விளையாடற்காலம் - விமர்சனம்.

கவிஞர் ஆத்மார்த்தி எழுதிய கவிதைத் தொகுப்பு "விளையாடற்காலம்" என்ற புத்தகத்தை முன் வைத்து...

தோழர் ராமதாஸ் சென்றாயன் ஏற்பாடு செய்த விடுதலை இலக்கிய பேரவையின் முதற் கூட்டத்தில் "விளையாடற்காலம்" தொகுப்பைப் பற்றி வழங்கிய விமர்சனமும் அது சார் எழுதிய முழு வடிவமும்.

பொதுவாகக் கவிதை என்பது உளவியல் ரீதியாக எழும்பப்படும் அல்லது எழுப்பப்படும் ஓர் உணர்வு அதிர்வலை.  மிகச் சுருக்கமாக என் பாணியில் சொல்வது என்றால் ஒரு குழந்தையிடம் தூக்கிப் போடப்படும் ஒரு பந்தைப் போன்றது.
ஒரு கவிதையின் நல்ல வாசகனுக்கு அந்தக் குழந்தை ஓர் உருவகம் என்பேன்.
குழந்தையிடம் விழும் அந்தப் பந்தை அந்தக் குழந்தை எடுத்துச் சிலாகிக்கும். சில குழந்தைகள் அந்தப் பந்தை எடுத்து கைகளால் உருட்டி விளையாடும். சில குழந்தைகள் அந்தப் பந்தை திரும்பி நம்மிடம் எடுத்து எறியும்.
சில குழந்தைகள் எப்போதோ எறியப்பட்ட அந்த பந்தை நினைவில் வைத்துக்கொண்டு கையில் கிடைக்கும் பாத்திரங்கள் காகிதத் துண்டுகள் அலைபேசிகள் பொம்மைகள் என எல்லாவற்றையும் பந்தாக நினைத்துக்கொண்டு தூக்கி எறிந்து விளையாடும்.

அது போல் தான் ஒரு கவிதையின் வாசகனும். ஒரு கவிதையைக் கண்டு சிலாகிக்கிறான். எப்போதோ கண்ட காட்சியை அல்லது படித்தக் கவிதையை தான் காணும் காட்சியுடன் சிலாகித்து பரவசமடைகிறான். கவிதை அப்படிப்பட்ட உளவியல் நிர்மாணங்களை கட்டவிழ்க்கிறது. இது போன்ற சாத்தியங்கள் இந்த ஆத்மார்த்தியின் "விளையாடற்காலம்" தொகுப்பிலும் ஏற்படுகிறது.

ஒரு வியாபாரியான என் பார்வையில் சொல்வதென்றால் எண்பது ரூபாய்களுக்கு 63 கவிதைகள் என்பது சராசரியாக ஒரு கவிதையின் விலையை ஒண்ணே கால் ரூபாயாக மாற்றுகிறது. ஒரு காப்பி சாப்பிடுவதைக் காட்டிலும் ஒரு கவிதை படிப்பது பரவசமான வாய்ப்பு என்பது காப்பி குடித்துக்கொண்டே கவிதை படிப்பவர்களுக்குத் தெரியும்.

அடுத்ததாக ஒரு கவிதையின் வாயிலாக, அல்லது ஒரு கவிஞ்னின் கவிதைத் தொகுப்பின் வாயிலாக வாசிப்பின் உலகத்திற்கு வரும் பல வாசிப்பாளர்கள் என்னைப்போல சிலருண்டு. அவர்களை இப்பொழுது மிரட்டிப்போடும் வாசகம் ஒன்று 'பின் நவீனத்துவம்". கவிதைகளில் பேணப்படும் பின் நவீனத்துவம் சமீப காலங்களில் சில கவிஞர்கள் தனக்குத் தெரிந்த சொற்களஞ்சியதைத் தெரியப்படுத்தும் பொருட்டே வார்த்தைகளின் சேமிப்புக் கிடங்காக மாறி வருகிறது. மிகப் பெரிய வாழ்வியலின் தத்துவத்தை சமூக அவலங்களை சாமான்யனுக்குப் புரியாத மொழியில் பேசுவதில் சிலர் உடன்படுவதில்லை. ஆனால் ஆத்மார்த்தியின் "விளையாடற்காலம்" தொகுப்பில் அப்படியான சிக்கல் இல்லை. எளிய சொற்களின் மூலமாக கவிஞர் ஆத்மார்த்தி சாமான்யனின் கைகளைப் பற்றிக் கொண்டு அவரது உலகத்திற்கு நுணுக்கமான வழியில் அழைத்துச் செல்வதுடன் இல்லாமல் அதே சாமான்யனின் உலகத்தை அவனது கண்களுக்குப் புலப்படாத வாழ்வியலின் அத்தனைக் கூறுகளையும் தன் புனைவு எழுத்துகளால் காண்பித்துக்கொடுக்கிறார்.
பென்சில் சித்திரம் என்ற கவிதையில்

