் செய்கிறோமோ அதே விளைவில் மனிதனின் வாரிசு வரவிடாமல் ஆகிறது.
இப்பொழுது கதைக்கு வாருங்கள். பெருகி வரும் இன்ஃபெர்ட்டிலிட்டி நோயாளிகள் சிகிச்சைக்குப் பிறகு ஒரு பெண் கர்ப்பமாகிறாள். திருமணம் முடிந்து மூன்று ஐந்து வருடம் கழித்து கர்ப்பமாகிறாள் என்றால் அந்த precious குழந்தையைக் காப்பாற்றத் துடிப்பதில் மருத்துவருக்குத் தான் முதலிடம். அப்படிப்பட்ட கர்ப்பிணிப்பெண்ணிற்கு நார்மல் டெலிவரி ஒரு வகை ரிஸ்க் தான். ஐந்து வருடம் கழித்துப் பிறக்கும் குழந்தையின் தாய் நார்மல் டெலிவரிக்கு எப்படி ஒத்துழைப்பாள் என யாருக்குத் தெரியும். டாக்டர்கள் என்ன தெய்வமா. சரி, குழந்தை போனால் பரவாயில்லை. நார்மல் டெலிவரி செய்யுங்கள் என ஐந்து வருடங்கள் குழந்தை இல்லாத அந்தக் கணவனும் மனைவியும் சொல்ல வேண்டும் என நீங்கள் சொல்லலாம். அவர்களால் அதைச் சொல்ல முடியுமா? ரிஸ்க் என்பதன் அர்த்தம் யோசியுங்கள்.
இன்னொரு கதை சொல்கிறேன்.
தென் மாவட்டத்தில் அது ஒரு கிராமம்.
ஒரு பெண் மருத்துவரின் க்ளினிக்.
ஒரு நிறைமாதக் கர்ப்பிணி வருகிறாள். சிசரியன் இல்லாமல் நார்மல் டெலிவரி தான் பண்ணனும் என்கிறாள் உடன்வந்த கணவனின் அக்கா.
மதியம் ஆகிறது. வலி வரவில்லை.இரவு ஆகிறது வலி வருகிறது.நார்மல் டெலிவரி. குழந்தை பிறக்கிறது.பெண்ணிற்கு வலிப்பு வருகிறது.இது ஒரு பொதுவான பிரச்சினைஇப்பொழுது.
வலிப்புஅடங்கமருந்துகொடுக்கப்படுகிறது. ஒரு மணி நேரம் கழித்து அந்தக் கிராமத்தில் இரவு பதினொரு மணிக்கு மறுபடியும் வலிப்பு வருகிறது. பிரசவத்திற்குப் பின்பான வலிப்பு போல் இல்லை. உடன் வந்தவர்களிடம் விசாரித்தால் பிறகு ஓருவர் சொல்கிறார் இரண்டு வருஷத்துக்கு முன்னாடி வந்தது. மாத்திரை கொஞ்சநாள் சாப்பிட்டா அப்புறம் விட்டுட்டா...
அவர் ஒரு நரம்பு பாதிக்கப்பட்ட நோயாளி.
(சரி அப்படி வலிப்பு நோய் இருந்தால் என்ன செய்வது நமக்கு அது சார் அறிவு இருக்கிறதா.
முந்தையக் காலத்துப் பெண்கள் போல் பிரசவ வலியைத் தாங்கும் ஆற்றல் நமக்கு இருக்கிறதா. 
அப்படி புதியதாய் தாங்கும் பொழுது அழுத்தம் அதிகமாகி அதனால் நரம்புகளின் துடிப்பில் வலிப்பு வந்தால் என்ன செய்வீர்கள். நாம் கடினங்களைப் பிறந்ததிலிருந்தே அனுபவித்திருக்கிறோமா..அதற்குத் தேவையான ஊட்டம் நமக்கு இருக்கிறதா.) கதைக்கு வாருங்கள்.
பிறகு கார்ப்பரேட் மருத்துவமனைக்கு ஆம்புலனிஸில் செல்ல பின்னாடியே பிரசவம் பார்த்த அந்தப் பெண் மருத்துவரும் இரவு ஒரு மணிக்குப் போகிறார். அட்மிட் செய்து செட்டில் ஆகி மூன்று மணிக்குத் திரும்புகிறார்.
அந்த மருத்துவர் காசிற்காகத்தான் போனாரா..ரெஃபர் பண்ணிவிட்டால் போதுமானது தானே. அவர் அறுவைசிகிச்சையில் குழந்தையை எடுத்திருந்தால் இத்தனை ரிஸ்க் இருக்காதே.

மாற்று மருத்துவத்தால் பலன் இல்லையா எனக் கேட்கலாம். இருக்கிறது. ஆனால் மாற்று மருத்துவர்களில் நேர்மையான திறமையான மருத்துவரைக் கண்டுபிடித்துவிட்டால் உங்களுக்குப் பலன் கிடைக்கும்.
அலோபதி மருத்துவத்தில் மருத்துவர் அரைகுறையாக இருந்தாலும் மருந்து வேலை பார்த்துவிடும்.
