மனக்குதிரை

மாதத்தின் முதல் நாள் பிறந்தாகிவிட்டது.
சென்ற மாதத்தின் சேல்ஸ் க்ளோஸ் முடிந்தபாடில்லை.

ஆகஸ்ட் 30ம் தேதி சனிக்கிழமை 31ம் தேதி ஞாயிற்றுக்கிழமையாகிவிட்டது.

ஆதலால் 1ம் தேதி திங்கள்கிழமை காலையிலிருந்து பரபரப்பு. இன்று சேல்ஸ் க்ளோஸ் பண்ணியாகவேண்டும். ஆனால் ஆர்டர் கொடுக்கவில்லை.
இப்படித்தான் விடிந்தது.
ஏறத்தாழ காலை 6 மணி.
எவ்வளவு வேலைகள்
யார் யாருக்குப் பேச வேண்டும்.
 என்ன என்ன பேச வேண்டும்.
செப்டம்பர் பிறந்தும் ஆகஸ்ட் மாத சேல்ஸா....முடித்தாக வேண்டும். உடன்வேலை பார்க்கும் சகப்பணியாளர் 5 பேருக்கும் அழைக்க வேண்டும். ஆர்டரை 3 மணிக்குள் அலுவலகத்திற்குள் கொடுக்க வேண்டும். அவற்றையெல்லாம் 6 மணிக்குள் பில் அடித்துவிட்டு சாயங்காலம் பணிக்குத் திரும்ப வேண்டும்.

மணி காலை 6.30.
யாரும் எழுந்திருப்பார்களா...
இப்பொழுதே பேசிவிடலாமா...
காலையிலேயே மேனேஜர் கூப்பிட்டுவிட்டார் என அலுத்துவிடுவார்கள் தானே....வேண்டாம்...கொஞ்சம் பொறுத்திருந்து அழைப்போம்....என மனக்குதிரை பொறுத்திருந்தது.

மணி காலை 7.20
 கைகள் துறுதுறுவென இருந்தன.
அழைக்க ஆரம்பித்தேன்.
எப்பொழுது ஆர்டர் கொடுப்ப?
எப்ப ஆபிஸுக்கு வருவ....
4 மணிக்குள்ள முடிச்சுரு.....
லேட் ஆக்கிராத....

இந்த 4 வரிகளை 5 பேருக்கும் பேசினேன்.. வெவ்வேறாய்.....வேறு வேறு விதங்களில்...பிறகு என் மேலாளருக்குப் பேசினேன். என்ன செய்தேன் என்ன செய்யப்போகின்றென். எப்பொழுதுக்குள் செய்யப்போகின்றேன்.
அவர் சொல்லும் திருத்தங்கள் கூடுதல் தகவல்கள். அவற்றையும் பிறகு 5 நபர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும். அப்படியே அல்ல து கொஞ்சம் பக்குவமாய் , பட்டும் படாமலும், ஏனேன்றால் விற்பனைத்துறையில் சில சமயங்களில் அழுத்தங்கள் பகிரப்படும். சில சமயங்களில் அழுத்தம் கொடுக்கப்படுதலைத் தவிர்த்தல் வேண்டும். கயிற்றின் மேல் நடக்க வேண்டும்.

மணி 9.30.
தொலைபேசி சார்ஜ் வெறும் 25 சதவீதம். அதற்கு சார்ஜ் போட்டுவிட்டு கிளம்ப வேண்டும்.
மனக்குதிரை எப்பொழுதும் ஓடிக்கொண்டே இருக்கிறது. முதல் வேலை எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும். எப்படி ஆரம்பிக்க வேண்டும். 5 நபர்களுக்கும் அடுத்துத் தொடர்புகொள்வது எப்பொழுது.

