புஜ்ஜிமா அப்பளம்

காட்சி 1

தலைமைச் செயலகத்தில் உள்துறை அமைச்சரின் அறை.
வந்த ஃபோனில் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியானார் அமைச்சர்.

என்னய்யா சொல்ற..என்று ஃபோனில் கேட்டார்.
அதற்கு அந்த முனையில் என்ன சொன்னார்கள் என்று அருகில் இருந்த உதவியாளர்க்குக் கூட கேட்கவில்லை.

பெரிய பிரச்சினையாகுமேயா..என்றார்.
சரி விடு பாத்துக்கலாம். அப்பத்தான் இவைங்களும் அடங்குவாய்ங்க என்று சமாளித்து விட்டு அலைபேசியைத் துண்டித்தார்.

என்னங்கய்யா ஆச்சு என்றார் உதவியாளர்
ஒரு சம்பவம் யா என்றார்.
ஒரு டம்ளரில் தண்ணீர் ஊற்றி பிரஸ்ஸர் மாத்திரை ஒன்றை விழுங்குவதற்கும் சுகாதாரத்துறையிலிருந்து ஃபோன் வந்தது.

என்னங்க விசயம் வந்ததா என்றார்.
அந்தப்பக்கம் பேசியது இந்த முறை உதவியாளருக்கும் கேட்டது. பேசியதைக் கேட்க உதவியாளருக்கும் வியர்த்தது. இப்படி ஒரு சம்பவமா , இது இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நடக்க முடியாது நடக்கவும் வாய்ப்பில்லாதச் சம்பவமென அவர் உறைந்து கிடந்தார்.
கடைசியாக அந்த முனையில் பேசியவர் விடுங்க சார் அப்பத்தான் இவைங்களும் அடங்குவாய்ங்க. இந்தச் சம்பவத்துல ஏதாவது சிகிச்சைனு ஏதாச்சும் சம்பவம் நடந்துச்சுனா நம்ம மச்சினன் மருத்துவமனைல அட்மிட் பண்ணுங்க. சந்தோசப்படுவாப்புடி என பேச்சை முடித்தார்.

என்னங்கய்யா சொல்றீங்க உண்மையாவா என்றார் உதவியாளர்.
அட ஆமாயா.
நம்மூர்ல ஏதோ புத்தகக் கண்காட்சினு ஒண்ணு நடக்குதுல. அங்க இன்னைக்கு வாரக் கடைசினு எல்லா எழுத்தாளர்களும் சங்கமிச்சு ஏதோ பேசுற புரோக்ராம் போல. கல்வித்துறைல கூட அமைச்சர் போகுறதா இருந்து இன்னைக்கு கேன்சல் பண்ணிட்டாரு.
இப்ப அந்த கிரவுண்ட இழுத்து மூடி ஒரு தீவிரவாதக் கும்பல் அந்த அரங்கத்தைக் கைப்பத்திருச்சாம்.
50 பேருக்கு மேல இருக்கும்னு உளவுத்துறை சொல்லுதுய்யா.

ஐயா ..அந்தக் கும்பல் நக்சலா என்றார் உதவியாளர்.
என்னக் கருமமோ...
இல்லங்கய்யா, ஒரு நாட்டோட எழுத்தாளர்களைக் கொல்றது இப்ப சகஜமாயிருச்சு. அப்படி பண்ணா மக்களை வழிநடத்த ஆள் இருக்காதுனு நாட்டை அழிக்கனும் எவனோ பண்ணிருக்கான் ஐயா...அப்படித்தான் தெரியுது.

