ஆண்டவரே....

எப்படி ஒரு
சிலுவையைத்
தாங்குகிறீர்கள்
ஆண்டவரே..
விரும்பியேற்றுக்கொண்ட
ஒன்றைப்போல
அதையும் ஏற்றுக்கொண்ட
வலியை
எப்படித்தாங்குகிறீர்கள்
ஆண்டவரே..
போலி புன்னகையின்
பரிசாக
ஒரு துரோகத்தின்
பரிசாக
வலியை
எப்படித் தாங்குகிறீர்கள்
ஆண்டவரே..
உங்கள் மீது
மழைத்துளி
விழுந்ததுண்டா..
சிலுவையில் விழுந்த
அதே துளியின் 
பாரவலியை 
எப்படித் தாங்குகிறீர்கள்
ஆண்டவரே...
யாரேனுமொருவர்
கனிந்து
உங்களிடம் பேசியது
உண்டா
ஆண்டவரே...
உங்கள் சிலுவையின்
வலியை
அவர்களிடத்துச் செவிகளில்
உங்களால் சேர்க்கவியலாத்
துயரத்தை 
எப்படித் தாங்குறீர்கள்
ஆண்டவரே...
யாரேனுமொருவர்
கருணையுற்று
உங்களைக் கண்டதுண்டா..
அவர்களிடத்து நின்று
கூடு இழந்த
ஒரு தாய்க்குருவியின்
சிறகடித்தலைச்
சொன்னதுண்டா 
ஆண்டவரே...
எந்தப் பாவத்திற்கான
தண்டனை
இந்தப் பாழாய்ப்போன
அன்பை யாசித்தலென
ப்ரியமானவர்களிடம்
யாசித்ததுண்டா
ஆண்டவரே....
இத்தனை
சிலுவைகளை
எப்படித் தாங்குகிறீர்கள்
ஆண்டவரே..
 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....