சைரன் பக்க அண்ட் பக்கா 1

ரஜினிகாந்த் ஒரு மேடையில் ஒரு கதை சொன்னார். அனேகமாக எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.
நான்கு தவளைகள் மலையில் ஏறும். மேலே போகாதே மேலே போனால் அங்கு பாம்பு இருக்கும் தேள் இருக்கும் என எல்லாத் தவளைகளும் சொல்லும். ஒரு தவளை மட்டும் மேல் ஏறி முன்னேறிச் சென்று தன் இரையைப் பெறும்.
காரணம் என்னவென்றால் அந்தத் தவளைக்குக் காது கேட்காது. அதுபோல் சில விசயங்களில் விமர்சனங்களை எதிர்பார்க்காது பொருட்படுத்தாது நம் வேலைகளை நாம் செய்துகொண்டே இருக்க வேண்டும்.
அதில் ஒன்று நம் உடல் எடையைக் குறைத்தல்.

நான் 86ல் இருக்கும்பொழுது ...ஐயா தெய்வங்களா உடனே கி.பி 1986நு நினைச்சிராதீங்க. 86 கிலோ என் உடல் எடையில் இருக்கும்பொழுது ஒரு செல்ஃபி எடுத்தால் ஜூம் பண்ணாமலேயே ஜூம் பண்ண மாதிரி  தெரிஞ்சது.
அந்தளவிற்கு புஸுபுஸு என்று மாறிப் போனேன்.
ஒரு வழியாக ஒரே மாதத்தில் ஐந்து கிலோ குறைக்கச் சாத்தியமாகிப்போனது.
ஒவ்வொரு முறை வேலைக்குக் கிளம்பும்பொழுது நம்முடைய ஆடைகள் அதுவும் இறுக்கமாக இருந்த ஆடைகள் தளர்வாக இருக்கும்பொழுது வரும் சந்தோசத்தைச் சொல்ல முடியாது. எனக்கு அப்படி சந்தோசம் வரும்பொழுதெல்லாம் ஒரு அண்ணன் ஒரு கடையில் இருப்பார். பழனி,....சட்டைலாம் லூஸ் ஆகுது. மெலிய ஆரம்பிச்சுட்டீங்க போல என்று கேட்பார். இதை சந்தோசமாகவே எடுத்துக்கொண்டேன்.
ஒரு க்ளினிக் இருக்கிறது.
அங்கு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை எடை பரிசோதனை செய்துகொள்வேன்.
நான் குண்டாக இருப்பதாக நினைத்த ஒரு செவிலியர் சகோதரி, தம்பி ஓயாம பாக்காத.  மெலிஞ்சிரமாட்ட என்று சொல்லும்.
இன்னும் மெலியலையா க்கா..என்று கேட்பேன். ஒரு கட்டத்தில் அந்த அக்காவே, தம்பி போதும் இதுக்கு மேல் மெலியாதே என்றது.
 அப்பொழுது நான் 73.
உடல் எடையைக் குறைக்க ஓர் ஆசை தீயாக இருந்தது எனக்குள்.

தினமும் என்னுடன் பயணிப்பவர்கள் பெரிய அளவில் வித்தியாசமாய் நான் மெலிவதை உணரமுடியவில்லை என்றாலும் 15 நாட்களுக்கு ஒரு முறை பார்க்கும் வாடிக்கையாளர்கள் நான் மெலிவதைக்  கண்டுபிடித்தனர்.

நாம் உடல் எடையைக் குறைப்பதில் நாம் யோசிக்கும் தடைகள் என்று பட்டியலிட்டு பார்த்தால் என்னென்னலாம் கிடைக்கும்.

 1. நேரம் இல்லை நடக்க
 2. சாப்பிட்டாலும் எடை குறையல
 3. சாப்பிடாட்டியும் எடை குறையல
 4. சில சாப்பாடு சேரல
 5. கண்ட் ரோலா இருக்க முடியல.......
இப்படி பல சோதனைகள் இருக்கும். அதை விட முக்கியமானது. நம்ம அப்பத்தான் வாயக்கட்டி வவுத்தக்கட்டி மூணு கிலோவ குறைச்சிருப்போம்.
ரோட்டுல போற தெரிஞ்சவன் என்னடா மாப்ள மெலிஞ்சுட்ட , எதும் டயட்டா, சூப்பரா குறைச்சிருக்கடா...அப்படியே மெயிண்டெயிண் பண்ணுனு இப்படி கேட்டா பரவால.

