சுற்றுச்சூழல் தினம் - செய்தி

மதுரையிலிருந்து அழகர் கோயில்போகும் வழியில் ராமசந்திரமிஷன் என்று ஒரு ஆசிரமம் இருக்கிறது. கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபொழுது நாட்டு நலப்பணித்திட்டத்தில் இருந்தபோது அந்த ஆசிரமத்தில் மரம் நடுவிழா என்று போயிருந்தோம். சரியாம ஒரு நாள் முழுக்க வேலை நடந்தது. பத்து நாட்கள் கழித்து மறுபடியும் சென்றோம். இப்பொழுது நாம் அழகர்கோயில் போகும்வழியில் பார்த்தால் ராமசந்திரமிஷனின் பக்கவாட்டில் இருக்கும் அடர்த்தியான மரங்கள் தெரியும். அவை தான் நாங்களும் எங்கள் நண்பர்களும் மண் ஒதுக்கி பள்ளம் தோண்டி நட்டுவைத்தவை. 1999ல் வெறும் கட்டிடம் மட்டும் தான் இருந்தது. இப்பொழுது கட்டிடம் தெரியாத அளவு மரங்கள் தெரிகின்றன. அதேபோல் ஒரு முறை ராமக்ருஷ்ண மிஷன் அழைத்திருந்தார்கள். இப்பொழுது இருப்பது போல் கட்டிடங்கள் அப்பொழுது இல்லை. குடிசை அமைப்பு தான் இருந்தது. ஆனால் முன்பக்க பக்கவாட்டு மரங்களும், பக்கவாட்டுத் தோட்ட அமைப்பிற்கு மண்ணும் தண்ணீர் போக வாய்க்காலும் அப்பொழுது ஒரு நாள் தியாகராசர் கல்லூரி மாணவர்களாகிய நாங்கள் பார்த்தது தான். அன்று வந்த மாணவர்களுக்கு நான் தான் பொறுப்பாளர். பொதுவாக நாட்டு நலப்பணித்திட்ட நிகழ்வுகளில் மாணவர்களுக்கு உணவு வழங்கப்படும். எங்கு போகிறோமோ அங்கு அல்லது கல்லூரி சார்பாக, இரண்டு முறை ராமசந்திரமிஷன் போனபோது நல்ல சாப்பாடுகிடைத்தது. ராம க்ருஷ்ண மிஷன் போனபோது சரியான தகவல் தொடர்பு இல்லாமல் காலை 9 மணியிலிருந்து ஒரு மணி வரை ஒரு டீ கூட வரவில்லை. ஒரு மணிக்கு நாங்கள் சாப்பாடு தருவதாகச் சொல்லவில்லையே என்று ராமக்ருஷண மிஷன் கைவிரித்திருந்தது. ஏற்கனவே எனக்குத்தெரிந்த ஒரு அண்ணன் துறவியாய் அங்கு இருந்தார். அன்றிலிருந்து ஆறுமாதங்களுக்கு முன்னர் தான் கல்கத்தா போயிருந்தார். அவர் இருந்தபோது என்னை ஒருமுறை சாப்பிட்டுப்போ என்று உணவளித்திருந்தார். சாப்பாடு அருமையாக இருந்தது. தோட்டவேலையின்போது இதைச் சொல்லி நண்பர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்றி வைத்திருந்தேன். ஆனால் மதிய உணவு அங்கு இல்லை என்றதும் நடந்துவந்து பொது அலைபேசி மூலம் கல்லூரிக்குச் செய்தையை வெளிப்படுத்த எங்கள் பேராசிரியர் இனி அங்கு போகவேண்டாம் என்று சொல்லி அவரது சொந்தப் பணத்தை உடனே என் கையில் கிடைக்கச்செய்து மாணவர்களுக்கு மதிய உணவு ஏற்பாடுசெய்தோம்.