ஆனால் மாற்றுமருத்துவம் அப்படி இல்லை. சரியான மருத்துவர் இல்லை என்றால் பலன் கிடைக்காது. ஏனெனில் எந்த மூலிகை எதற்கு என்ற விழிப்புணர்வு நம்மிடம் இல்லை.
நமக்குத் தெரிந்தது எல்லாம் ஆண்மை விருத்திக்கான மூலிகை விளம்பரம், பிறகு பங்கஜ் கஸ்தூரி அதற்குப்பின் நாள்பட்ட மூட்டு வலி தைலம்.

அலோபதி மருத்துவத்தில் இருக்கும் வெளிப்படைத்தன்மை மாற்றுமருத்துவத்தில் ஏன் இருப்பதில்லை.
வல்லாரை மாத்திரை சாப்பிட்டால் ஞாபகசக்தி கிடைக்கும் என்று சாப்பிட்ட ஒரு சீசன் உண்டு. அவனவன் சாப்பிட்ட நேரத்திற்கு பூர்வ ஜென்மமே ஞாபகம் வந்தருக்க வேண்டும். வல்லாரை தனித்து என்பதைவிட பாலோடு கலக்கையில்  வீரியத்துடன் செயல்படும். இது போன்ற ஃபார்முலாக்கள் எத்தனை தெரியும். 
 சித்த மருத்துவர்களில் எத்தனை போலி உண்டு. அவர்களை மருந்துகளின் ரகசியங்களை வெளிப்படையாகச் சொல்லச் சொல்லுங்களேன். ஏதோ பொடி கொடுத்தார்னு சொல்லும் மக்கள் அது என்ன பொடினு கேட்பதில்லை ஏன்.
வீட்டில் சமைத்துச் சாப்பிடுபவர் கைது எனக் கிண்டல் செய்வது போல் வீட்டில் பிரசவம் பாருங்கள். தவறே இல்லை. அந்த உடல்வாகு உங்களிடம் இருக்கிறதா.
பிறந்தக் குழந்தைக்கு தொக்கு எடுப்பார்கள். கேள்விபட்டதுண்டா. உங்கள் கைக்குழந்தையை தொக்கு எடுக்கஅனுமதியுங்களேன்.
அந்தகாலத்து கிழவிகளுக்குத் தெரியும். தொக்கு காரணமா இல்லை எதுக்களிப்பு காரணமா என்று. வயிற்றைத் தட்டிச் சரியாகச் சொல்வார்கள்.
குழந்தை கர்ப்பப்பையில் இருந்தபடி வெளியே இருக்காததால் வாய்வழியே மூச்சுவிட காற்று உள்ளே போகும். உள்ளேபோனக் காற்று வெளியே வாய் வழியே வந்தால் கொஞ்சம் பருகிய தாய்ப்பாலோடு வரும். இது இயற்கை. அந்தக் காலத்துக் கிழவிகள் இது சும்மா போப்பா..னு ஒரு கசாயத்தை வச்சு ஊத்தி விட்டுறும். 
இதுக்கு இப்பொழுது தொண்டைக்குழிக்குள் குழாயை இறக்கி வாயில் வைத்து உறிஞ்சி அடைப்பை எடுக்கும் தாய்கிழவிகள் வந்திருக்கிறார்கள்.
இதை யாரும் சொல்வதில்லை.
அகில உலக குழந்தைகளில் இந்தியக் குழந்தைகளுக்கு விட்டமின் டி3 குறைபாடு எப்படி வந்தது. பிறந்தக் குழந்தைகளை ஏசியில் வைத்து சூரிய ஒளியைக் காட்டாத எத்தனைபேர் நம்மில் உண்டு.
கலாச்சாரம் உங்களுக்கு மாறவேண்டும்.
பண்பாடு என்று இன்னொரு தேசத்து இன்னொரு மண்ணின் நவநாகரிக பகட்டுபடாடோபித்தனம் வேண்டும் உங்களுக்கு.
பீட்ஸா வேண்டும். பர்கர் வேண்டும்.
வெறும் ஃபேஸ்புக் ட்விட்டர்களுக்கு கோ க்ரீன் கோஷம் வேண்டும்.
கார்ப்பரேட் குளுகுளு கடைகள் வேண்டும். விவசாயியின் நிறம்  மண் சகதி மார்க்கெட் தேவை இல்லை. 
நம்மாழ்வார் படமும் விவசாயம் காப்போம் கோஷமும் வேண்டும்.
சுருக்கமாக மாண்புமிகு நொண்ணைகளாக நாம் இருக்க வேண்டும்.
ஆனால் ஒரே இரவில் காவிரி வரவேண்டும்.
மழை வேண்டும். இயற்கை நமக்கு எல்லாவற்றையும் தர வேணடும்.
நோகாமல் பிரசவம் ஏற்படவேண்டும்.
எதற்கும் மெனக்கெடாமல் பலன்களை மட்டும் அனுபவிப்பது எப்படி.
தாத்தன் பாட்டிக்கு நடந்தது நமக்கும் நடக்கவேண்டுமானால் அவர்கள் வாழ்ந்த வாழ்வை நாம் வாழ வேண்டும்.
நமது சல்லித்தனத்தை நிறுத்திவிட்டு அதைப் பற்றி சிந்தித்து நகருதல் அவசியம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....