காட்சி 2.
புத்தகக் கண்காட்சி அரங்க வெளி மைதானம்.
மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
வெளியே எந்தக் கடையும் இல்லை. டீ குடிக்க கூட கடை இல்லை.
உள்ளே தீவிரவாதிகள் நுழைந்தனர் என்று வெளிவந்தச் செய்தி பொய். வெடிகுண்டு விழிப்புணர்வு எனச் செய்தி அரசாங்கத்தால் ஒளிபரப்பப்பட்டது.
வெளியே மீடியாக்கள் குவிந்தனர்.
காலை 11 மணி.
போலிஸ் குவிந்தது.
முக்கிய வழியான இன் அவுட் சாத்தப்பட்டிருந்தது. வாசலில் இரண்டு மஞ்சள் பைகள் கடந்தன. அது வெடிகுண்டு என பரப்பப்பட்டிருந்தது.
மக்கள் முழுதுமாக வெளியேற்றப்பட்டிருந்தனர்.
மீடியாக்களுக்கு விசயம் தெரியக்கூடாது. அதாவது மக்களுக்குத் தெரியக்கூடாது என்பதில் அரசு கனக்கச்சிதமாக இயங்கியது.
அந்த மைதானத்தைத் தவிர்த்து வெளியே உலகம் இயல்பாக இயங்கிக்கொண்டிருந்தது.
ஒரே ஒரு செய்தி சேனலில் மட்டும் புத்தகங்களைப் படிக்கவிடாமல் மாநில அரசு செய்யும் அடாவடித்தனம் என்ற தலைப்பில் நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருந்தது. கல்வித்துறையின் பினாமி என்பவர் பதிப்பகத்தார் என்ற லேபிளில் அரசு மக்களுக்கான அரசு என்று வாதிட்டுக்கொண்டிருந்தார்.
அந்தக் கண்காட்சிக்கு மீட்டிங்கிற்கு அழைப்பிதழ் அனுப்பப்படாத ஓர் எழுத்தாளர் புத்தகக் கண்காட்சி நடத்துவோரைக் கழுவி ஊற்றிக்கொண்டிருந்தார். நிகழ்ச்சியைத் தொகுப்பவர் இடைவெளியில் சமோசா சாப்பிடுவது கேமரா குழப்பத்தில் ஒரு நொடி காண்பிக்கப்பட்டது.

காட்சி 3

புத்தகக் கண்காட்சியின் முக்கியமான ஸ்டால்கள் இருக்கும் பகுதி.

 ஒரு குழுவால் வெடிகுண்டு வைக்கப்பட்டு ரிமோட் காண்பிக்கப்பட்டது. ஏகே 47 சரளமாக உபயோகிக்கப்பட்டது. 20 பேருக்கும் மேலே இதில் ஈடுபட்டிருப்பார்கள் என ஒரு ஸ்டாலில் அமர வைக்கப்பட்ட ஒரு கணித மேதை சொல்லிக்கொண்டிருந்தார்.
முக்கிய பதிப்பகத்தார் , முக்கிய எழுத்தாளர்கள், இணைய எழுத்தாளர்கள், இணைய வாசகர்கள், வளரும் எழுத்தாளர்கள், எழுத்தாளரின் விசிறிகள் , எழுத்தாளரின் அடிபொடிகள் , எனப் பகுதி பகுதியாக துப்பாக்கி முனையில் தனித்தனி ஸ்டால்களில் அமர வைக்கப்பட்டிருந்தனர்.

திமிறி எழுந்த சில வாசகர்களின் முகத்தில் காட்டுத்தனமான அடி விழுந்ததற்கானத் தடயமும் இரத்தமும் இருந்தன. ஒருவர் மயக்கப்பட்டுக் கிடந்தார். இன்னொருவர்  ஸ்டால்களுக்கு மையத்தில் கீழே கிடந்தார். அவர் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்று தெரியவில்லை.
குப்பறக் கிடந்தார். முதுகு மற்றும் வாயில் இரத்தம் தெரிவதாகவும் இது ஆபத்தின் அறிகுறி என உடலும் உயிரும் எழுதிய ஓர் எழுத்தாளர் பக்கத்தில் இருப்பவரிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.

எழுத்தாளர்களுக்கு ஏகே 47 அதிகம். நாங்கள் மென்மையானவர்கள். எழுத்தை எழுத்தாகப் பாருங்கள். ஒரு குண்டைத் தாங்கும் அளவிற்கு எழுத்தாளன் கனமானவன் இல்லை என ஒரு கவிஞன் சொல்வதைக் கேட்ட துப்பாக்கி வைத்திருந்தவன் மேல் நோக்கி ஏகே 47 ஐக் கதற விட்டான். அடுத்த ஸ்டாலில் இருந்தவர்களுக்கு அது அல்லையைப் பிடித்தது.