மணி 10.15
கிளம்புகறேன்.
வேலைகள் நடக்க ஆரம்பிக்கின்றன.
திட்டமிட்டபடியே....
அவ்வப்பொழுது அல்ல அடிக்கடி தொலைபேசி அழைப்புகள். சகப்பணியாளர்களே....
எதுவெல்லாம் சொல்லப்பட்டதோ, அல்லது நடக்கும் என்று உத்தேசிக்கப்பட்டதோ..அதுவெல்லாம் நடக்கிறதா....ஒரு வேகமாகச் செல்லும் நீரோடையில் செல்வது போலிருக்க வேண்டும்.
முட்டுதல், மோதுதல், அமுங்குதல், பிறகு மீள்தல் மறுபடியும் நீந்துதல் இப்படி மனக்குதிரையின் ஓட்டம்.
மணி 2 ..மதியம்.
வீட்டிற்கு மதிய உணவிற்குச் செல்ல வேண்டும். மேலாளர் அழைக்கிறார். எப்பொழுது வருவாய் எனக் கேள்வி. மணி சொல்லப்படுகிறது. ஆர்டர்கள் கொடுக்கப்பட அவற்றை பில் செய்ய தோராயமாக எவ்வளவு கால அவகாசம் ஆகும் என உத்தேசித்தால் மணி 6 க்குள் முடியாது.
வேகப்படுத்த வேண்டும்.
நம் வண்டியை வேகப்படுத்தலாம்.
நம் குதிரையை வேகப்படுத்தலாம்.
அடுத்தவர் குதிரையை?
செய்தாக வேண்டும்....அது ஒரு கலை...
வீட்டிற்குச் சென்று சாப்பிட்டு விட்டு அலுவலகம் செல்லலாமா இல்லை அப்படியே போகிற போக்கில் ஹோட்டலில் சென்று சாப்பிட்டு விட்டு சென்றுவிடலாமா....நேரமில்லை....
மற்ற அலுவலக நண்பர்கள் எப்பொழுது வருவார்கள்.
நேரம் கேட்கப்படுகிறது.
அதை மேலாளருக்குச் சொல்லப்படுகிறது.
குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கப்ப்டும்படியாய் அறிவுறுத்தப்படுகிறேன்.
இப்பொழுது என் வண்டி வேகமாகச் செலுத்தப்படுகிறது. என மனக்குதிரை அதை விட வேகமாக...

சரியாக மதுரை வைகை ஆற்றின் ஓரத்தில் இருக்கும் சாலை....போக்குவரத்து நெரிசல் மிகக் குறைவு....பல பாலங்கள் குறுக்கும் நெடுக்குமாய்....நான் மட்டும் ஆற்றின் போக்கில் ஓரமாயிருக்கும் சாலையில் விரைகிறென்...பாலங்கள் குறுக்கிடும் பொழுது மட்டும் வேகம் குறைவு...

குருவிக்காரன் சாலைப் பாலம் வரப்போகிறது. வேகத்தைக் குறைக்க வேண்டும். வண்டிகள் அதிகமாய் குறுக்காகச் செல்லும்.

தூரத்திலிருந்தே அப்பாலத்தைப் பார்க்கிறேன்.

நடுவில் ஒரு சுமோ கார் நிற்கிறது. அதன் பின் வரிசையாய் கார்கள் நிற்க ஆரம்பிக்கின்றன்.....
அங்கு நெரிசல் அதிகமாவதற்குள் அச் சந்திப்புச் சாலையை நான் கடக்க வேண்டும்.  
வண்டி வேகமாக ச் செலுத்துகிறென்.  என் மனக்குதிரை அதை விட வேகமாக...

