அ.நா 301

மழையற்ற ஒரு நெடுஞ்சாலையை
நான்குவழிச்சாலையென
நீட்டி வெட்டி முழக்க
வெற்றிடமாய் இருக்கும்
ஒரு பாலையின் நீள் பாதையாய்
யாருமற்று இருக்கும் இத்தனிமையை
நீங்கச் சொல்பவர்களே,,,

மழையெனச் சொன்னால்
முழுதும் நனையவும்
கடலெனச் சொன்னால்
முழுதும் மூழ்கியெழவும்
இருக்கும் நடிப்புக்கலைஞர்கள்
இன்னொரு நாள் இன்னொரு மழை
மற்றொரு நாள் மற்றொரு கடலென
திளைத்துத் திரிபவர்கள்.

கேமரா ஃப்ளாஷ்களின் முன்
இமை அசைவற்றுச் சிரிக்கும்
உயிர் பொம்மையினங்கள் அவர்கள்..
வெறும் வாயசை சமிக்ஞைகளுக்கு
எல்லாம் மொழிகளையும் பொருத்தித் திரிவார்கள்.

பூக்களின் நடுவே பூக்களாய் ஆடை
கடலினடுவே நீர் போன்றாடை
மையிட்டு மையல் கொண்டபடி பெண்ணும்
அவள் கைகளுக்குள் விழும் ஆணுமென
நவநாகரிக கார்ப்பரேட் காதலர்களாய்த் திரிவார்கள்..

வெண் திரை முழுக்க
வண்ண வண்ணமயமாய்
எல்லாப் பக்கமும் சத்தமென
டால்ஃபி சத்தங்களுக்குள்
விழுந்து எழுந்து உயிர்ப்பிக்கும்
திரையரங்குகளில்
ஒளிர்ந்து
இன்னொரு நாள் இன்னொரு படமென
மறைபவர்கள் அவர்கள்..

முதல் நாள் மாலை பாலென
ஆச்சாரக் காட்சியெல்லாம்
திரை அமர்ந்த
நடுநிசி நேரத்தில்
ஓசையற்ற ஒரு தருணமென
ஏதுமற்றுக் கிடக்கிறது
அவளற்ற இந்தத் தருணம்.

எல்லாச் சுவர்களும்
வலிந்து இறைக்கின்றன
நடந்து முடிந்தக் காட்சியின்
மாபெரும் நினைவுகளைத்
தனிமையின் ஓலமாய்....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....