ஒரு மூத்த எழுத்தாளர் எழுந்து வந்து உங்கள் கோரிக்கையைக் கேட்க உங்கள் தலைவனிடம் என்னை அழைத்துச்செல்லுங்கள் என்றார்.
அப்படிச் செய்ய வேண்டுமென்றால் உங்கள் எழுத்தாளர்களை நொய் நொய் என்று சத்தம் போடாதபடி அமைதியாக இருக்கச் செய்யுங்கள் அப்பொழுது தான் அது நடக்கும் என்றான் ஒரு துப்பாக்கிக்காரன். இல்லாவிட்டால் இப்பொழுது கிடக்கும் ஒரு சடத்தைப் போல நீங்கள் எல்லோரும் கிடப்பீர்கள் என்றான் இன்னொருவன்.
உடனே அந்த மூத்த எழுத்தாளர், என்னை அந்த எழுத்தாளர்கள் இருக்கும்  ஸ்டாலுக்கு அழைத்துச் செல்லுங்கள். நான் மத்திய அரசிடமிருந்த சிறந்த புத்தகம் எழுதியதற்காக விருது வாங்கியவன். நான் சொன்னால் எல்லோரும் கேட்பார்கள் என்றார்.
ஒரு துப்பாக்கி முனையில் அவர் அழைத்துச்செல்லப்பட்டார்.
அவரைப் பார்த்ததும் நொய் நொய் எனப் பேசிக்கொண்டிருந்த எழுத்தாளர்கள் மத்தியில் அமைதி நிலவியது.
அவர் பேசலானார்.
நண்பர்களே..நம் எழுத்தின் சக்தி இப்பொழுது உலகம் பார்க்கிறது.
நம்மை பணயமாக வைக்கும் அளவிற்கு நம் எழுத்துகள் இருக்கின்றன. நம்மை இழந்துவிட்டால் இந்த நாடு இருட்டாகிவிடும். ஆதலால் யாரோஒரு நவீன தீவிரவாதி நம்மை அடைத்து வைத்திருக்கிறார். நாம் கொஞ்சம் அமைதியாக இருந்தால் அவர்கள் கோரிக்கையைக் கேட்டு அரசிற்குச் சொல்லி நாம் வெளியேறிவிடலாம் என்றார்.

அமைதியைக் கலைத்து ஒரு எழுத்தாளர் எழுந்தார். ஜிப்பா தாடி ஒரு கண்ணாடி ஒரு ஜோல்னா பை. ஆதலால் அவர் எழுத்தாளர் என்று இங்கு குறிப்பிடப்பட்டிருக்கிறது. நீங்கள் அரசிற்காகவும் இந்தத் தீவிரவாதிகளிடமும் எவ்வளவு வாங்கிக்கொண்டு இப்படி பேசுகிறீர்கள் என்றார்.
மூத்த எழுத்தாளருக்கு கண்களை உசத்தி அனுப்பப்பட்ட ஒரு ஸ்மைலி ஞாபகம் வந்தது.
நீங்கள் வாங்கிய விருதை உடனே திருப்பிக்கொடுத்து உங்கள் எதிர்ப்பைக் காண்பிக்காமல் இப்படியா அவர்களுக்கு வக்காலத்து வாங்குவது என்று ஓர் இளந்தாளி கூட்டத்தில் கத்தினான்.
மூத்த எழுத்தாளருக்கு இப்பொழுது வியர்த்தது.
போன மாதத்தில் ஒரு மாத இதழில் மூத்த எழுத்தாளர் நம்பிக்கை தரும் எழுத்தாளர்கள் என்று ஒரு பட்டியல் போட்டிருந்தார்.  அதில் ஏன் என் பெயரை  சேர்க்கவில்லை எனக் காரசாரமாக ஒரு எழுத்தாளர் அதே இதழில் இந்தமாதம் ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அந்த எழுத்தாளர் எழுந்து நீங்கள் விருதைக் காசு கொடுத்து வாங்கலாம். எங்களை அல்ல என்றார்.
பக்கத்தில் துப்பாக்கி வைத்திருந்தவன் மூத்த எழுத்தாளரை ஏற இறங்கப் பார்த்தான். மூத்த எழுத்தாளருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.
இப்பொழுது மூத்த எழுத்தாளருக்கு ஆதரவாக சில ஜிப்பாக்கள் எந்திரித்தனர். அவர்கள் மூத்த எழுத்தாளரின் கைகளைப் பற்றிக்கொண்டு ஏதோ பேச எழுந்தனர்.
துப்பாக்கிக்காரன் மேல் நோக்கி சுட்டான். சில குண்டுகள் தெறித்தன.
மறுபடியும் அமைதி.
இப்பொழுது எழுத்தாளர்கள் கூட்டம் இரண்டாக அமர்ந்திருந்தது.