டோல்கேட்டில பென்சில் விற்கும்
2ஆவது 3ஆவது பட்டன் களுக்குப் பதில்
ஊக்குகள் அணிந்திருக்கும்
வண்டார்குழலியின்
மேற்சட்டை வலதோரத்து
எம்ப்ராய்டரி மலரின்
பிரிந்த நூலென விரிகிறது
அவளுக்குப் பின்னான சாலை

அன்றாடம் காணும் காட்சியில் தவறவிடும் பொழுதுகளை மிகைப் படுத்துகிறார். மிகைப் படுத்துதல் என்பது காட்சிகளை எளிதாகப் புலப்படவைக்கவும் புரியவைக்கவும் உதவியாக அமைகிறது.

கவிதைகளில் ஒரு முன்னுரையையும் கதைக் களத்திற்கான உச்சக் காட்சிகளைக் கொண்டு வருதலும் பின் அதற்கான முடிவுரையை வரைதலும் அபூர்வமான ஒன்று. சிறுகதை வடிவில் சில கவிதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன.

குழந்தைக்குச் சொல்ல ஒரு கதை என்ற கவிதையில் உறங்க இருக்கும் ஒரு குழந்தைக்கு அம்மா சொல்லும் ஒரு கதை. தன் முறிந்து போன கடந்த காலத்து காதல் கதை. மெத்தையில் படுத்தபடி கை கால்களை உதைக்கும் குழந்தைக்கு வரி எழுதுகையில் ஒரு மெத்தையிலிருக்கு குழந்தையை நம்மால் மனக்கண்களால் காண வைத்ததோடு அல்லாமல் அதன் மொழியாக 'ங்கே" என ஒலியை எழுப்பி நம் காதில் ஒரு மழலை மொழியை ஏற்படுத்துகிறார்.

தன் கதைக்குத் தர இயலாத முத்தங்களை உறங்கத் தொடங்கும் குழந்தையின் கன்னங்களில் தந்து விலகுகிறாள்

என்ற ஒரு வரியில் அந்தக் கவிதையின் பின்புலச் சோகம் அவிழும்.

கவிதையின் விமர்சனமாக வைக்கும் களங்கள் அந்தக் கவிதையின் உயிர் நாடியான படிமம் மற்றும் குறியீடு ஆகியவை தான்.

விக்கிரமாதித்யன் ஐயா சொல்வது போல் நம் இனத்தவருக்கு ஒரு கவிதையைப் படித்தாலே அதாவது வாசித்தாலே அதன் சிறப்புகளையும் உணர்வுகளையும் நம்மால் உணரமுடியும். ஆனால் எப்பொழுதும் ஆராய்ந்து கொண்டே இருக்கும் மேலை நாட்டு மூளையானது மேலை நாட்டு இலக்கியத்தையும் ஆராய முனைந்தது. அதன் விளைவு நம்மவர்களும் நம் மொழியின் படைப்பியல்பை ஆராய முனைந்தனர். ஓரளவிற்குக் கவிதையை பகுத்து ஆராய்தல் மொழியின் வளர்ச்சிக்கு உதவ ஆரம்பித்தது. அப்படி அறிஞரகள் அடுக்கி வைத்தது தான் படிமம், குறியீடு.

ஆத்மார்த்தியின் "விளையாடற்காலம்" தொகுப்பில் படிமங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன.
லூயில் என்ற ஐரோப்பிய மொழியியலாரின் கருத்துப்படி படிமம் என்பது சொற்களால் வரையப்படும் ஓவியம்.
பிரமிள் சூத்திரப் படி சொல்வது என்றால் வர்ணிப்பு.
பொதுவான புரிதலுக்காகச் சொல்வது என்றால் காட்சிப்படுத்துதல்.
ஆனந்தி இரயிலில் பயணிக்கிறாள் என்ற கவிதையில் வரும் காட்சிப்படுத்துதலில் இருப்பது படிமமே..
அதில் வரும் குறியீடாக ஆனந்தியும் இரயிலும் சொல்லலாம்.
கடைசி வரியில் வரும்
இரயில் ஞாபக இருளைக் கிழித்தபடி விரைகிறது
என்பது அழுத்தமான படிமக் குறியீடு..

காளவாசல் சிக்னல் என்ற கவிதை காட்சிப்படுத்துதலின் அதீதம். ஆத்மார்த்தியின் மொழியில் சொல்வது என்றால் மகா உன்னோதம்.

