அன்புள்ள ராஜேந்திரன் சார் அவர்களுக்கு,

வணக்கம்.

உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்.
குறிப்பாக உங்கள் உற்சாகத்தை. எப்பொழுதும் துறுதுறுவென இருப்பது மிகவும் பிடித்தமான ஒன்று தான் எனக்கு.
உங்களுக்கு வயது எண்பது இருக்கும் என்று என்னுடன் காலையில் நடைப் பயிற்சி மேற்கொள்ளும் ஒரு நண்பர் சொன்னார்.

நீங்களும் நான் நடக்கும் நடையாளர் கழகத்தில் தான் நடக்க வருவீர்கள். ஒரு டீ ஷர்ட் ஒரு முக்கால் ட்ரவுசர் என நீங்கள் மெதுவாக நடப்பீர்கள். உங்களை எப்பொழுதும் தனியாகப் பார்த்ததில்லை. உங்களுடன் குறைந்த பட்சம் இரண்டு நண்பர்களாவாவது நடப்பார்கள். எப்பொழுதும் நீங்கள் ஒரு கலகல வகையறா என்பதை உங்களுடன் நடப்பவர்களின் முகத்தைப் பார்த்தாலே எனக்குத் தோன்றியது.

எதிர்ப்படும் ஒவ்வொரு சமயமும் என்னவோ தெரியவில்லை. உங்கள் முகத்தின் புன்னகை என்னை வசீகரித்தது. ஓய்வு பெற்ற முதியவர்கள் அனைவரும் நடந்து முடித்துவிட்டு ஒரு மரத்தடியில் நாற்காலியிட்டு அமர்ந்திருக்க நீங்கள் இருக்கும் தருணத்தில் அங்கு வெடிச்சிரிப்புச் சத்தம் கேட்கும். செடிகள் மறைக்க பிறகு தெரிய என்று நான் நடந்துகொண்டே உங்கள் அரட்டைக் கச்சேரிகளை தூரத்திலிருந்தே பார்த்து ரசித்திருக்கிறேன். ஓய்வு பெற்ற ஒரு வயதானவர் காலையில் நடக்க வரும்பொழுது முந்தைய நாளின் கவலைகளையோ அல்லது அன்றைய நாளின் கவலைகளையோ முகத்தில் தோய்த்துவைத்து நடக்கும் வயோதிகர்களின் மத்தியில் நீங்கள் வித்தியாசம் என்பதாலேயே என்னை வசீகரித்தது. உங்களை எப்பொழுதாவது நடக்கும்பொழுது எதிரில் பார்க்க வந்தால் ஒரு புன்னகை செய்து ஒரு குட்மார்னிங் செய்து உங்களிடம் பழக வேண்டும் என்பது ஆசையாக இருந்தது.

ஒரு நாள் அதுவும் நிறைவேறியது இராஜேந்திரன் சார். அன்றைய காலை நீங்கள் எதிரில் சந்தனக் கலரில் டீ ஷர்ட்டும் ஒரு வெள்ளை ட்ரவுசரும் போட்டு நடந்து வந்தீர்கள். உங்களைப் பார்த்து நான் திட்டமிட்டப்படி ஒரு புன்னகை செய்தேன். பதிலுக்கு நீங்களும் வாய் மலர சிரித்தீர்கள். அது எதார்த்தமாக இருந்தது.

அங்கு நடக்கும் சில வயதானப் பெண்களுடன் கூட நீங்கள் சகஜமாகப் பழகியதுண்டு இராஜேந்திரன் சார். ஒரு வயதான பெண்களின் குழுமமாக நான்கு பேர் நடப்பார்கள். அவர்களைக் கடக்கையில் இரண்டு நிமிடமாவது நின்று பேசிப்போவீர்கள் நான் பார்த்திருக்கிறேன். ஒரு முறை இரண்டு வயதானப் பெண்கள் மட்டும் ரிங் பால் கொண்டுவர மற்ற இருவர் இல்லாமல் போக, நீங்கள் அவர்களை அரவணைத்து முக்கோணமாக நின்று ரிங் பால் விளையாண்டீர்கள். அவ்வளவு பாந்தமாக இருந்தது.

உங்களுக்கு ஒன்று தெரியுமா இராஜேந்திரன் சார். உங்கள் பெயர் நேற்றுவரை எனக்குத் தெரியாது. என்னைப்பொறுத்தவரை கொஞ்சம் அழகு கருப்பு, நரைத்த முடி. இன்னார் இன்னாருடன் நடப்பார். நடந்து முடிந்து இருபது நிமிடம் இங்கு அமர்வார். பிறகு அங்கு அமர்வார். கலகல வகையறா என்பது தான் நான் உங்களின் அடையாளமாக வைத்திருந்தது.

நேற்றைக்கு நமது நடையாளர் கழக அறிவிப்புப் பலகையில் நமது உறுப்பினர் இராஜேந்திரனின் தாயார் மறைந்துவிட்டார் என எழுதியதைப் பார்த்தபோதுகூட அந்த இராஜேந்திரன் நீங்கள் தான் எனத்தெரியாது இராஜேந்திரன் சார்.

இன்று நம்முடன் நடப்பவரின் ஒருவர் வீட்டில் துக்கம் போகலாம் என கூட நடப்பவர்கள் சொன்னதும் அவர் யார் பார்த்திருக்கிறேனா என நான் கேட்க அவரும் ஆம் வாருங்கள் செல்லலாம் எனச் சொல்ல வந்தேன் உங்கள் அம்மா இறந்த உங்கள் வீட்டிற்கு.