ஒரு பதிப்பகத்தின் உரிமையாளர் எழுந்து வந்தார். பதிப்பகத்தார் காசு செலவளித்து ஸ்டால் போட்டிருப்பதாகவும் அங்கு மின் விசிறி இல்லை என்றும் எல்லா மின்விசிறிகளும் எழுத்தாளர்களின் ஸ்டாலுக்குள் இருப்பதை அனுமதிக்கமுடியாது என்றும் சில மின்விசிறி வேண்டும் எனக் கதறினார்.
எங்கள் மின்விசிறிகளில் நீங்கள் குளிர்காய்வதா என்று ஓர் எழுத்தாளர் பதாகையில் எழுதி காண்பித்தார். ஆனால் அவர் சொந்தமாக பதிப்பகம் வைத்திருப்பதாகவும் மற்ற எழுத்தாளர்களை மற்ற பதிப்பகத்திலிருந்து தன் பக்கம் இழுக்கத்தான் இதைச் செய்வதாகவும் இன்னொரு பதிப்பகத்தார் சொல்லிக்கொண்டிருந்தார்.

நாங்கள் எழுதி எழுதி பழக்கப்பட்டுவிட்டோம். எங்கள் ஃபோனை பறித்துக்கொண்டுவிட்டீர்கள். எழுத சில பேப்பர்களைத் தரச்சொல்லி ஓர் இணைய எழுத்தாளன் கேட்டான்.
சில பேப்பர்கள் வழங்கப்பட்டன.
துப்பாக்கிக்காரர்கள் குழுமியிருந்த மூலையை நோக்கி இன்னொரு துப்பாக்கிக்காரன் ஓடிவந்தான்.
பேப்பர் கொடுத்தது தப்பாகிப் போச்சு. என்றான்.
ஏன் என்னாச்சு...என்றான் இன்னொரு துப்பாக்கி.
எல்லாப் பயலும் எழுத ஆரம்பிச்சுட்டானுக...
அப்புறம் எப்படி சத்தம் கேக்குது..
எழுதுனத அவைங்களே படிச்சு வாவ்..வாவ் னு சொல்லிக்கிறானுக....
ஐயயோ..
இது பரவால...துப்பாக்கி முனையில் ஒரு பேனா ன்ற தலைப்பில் ஒரு கவிஞன் இருபது பக்கத்துக்கு எழுதி அடிஸ்னல் பேப்பர் வேணும்னு கேட்டார். கொடுத்தேன். இப்ப இன்னொருத்தர் அந்தக் கவிதைய சத்தமா வாசிக்க மத்தவங்கலாம் அழுறாங்க...
அப்புறம் எப்படியா சத்தம் கேக்குது....
அந்தக் கவிதைல துப்பாக்கி முனைய ஏத்துக்குற மாதிரி இருக்கு இவர் ஒரு தீவிரவாதியின் கைப்பிடி னு ஒரு க்ரூப் ஃபார்ம் ஆகிருக்கு ..
யோவ் போய் அந்தக் கவிதை பேப்பர கிழிச்சு போடுயா...
பிறகு அங்கு ஓடியவன் கவிதை பேப்பரைக் கிழித்து போட்டான். சில எழுத்தாளர்கள் அது போல் எழுத ஆரம்பித்து ட்ரெண்டிங்க் செய்தார்கள்.
இப்பொழுது கூட்டம் மூன்றாக அமர்ந்திருந்தது.

ஒரு கவிஞன் தன் கவிதையை ராக்கெட் போல் செய்து பறக்க விட அது எல்லோர் கைகளுக்கும் போனது. அவன் அந்த ஒரு கவிதையவே எல்லாக் காகிதத்திலும் எழுதி எல்லோருக்கும் பறக்கவிட்டான். எல்லோர் கையிலும் இந்தக் கவிதை சேர்ந்ததைப் பார்த்த இன்னொரு கவிஞன் நேராக துப்பாக்கிக்காரனிடம் வந்து, இதுலாம் கவிதையே இல்லை. இதை எழுதியவனை நீங்கள் சுடலாம் என்றான்.
துப்பாக்கிக்காரன் அப்படி என்றால் கவிதை எப்படி இருக்கும் எனக்கேட்க தன் பராக்கிரமத்தால் எழுதிய ஒரு கவிதையைக் கவிஞன் காண்பித்தான்.
இருபது வரிகளுக்கு எழுதிய அந்தக் கவிதை அவனுக்குப் புரியவே இல்லை.
இதை யாருக்காக எழுதுகிறாய் என்றான் துப்பாக்கிக்காரன்.
வாசிக்க என்றான் கவிஞன்.
யாருக்கு என்றான் துப்பாக்கி
என் கவிதையைப் படிப்பதற்கென்று ஒரு அறிவு வேண்டும். எல்லோரும் படிக்கமுடியாது என்று ஐந்து நிமிடத்திற்கு பேசத் தயாரானான் கவிஞன்.
சில ஏகே 47 குண்டுகள் தெறித்தன.
ஆனால் கவிஞனைச் சுடவில்லை.
சுடாமல் விட்டது தப்பு என்று நாவலாசிரியர்கள் கத்தினார்கள்.
இப்பொழுது கூட்டம் நான்காக அமர்ந்தது.

