இந்த இரவில் என்ன செய்கிறாய்

இப்பொழுதிந்த
இரவில்
என்ன செய்கிறாய்..

தூங்க மறுக்கும்
குழந்தையின்
கார்ட்டூனில் நீ
லயித்துப் போகலாம்

உன்னை விளையாட
அழைக்கும்
உன் செல்ல
நாய்க்குட்டியினை
இரவெனச் சொல்லி
தலையில் செல்லமாகக்
கொட்டலாம்...

வேறு என்ன
செய்வாயிந்த
இரவில்..

தீர்ந்து போன
சோற்றுப்பானைக்கு
ஒரு டம்ளர்
தண்ணீர்

பாலைத் தயிராக்கும்
பாக்டீரியாக்கள்
புணர
வழிவகை..

ஒரு புத்தகம்
ஒரு டைரி
அதிலுன் நினைவு
இல்லை
வரவுசெலவு
இதைத் தானே
செய்வாய்
இந்த இரவில்...

அன்பே!
என்னிரவை நீ
பார்த்ததே இல்லை..

உன் தலையணையில்
பாதியிடம்
பிடித்துக்கொண்டு
வெறும் வானத்தில்
நிலாவையும்
வானவில்லையும்
மனத்தூரிகையில்
வரையுமிரவு
அல்ல இது..

வெளிச்சக் கொலை
முடிந்தப் பின்
இன்னொரு
காவிற்குக்
காத்திருக்கும்
இரவின் விரல்பிடியில்
சிக்குண்டுத் தவிக்கும்
என் தூக்கக் கழுத்து
அது..

உன்னிடம்
உன்னுலகம்
யோசித்து
உன் ப்ரிய
விளக்கிலிருந்து
ஒரு சிட்டிகை
அகல் விழுமெனக்
காத்திருந்து
இல்லாமல் போகும்
இரவு அது...

நீயற்ற இரவில்
காலாவதியான
தூக்கங்கள்
என் பெயரெழுதிய
கல்லறைக் கல்கொண்டு
நடப்பட்டச் சமாதியில்
தூங்கிக்கொண்ட
இரவு அது..

எந்தத் தடையுமற்று
அங்கு
ஒரு பூங்கொத்து
நிரப்பி மண்டியிட
உன்னிரவு
பிரயத்னங்கொள்ளும்..

இன்னும் நீ
சொல்லாமல் தான்
இருக்கிறாய்

இந்த இரவில்
என்ன செய்கிறாயென....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....