 நமக்கு வாய்க்கிறதுலாம் எப்படி இருக்கும் தெரியுமா....

ஏன் மெலிஞ்சுட்ட, சுகர் இருக்கா, செக் பண்ணியா. செக் பண்ணு, ஒருவாட்டி செக் பண்ணா பத்தாது நாலுவாட்டி செக் பண்ணு. இப்படித்தான் எங்க வீட்டுக்குப் பக்கத்துல மெலிஞ்சுட்டே இருந்தவருக்கு உடம்பு பூராம் சக்கரையாம்.....(ஆமா உடம்புல இருந்து தான் சீனி எடுக்குறானுகளாம்) இப்படி பீதியை நமக்கு ஏற்றுமதி செய்வானுக.

இன்னும் சில நண்பர் கூட்டம் இருக்கு. அதுக இப்படி ஆரம்பிக்கும்.

இப்ப நீ மெலிஞ்சு என்ன பண்ணப்போற. தொப்பைலாம் குறையுது. தொப்பை தான் கெத்து( இது புதுசா இருக்குல).

இந்த வயசுக்கு அப்படித்தான் இருக்கனும்ப்பா...இது  நல்லால..

எந்த விமர்சனத்திற்கும் காது கொடுக்காமலே நானும் என் டயட்டையும் பயிற்சிகளையும் செய்தேன். கொஞ்சம் ஆட்டம் காண வச்ச சந்தர்ப்பங்களும் உண்டு.

எதுக்கு வெயிட்ட குறைச்சுட்டு..அப்படியே இருந்திரலாமா.....அப்படினு யோசிக்கத்தோணும். அந்தளவிற்கு எதிர்மறை விமர்சனங்களைக் கடந்து வருகிறேன்...

ஒரு செவிலியர் , நீங்க மெலிஞ்சா நல்லாவே இல்ல. குண்டா இருந்தாத் தான் நீங்க அழகுனு சொல்லுச்சு.....(உடனே...அடி...ஆத்தாடீயீயீயீயீயி...னு கடலோரக்கவிதைகள் இளையராஜா பிஜிஎம் கேட்கனும்....ஆனா)
பட்டாம்பூச்சிகளையும் வெண்ணிற ஆடை போட்ட தேவதைகளையும் இளையராஜாவின் பியானோக்களையும் திருமணத்திற்குப் பிறகு பறிகொடுத்த பழனிக்குமாரால் என்ன செய்ய இயலும் அந்தத் தருணத்தில். ஈஈஈஈ என்ற ஒரு புன்னகையைக் கொடுத்த படி யாருக்கும் தெரியாமல் பைக்குக்கு வந்து கண்ணாடியில் முகத்தைப் பார்த்து இப்ப நம்ம நல்லால்லையா என்று பார்த்திருக்கிறேன்.

என் ப்ரியத்திற்குரிய எதிரிகள் இருக்கிறார்கள். அவர்கள் செய்த பிரச்சாரத்தின் படி , சிலர் வழியில் மறித்து, என்ன பழனி உனக்குச் சுகராம்ல...பாத்துப்பா . உடம்ப பாத்துக்க என்று சொன்னார்கள். அதாவது அவர்களே ட்க்ளேர் செய்து விட்டார்கள். விட்டா இன்சுலின் ஊசிய வாங்கி என்ட்ட கூட கேக்காம குத்திருவானுக போல...

இன்னொரு இடத்தில் ஒரு உறவினர் பார்த்தார். என்ன பழனி மெலியுற. என்னக் காரணம் என்றார்.
 இல்லை. நான் தான் உடம்பைக் குறைச்சிருக்கேன். ஓவர் வெயிட் போனேன் . அதான் என்றேன்.
உடனே, அடுத்தக் கேள்வி, நீ பண்ற வேலை எப்படிப் போகுது என்றார்.
நல்லாப் போகுது என்றேன்.
அதுல எதுவும் பிரச்சினையா என்றார் .
இல்லை என்றேன்.
எதுவும் பிரச்சினைனா சொல்லு என்றார்.