ஒவ்வொருவரும் தனித்தனியாகச் சண்டையிட ஆரம்பித்தார்கள். இணைய எழுத்தாளர்கள் இந்தச் சண்டையைப் பதிவு செய்ய போட்டி போட்டார்கள்.
மெல்ல துப்பாக்கிகளின் தலைமை துப்பாக்கி வெளியே வந்தது.
எங்களை விட மோசமான எண்ணக்காரர்களாக இவர்கள் இருப்பார்களோ என்று சந்தேகத்துடன் அது பார்த்தது.
நெற்றியில் சந்தனமிட்ட ஒரு எழுத்தாளன் எழுந்து வந்தான். உங்களை வெறுப்பேற்றும் சில எழுத்தாளர்களை எனக்குத் தெரியும். அவர்களை நாலு மிதி மிதியுங்கள் நீங்கள் நினைத்தது நடக்கும் . எல்லாம் ஷேமமா இருக்கும் என்று சொல்லி முடிப்பதற்குள் தலைமை துப்பாக்கி அவர் வாயில் இரத்தத்தை வரவைத்தார்.

காட்சி 4

உள்துறை அமைச்சருக்கு உளவுத்துறை மூலமாக பயங்கரவாதிகள் யாரென்று விவரம் தெரியவந்தது.
இதே போல் போன வருடம் நடந்த புத்தகத் திருவிழாவில் பாதிக்கப்பட்ட ஒரு கும்பல் கூலிப்படையுடன் களம் இறங்கியிருப்பதாகச் செய்தி வந்தது.
அப்படி போன வருடம் என்ன நடந்தது என அமைச்சர் கேட்க உளவுத்துறை ஐஜி சொன்னது ஆச்சரியத்தையும் வேதனையையும் தந்தது.
போன வருடத்தில் புத்தகத் திருவிழாவிற்கு அலைமோதிய கூட்டம் புத்தகம் வாங்காமல் அப்பளம் மிளகா பஜ்ஜி இவற்றை வாங்கி நேரத்தைச் செலவழித்ததாகவும், புஜ்ஜிமா அப்பளம் தான் அதில் கல்லா கட்டியதாகவும் அந்த புஜ்ஜிமா அப்பளக்கடை முன் செல்ஃபி சகிதம் அப்பளம் வாங்கி வைத்துக்கொண்டு டிக்டொக் என சேல்ஸ் கல்லா கட்டியதில் சில எழுத்தாளர்கள் இணையத்தில் பொங்க ஆரம்பித்திருக்கிறார்கள்.  அப்பளம் நாட்டுக்கு எதிரி என்ற தலைப்பில் ஓர் இதழ் ஓர் எழுத்தாளருக்கு எழுத வாய்ப்பு தந்தது. எழுத்தாளர்களும் பதிப்பகத்தாரும் அந்த அமைப்பும் கலந்தாலோசித்து விற்காத புத்தகங்களை விற்க வேண்டும் என்றால் அப்பளம் பஜ்ஜி கடைகளை போடக்கூடாது என முடிவெடுத்து இந்த வருடம் வெறும் புத்தகக் கடைகள் மட்டும் அமைத்திருக்கிறார்கள். இதனால் வெறுப்படைந்த அப்பள வியாபாரிகள் பானிபூரி மிளகா பஜ்ஜி வியாபாரிகளின் கூட்டமைப்பு குஜராத் பீஹார் பானிபூரிக்காரர்களை உதவியாய் வைத்துக்கொண்டு களம் இறங்கியிருக்கிறார்கள்.
அப்பளத்தை அனுமதித்தால் எழுத்தாளர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்பது தான் முதல் கோரிக்கையாம்.
இரண்டாவது கோரிக்கை தான் கடினமானதாம். எழுத்தாளர்கள் எழுதுவதோடு நிறுத்திக்கொள்ளவேண்டுமாம். பேசினால் தாங்கமுடியவில்லையாம்.

சுபம்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....