கிட்டத்தட்ட உங்கள் அம்மாவிற்கு வீட்டிற்கு வெளியே அது இறுதிமரியாதை நிகழ்ந்த நேரம். ஆம்புலன்ஸ் வந்திருந்தது. அழைத்துச்செல்ல.

 சாஸ்திர சம்பிரதாயமாக வெள்ளை நிறச் சட்டையும் பட்டு வேஸ்டியும் அணிந்திருந்தீர்கள் இராஜேந்திரன் சார்.

எனக்கு உங்களைப் பார்த்ததும் நீங்கள் தானா என திக்கென்று இருந்தது.
இரவு முழுக்க அழுத எண்பது வயது வயோதிகன் என் கைகளைப் பிடித்து வந்ததற்கு நன்றி சொல்வது போல் என் முன் சமிக்ஞை செய்தீர்கள். உங்கள் கைகள் வெம்மையாக இருந்தன இராஜேந்திரன் சார்.

நாம் ஒரு போதும் இவ்வளவு நெருக்கமாக இருந்ததில்லை. உங்கள் கைகளை நான் பற்றிக்கொண்டதே இல்லை. கடைசியாக நடந்த புத்தாண்டு விழா கொண்டாட்டத்தின்போது கூட வாழ்த்துகளை வாயால் சொல்லிக்கொண்டு நகர்ந்து விட்டேன். இன்று உங்கள் கைகளில் துக்கத்திற்கான வெம்மை தெரிகிறது.  என் கைகளைப் பற்றிக்கொள்ள உங்களுக்கு எப்படி இருந்தது எனத் தெரியவில்லை இராஜேந்திரன் சார். எனக்கு அது நடுக்கமாக இருந்தது.

நான் கொஞ்சம் விலகி உங்கள் அம்மாவின் முகத்தையும் உங்கள் முகத்தையும் பார்த்தேன் இராஜேந்திரன் சார். உங்கள் வயது எண்பது. அம்மாவிற்கு நூறு இருக்கும் என ஒருவர் அனுமானத்தைச் சொன்னார்.. பத்து வருடங்களுக்கு முன்னதாகவே உங்கள் மனைவி இறந்துவிட்டதாகவும் துணைக்கு என் அம்மா இருக்கிறார் என்று நீங்கள் சொல்லியிருக்கிறதாகவும் ஒருவர் சொன்னார். ஏதாவது உடல் வலி எனக்கூறுவாராம். நீங்கள் மருத்துவரைப் பார்க்க அழைத்துப் போவீர்களாம்.

எண்பது வயதில் உங்கள் அம்மாவுடன் இருந்த உங்கள் தருணங்களைச் சிலாகிப்பதா இல்லை எண்பது வய்தில் அம்மாவைப் பிரிந்து இப்பொழுது அம்மாவின் சடலத்தைச் சுற்றி வர நெல் பாத்திரமும் அதில் ஒரு காமாட்சி விளக்கும் வைத்து உங்களைச் சுற்றி வரச் சொல்ல நீங்கள் தளர் நடையாக கண்ணீர் மல்க வருகிறீர்கள் இராஜேந்திரன் சார். உங்களைப் பக்கவாட்டில் நின்றுகொண்டு ஒருவர் பிடித்துக்கொண்டு வருகிறார். நீங்கள் எப்பொழுதும் இப்படி நடந்ததில்லை இராஜேந்திரன் சார்.  உங்களால் கண்ணீரை அடக்க முடியாமல் அது கன்னம் தொட்டு சட்டையின் பாக்கெட்டின் மேல் ஒரு சாரை விழ ஆரம்பித்தது.

அப்படி சுற்றி முடிந்ததும் நீங்கள் கூட்டத்தை விட்டு விலகி வெளியே சென்றீர்கள். ஏதோ மனதிற்குள் திடம் பெற்றுக்கொண்டு ஒரு நாற்காலியில் அமர்ந்தீர்கள். உங்கள் அம்மாவிற்கு பேரன் பேத்திகள் சம்பிரதாயங்களைச் செய்தார்கள்.

உங்கள் வயதொத்த உங்களுடன் நடக்கும் ஒருவர் வந்தார். அவரைக் கட்டிபிடித்தீர்கள். அழுக வில்லை இராஜேந்திரன் சார். நீங்கள் கூட்டம் விலகி வெளியே சென்ற பயிற்சி வீண் போகவில்லை.

உங்கள் அம்மா மகிழ்வாகச் சென்றிருப்பார் இராஜேந்திரன் சார்.

அங்கிருந்து வந்த பிறகு உங்கள் ஞாபகம் தான் சார். இன்றிரவு அம்மாவின் பேச்சு இல்லாமல் மனைவி இல்லாத அந்த வீட்டில் உங்களை நினைக்கப் பயமாக இருக்கிறது.

ஒன்று உறுதி சார். அடுத்த முறை நீங்கள் நடைப் பயிற்சி மேற்கொள்ளூம்பொழுது நானாக வந்து உங்கள் கைகளைப் பிடித்துக்கொள்வேன்.
அனுமதி தாருங்கள் இராஜேந்திரன் சார்.

கைகளைப் பற்ற

ப்ரியமுடன்
பழனிக்குமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....