அவன் அக்கறைல கேக்குறானா ஆர்வத்துல கேக்குறானானே தெரியாது. ஆக, மெலிவதற்குக் காரணம் இவன் தொழிலில் நொடிச்சு போயிட்டானா இருக்கும் என்று கிளப்பி விட்டு இருக்கிறார்கள். (விஜய் மல்லையாவின் இப்பொழுதைய ஃபோட்டோ பார்க்க வேண்டும்)

ஒருவர் இதையே மேற்கோள் காட்டி இப்படிலாம் பேச்சு வந்திரும். அதுனால உடம்ப தேத்து என்றார்.

நாம் ஏன் உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்ற அடிப்படைக்கே அவர்கள் யாரும் வரவில்லை. இன்னொன்று என்னுடைய உடல் எடை காரணமாக நான் செய்ய முடியாதது என்று இருந்த பல விசயங்களை நான் செய்ய ஆரம்பித்தேன்.
அதாவது செய்யனும்னு ஆசை இருக்கும். ஆனால் செய்ய முடியாமல் இருந்தது. எனக்கு டீ ஷர்ட் போட மிகவும் பிடிக்கும். உடல் எடை கூடி தொப்பை அதிகமாகி கரகாட்டக்காரன் படத்தில் வரும் செந்தில் ஜிப்பா போட்ட படி எனக்கே எனக்குத் தோன்றியக் காரணத்தினால் அதையெல்லாம் போடாமல் அப்படியே வைத்திருந்தேன். அதையெல்லாம் தூசி தட்டி வைத்துவிட்டுத்தான் நான் பயிற்சியை மேற்கொள்ள ஆரம்பித்தேன்.

ஆக, மெலிதல் சார்பாக நீங்கள் பயிற்சி எடுக்க நினைத்தால்,  போதும் நிறுத்திவிடு என்று முதலில் வெளி ஆட்கள் கூறுவார்கள். காதில் வாங்காதீர்கள்.
வீட்டு ஆட்கள்  கதறுவார்கள். காதில் வாங்காதீர்கள் ( இதுல நம்ம எக்ஸ்பெர்ட்டா இருப்போம்)
அடுத்ததாக நல்ல சாப்பாட்டைப் பார்த்த மாத்திரத்தில் பயிற்சியைத் தவிர்த்து தூங்க ஆசைப் படும் நேரத்தில் உங்களுக்குள்ளே இருந்தே குரல் கேட்கும். போதும் நிறுத்து என்று.

அது தான் சரியானத் தருணம் ..நாம் நிறுத்தக் கூடாது.

இயற்பியல் தத்துவப்படி ஒரு வேலை என்பது அல்லது ஒரு செயலின் முன்னேற்றம் என்பது ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்குக் குறிப்பிட்டக் கால அளவுல மாறுறது. அதான் வேலை செய்வதற்கான விதி ஆகும்.  ஒருத்தர் ஒரே இடத்துல காலையில இருந்து சாயங்காலம் வரை 5 கிலோ எடையைத் தூக்கிட்டு நிக்குறாருனு வச்சுக்குவோம். அது வேலையானு கேட்டா இல்லை. நான் சொல்லல பாஸ். விதி சொல்லுது.
நீங்க வெயிட் குறைக்கனும் . முடிவு பண்ணிட்டீங்க. 86 கிலோ. குறைக்கனும். சொல்லிட்டே இருந்தா குறைஞ்சிருமா. பத்து மாசமா ஆனாலும் அதுவா குறையாது. ஒவ்வொரு நாளும் உடல் எடையைக் குறைக்க ஒரு அடி எடுத்து வைங்க. ஏன்னா உடல் எடை குறையுறது நீங்க சம்பந்தப் பட்டது மட்டும். குறைச்சதுக்கப்புறம் இந்தச் சமூகம் உங்களுக்கு ஒரு ரியாக்ஷன் கொடுக்குமே....

 பார்ப்பவர்கள் நம்மைப் பார்த்து அசிங்கமா இருக்க என்று முகத்திற்கு நேராகச் சொல்வார்கள். நான்கு பேர் மத்தியில் வைத்துச் சொல்வார்கள்.  என்ன செய்யலாம். நிறுத்திரலாமா....

இப்படித்தான் ஒரு முறை.....

சைரன் பக்க மற்றும் பக்கா அடுத்தப் பதிவில்


சைரன் ஒலிக்கும்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....