ஆனால் நெரிசல் ஏன் என சற்று கவனிக்கிறென்...அந்த சுமோ கார் ஒரு பைக் கை அப்பொழுது தான் மோதி இருக்கிறது...கீழிறங்கி அந்த டிரைவர் காரின் முன் பம்பரைப் பார்க்கிறார். பைக்கில் வந்தவர் கீழே விழுந்திருக்க வேண்டும்.
நான் சற்று உற்றுப் பார்க்கிறேன்.
பாலம் வடக்குத் தெற்காய் நீண்டிருக்கிறது.
நான் கிழக்கு மேற்காய் போய்க்கொண்டிருக்கிறேன். இடப்பக்கமாய் பார்க்கிறேன் இக்காட்சியை.
பார்த்ததில் கவனித்தது....பைக்கில் விழுந்தவர்க்குத் தலையில் அடி.
அவரை ஒரு காவல் காரர் எழுப்புகிறார்.
நான் அந்த சந்திப்பை வந்தடைந்துவிட்டேன். இப்பொழுது நெரிசல்...எனக்கு அந்த காட்சி தெரியாமல் தடைபடுகிறது.
இப்பொழுது சந்திப்பைத் தாண்டி சென்று வண்டியின் வேகத்தைக் குறைத்துப் பின் திரும்பி பார்க்கிறென்.
இன்னொரு காவல் காரர் ஓடி வந்து அடிபட்டவரை பாலத்தின் பிளாட்பாரத்தில் ஏற்றி நிறுத்துகிறார்.
 பாலத்தின் கைப்பிடிச்சுவர் உயரம் குறைவு. அவர்களின் முழங்கால் உயரத்திற்குத் தான் இருக்கும். அடிபட்டவர் தலையை பிடித்துக்கொண்டு வாந்தி எடுக்கிறார். அனேகமாய் தலையில் அடிபட்டிருக்க வேண்டும். எனக்குப் ப்யம்...அவர் அப்படியே பாலத்திலிருந்து விழுந்திரக்கூடாது....எனக்குப் பதட்டமாய் இருக்கிறது.
 வண்டியை கிட்டத்தட்ட நிறுத்திவிட்டேன். ஆனால் அந்த காவல்துறைக்காரர் அவரை பிடித்து விட்டார். எனக்கு சற்று நிதானம் தேவைப்பட்டது.
அடிபட்டவருக்கு அருகில் நின்றவர்கள் எல்லாம் தொலைபேசி எடுத்து காதில் வைக்கிறார்கள். அனேகமாய் ஆம்புலன்ஸாக இருக்க வேண்டும். 2 அல்லது 3 பேர் அவரது பைக்கை எடுத்து ஓரமாய் நிறுத்தி நெரிசலைக் குறைக்கிறார்கள்.
தூரத்திலிருந்தே பார்க்கிறேன்.
அந்த பைக்கில் விழுந்தவர் தூரத்திலிருந்து பார்க்கும்பொழுது தெரிந்தவரைக்கும் தெரிந்தவர் இல்லை.
அவர் யார். தனியாய் தான் வந்திருக்கிறார். யாருக்காவது தெரியப்படுத்துவார்களா...அவர் பேசக்கூடிய மனநிலையில் இல்லை. எப்படி தெரியப்படுத்துவது. அவரது மொபைல் போனை எடுத்தார்களா இல்லை திருடினார்களா....எதுவும் களவாடப்படாமல் இருக்க வேண்டும்.

எல்லாம் கணநேரத்தில் யோசனை.
மனக்குதிரை சிலுப்புகிறது.
திரும்புகிறென்.
வண்டியை அதிகப்படுத்துகிறேன்.
மனக்குதிரை அதை விட அதிகமாக....
அலுவலகம்.....சேல்ஸ் க்ளோசிங்க்.....ஆறுமணிக்குள்....தாமதம்....
அவகாசமில்லை....
வேகமாகச்செல்கிறேன்.....மனக்குதிரையும்...

அந்த பாலத்தில் மட்டும் மனிதர்கள் இருப்பது போலவும்....என்னைத்தவிர ஏதோ அங்கு அதிகம் இருக்கிறது.
ஒரு எதார்த்தமான மனிதன் சந்திக்கும் ஒரு விபத்து அங்கு...
சக மனிதர்களின் மனிதம்....

ஜீவனம் என்னை எங்கோ செலுத்திக்கொண்டிருக்கிறது.
நான் மட்டுமல்ல.....
பலர்...
வாழ்க்கை நம்மை பல நேரங்களில் பல திசைகளில் செலுத்துகிறது.

ஆனால் அந்த பாலத்தில் மட்டும் தான் வாழ்க்கை நடந்து கொண்டிருப்பது போலவும், மனிதர்கள் அங்கு மட்டும் தான் இருப்பது போலவும். அதுதான் பூமி போலவும்...இருக்கிறது.

ஆமாம்....நான் எங்கு சென்றுகொண்டிருக்கிறேன்.......

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....