ஒரு வாளை ஏந்திக் கேட்கவேண்டியதை செருகிய கண்களில் தேங்கும் உயிருடன் வான் பார்த்தபடி சேலைத்தூளியில் தோன்றுகிற சிசு முகத்தைக் காட்டி வேண்டி நகர்கிறாள் ஒரு யாசகி.
பச்சை கண்டு விரைகின்றன சக்கரங்கள்..
காட்சிபடுத்துதலின் படிம வரிகளைக் கடந்து ஒரு எதார்த்தம் முடிக்கிறது கவிதையை.

எதார்த்தங்களைச் சொல்லாத இலக்கியம் இலக்கியத்தின் சிறப்பைப் பெறாது என்பது நியதி. சமகாலச் சமுதாயச் சிக்கலை , வாழ்வியலின் துன்பியல் நிகழ்வுகளை எழுதுதல் படைப்பாளியின் மகாக் கடமை.

ஒரே ஒரு போனஸ் என்ற கவிதையின் போனஸ் வாங்கப்போகும் ஒரு வேலையாளின் பணத்திற்கான அல்லது தேவைக்கான கட்டமைப்பும் அதில் இருக்கும் போதாமையின் ஏக்கமும் எனச் செறிந்து கிடக்கும்.

கொல்லப்பட்டவனின் கடவுள் கவிதையில் கடவுளுக்குக் கமிஷன் தருவதாக இருக்கும் கவிஞரின் புனைவும்
தடை செய்யப்பட்ட ஒருவன் கவிதையில் வரும் ஒரு சாமான்யன் செய்ய முடியாததை ஆனால் செய்ய நினைத்ததை புனைவாக எழுதியிருப்பது சமகாலச் சூழலின் அபத்தங்கள்.

கவிதைகளில் அங்கதச் சுவையாக கேலி வருவதுண்டு.  ஞானக்கூத்தனின் கவிதைகளில் ஒன்று

திண்ணை இருட்டில் எவரோ கேட்டார்.
தலையை எங்கே வைப்பதாம் என்று
எவனோ ஒருவன் சொன்னான்
களவு போகாமல் கையருகே வை ....

இது போன்ற பாணிகளில் சில வரிகள் " விளையாடற்காலம்" தொகுப்பில் வருவதுண்டு.
கவிதைகளைத் திருடுபவன் என்ற கவிதை அந்த ரகத்தின் விளிம்பில் தொங்கி ஆராய்ந்தால் கரை சேரும்.

ரோஜா வண்ண தோல் தெரியும் நாய்
செம்பழுப்பு நிறத்திலான தினம்
ஒரு கற்சுவரை உதறிப் புறப்படும் பறவை

இப்படி உவமைகளால் வர்ணிக்கப்படும் ஓவியமாகக் கவிதைகள் செய்யப்பட்டிருக்கின்றன. ஒரு வாசகனின் பார்வையில் செய்யப்பட்டிருக்கின்றன என்ற வார்த்தை ஏற்கப்பட்டாலும் படைப்பாளிகளின் பார்வையில் கவிதைகள் செய்யப்படுவதில்லை. உருவாகின்றன என்பது தான்.

சிலப்பதிகாரத்தில் அனைவருக்கும் தெரிந்த வரி வாரல் என்பன போல் மறித்து கை காட்ட என்பது.
தானாக நடக்கும் ஒரு இயற்கையான நிகழ்வின் போது படைப்பாளி தன் எண்ணத்தை புனைந்து சொல்வது. அணிலின் தற்செயலான பயத்தை அல்லது இயல்பை தன் வருகையோடு ஒப்பிட்டு கூறுவது எல்லாம் அதே பாணியாக இந்தத் தொகுப்பில் உருவாகி இருக்கிறது.

ஒரு வார்த்தை கொண்டு ஒரு வரி கொண்டு நெய்யப்பட்டு முழு உரு பெற்றவுடன் ஒரு கவிதை ஏற்படுத்தும் மன அதிர்வலைகள் அனேகம். அப்படியான ஒரு மன அதிர்வு "விளையாடற்காலம்" தொகுப்பில் வருவதுண்டு.

கோடைக் காலத்திற்கான மலை வாசஸ்தலங்களைப் போல் மனம் உடைந்த பொழுதுகளுக்கெல்லாம் கவிதை வடிகால் என எண்ணுபவர்களுக்கு சில புத்தகங்கள் அருள் பாலிக்குமெனில் "விளையாடற்காலமும் அருள் பாலிக்கும்.

அழகியலின் நுணுக்கங்களை வார்த்தைகளாக வடிப்பதில் கீட்ஸின் கூற்று மறுபடியும் உயிர்ப்புடன் இருக்கிறதென்றால் அதை ஆத்மார்த்தியின் "விளையாடற்காலம்" வாழ்வியலைப் பாடியிருக்கிறது.


 " THE POETRY OF THE EARTH IS NEVER DEAD" - JOHN KEATS.


ப்ரியமுடன்..
பழனிக்குமார்...


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....