ஆனால்ராமக்ருஷ்ண மிஷன் முன் நின்று பார்த்தால் அந்தப் பசியின் ஞாபகத்தை விட அங்கு இருக்கும் செடிகள் தான் ஞாபகம் வருகிறது. நாம் ஒன்றை உருவாக்கி வைத்துப் பழகிவிட்டால் கிடைக்கும் போதை அது. இப்பொழுதும் வாக்கர்ஸ் க்ளப்பிற்குள் நிர்வாகம் பல மரங்களை நட்டு வைத்திருக்கிறது. அந்த இடத்திற்கு எவ்வளவு பெரிய இடங்களிலிருந்து எல்லாம் ஆக்கிரமிப்பு வந்தது என்றும் அதை இப்போதைய நிர்வாகம் தடுத்து மரங்களை நட்டுவைத்துப் பராமரிக்கிறது என்பது ஆச்சரியமான விசயம். அவர்களுடன் கைகோர்த்துப் பயணிப்பது என்பது கூட அந்த மரங்களுக்காகவும் சூழலுக்காகவும் தான். இந்தப் பூமி வெறும் மனிதர்களுக்கானது மட்டும் அல்ல. நாம் என்பது நாமும் பறவைகளும் விலங்குகளும் மரங்களும் சேர்ந்தது தான்.
நம் சுற்றுச்சூழல் என்பது நாம் மட்டும் இருந்துவிட்டுப்போககூடியது அல்ல. நம் அடுத்த தலைமுறைக்கும் விட்டுச் செல்லவேண்டிய பெரிய பொக்கிஷம். அதற்கான இயற்கை வளங்களை மேம்படுத்தவும், பாதுகாக்கவும் நமக்குக் கடமை இருக்கிறது.
பறவைகளை வேட்டையாடினோம். வெட்டுக்கிளிகள் படை எடுக்கின்றன.
காடுகளை அழிக்கிறோம். விலங்குகள் வெளியே வருகின்றன. ஒரு யானை ஒரு காட்டை உருவாக்கும் . அந்த யானைக்கும் உண்ணும் உணவில் வெடி வைத்து அது துடித்து இறப்பதை வேடிக்கைப் பார்க்கிறோம்.
ஒரு பாம்பு ஒரு வயலில் திரியும் எலியைப் பிடித்து பயிர் அழிவதைக் காக்கிறது.
இந்தப் பிரபஞ்சம் உணவு சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ளது.  மனிதனைத் தவிர எந்த உயிரினமும் அதை உடைப்பதில்லை. எந்த உயிரினமும் மனிதனைத் தேடிவந்து மனிதனைத் தாக்குவதில்லை. மனிதனைக் கொல்ல வேண்டும் என்று பேராசை பிடித்துத் திரிவதில்லை. மனிதன் மகத்தான சல்லிப்பயல் என்று எழுத்தாளர் ஜி.நாகராஜன் என்றோ சொல்லிச் சென்றுவிட்டார். நாம் நிதமும் நிரூபித்துக்கொண்டிருக்கிறோம்.
இனியாவது மாறிக்கொள்வது அவசியம். புவி வெப்பமயமாதல் உலகின் மிகப்பெரிய அச்சுறுத்தலாய் இருக்கிறது. மரங்களை நடுதலும், இருக்கும் வனங்களையாவது காப்பதும் நம் கடமை.
இங்கு நாம் வந்திருப்பது ஒரு வாடகை வீடு போல. இருக்கும் உடைமைகளைச் சேதப்படுத்தாது, பயன்படுத்திவிட்டு அப்படியே இந்த இயற்கைக்கும் அடுத்த நம் தலைமுறைக்கும் கொடுத்தாகவேண்டும்.

பறவைகளைப் பற்றி , தாவரங்களைப் பற்றி, விலங்கினங்களைப் பற்றி அவற்றின் அவசியத்தைப் பற்றி, நீர் நிலைகளைப் பற்றி , காடுகளைப் பற்றி நாம் தெரிந்துகொள்வதுடன் நம் குழந்தைகளுக்கும் தெரியப்படுத்தவேண்டும்.
இந்தச் சுற்றுச்சூழல் அவர்களுக்கானதாய் இருக்கவேண்டும். நாம் இல்லாமல் போனாலும் இருக்கக்கூடியது இந்த இயற்கை தான். அதை அழித்துவிட நமக்கு உரிமை இல்லை.

அனைவருக்கும் சுற்றுச்சூழல் தின வாழ்த்துகள். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....