இரா.முருகவேள் எழுதிய 'முகிலினி' நாவலை முன்வைத்து....

இரா.முருகவேள் எழுதிய 'முகிலினி' நாவலை முன் வைத்து...

பழனிக்குமார்
மதுரை.

2003-04 காலகட்டம். மதுரையிலிருந்து மாற்றுதலாகி கோயம்புத்தூருக்குப் போயிருந்தேன். ஒரு முறை நண்பருடன் சேர்ந்து மேட்டுப்பாளையத்திலிருந்து கோத்தகிரி வழியாக ஊட்டிக்கு வேலை நிமித்தமாக மலை ஏற ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் வண்டியை ஓரமாக நிறுத்தி அந்த உயரத்திலிருந்து தூரத்தில் ஊர்களைப் பார்த்துக்கொண்டிருந்தோம். அப்பொழுது ஓர் ஆலையைக் காண்பித்தான். இந்த 'முகிலினி' யைப் படிக்க ஆரம்பித்ததும் 17 வருடங்களுக்கு முந்தைய அந்த ஞாபகம் வந்தது. அந்த நண்பனுக்குத் தொடர்பு கொண்டு நீ காண்பித்தது எந்த ஆலை என்றேன். அவனுக்கு அது ஞாபகம் இல்லை. பிறகு ஆமா...விஸ்கோஸ் ஃபேக்டரியா என்று கேட்டான். அதைப் பற்றி ஒரு புத்தகம் உங்கூரு காரர் தான் எழுதிருக்கார். படிச்சிட்டு இருக்கேனு சொன்னேன். ஆமாமா, அந்த ஃபேக்டரிய அந்த சிறுமுகை ஊர்க்காரங்களே உள்ள புகுந்து கொள்ளை அடிச்சுட்டாங்களாம் என்றான். அப்பொழுது அந்தப் புத்தகத்தில் வெறுமனே முப்பது ஐம்பது பக்கங்கள் தான் படித்திருந்தேன். புத்தகத்தை முழுதாய் படித்துவிட்டப்பிறகு என் நண்பன் சொன்னது உண்மை தான், ஆனால் அந்தக் கருத்திற்குப் பின்பான முதலாளித்துவ சிந்தனை எதுவும் இருக்கிறதா என்ற சந்தேகம் வரத்துவங்கியது. முழு புத்தகமும் அப்படியானச் சிந்திக்கும் பார்வையைத் தந்திருக்கிறது என்று கூறினால் கொஞ்சம் மிகையாக இருக்கும். ஆனால் அது உண்மை.
தோழர். அருணன் எழுதிய 'கடம்பவனம்'  நாவலில் இரண்டு காதல் கதைகள் இருக்கும். ஆனால் நாவல் எழுதப்பட்ட கால கட்டம் ஆலய நுழைவு போராட்டம் நடந்த காலகட்டம். நாவலில் காதல் கதையும் ,அரசியலும், ஆலய நுழைவுபோராட்டமும் பின்னிப்பிணைந்து சொல்லப்பட்டிருக்கும். ஒரு நாவலின் மூலமாக வரலாற்றைத் தெரிந்துகொள்வதில் அந்தக் காலகட்டத்திற்குள் நாமும் பிரயாணம் செய்தாகவேண்டிய எழுத்துகள் அவசியம்.

 'முகிலினி' நாவல் கூட சுதந்திரத்திற்குப் பின்பான இந்தியாவையும் சென்னை மாகாணத்தையும் பிறகு தமிழகத்தையும் காட்டுகிறது.  ஒரு வருடத்தையும் அதில் நடந்த நிகழ்வுகளையும் கழுகு பார்வையாகக் கூறும்பொழுது நாம் ஆங்காங்கு கேள்விபட்டதையும் படித்ததையும் ஒருங்கே ஞாபகப்படுத்த அந்தக் காலகட்டத்திற்குள் நாமும் வாழ்ந்ததுபோல் ஓர் உணர்வு வந்துவிடுகிறது.
ஓர் ஆலை உருவாகும் விதம், அதன் முதலாளியாக ஒருவர் செய்யத் துணிவது, அவருக்கு ஆதரவு எப்படியெல்லாம் கிடைக்கிறது, கோவை எப்படி மான்செஸ்டராக உருவெடுக்கிறது எனச் சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவில் நடந்த நிகழ்வுகளில் ஒன்றாக " முகிலினி" ஆரம்பிக்கிறது. அதே காலகட்டத்தில் பவானி அணை எப்படி கட்டப்பட்டது. எழுபது லட்சத்தில் ஒரு அணை கட்டிய நேரத்தில் மூன்றுகோடி ரூபாயில் துணி மில்லா என்று ஆலை அதிபர்கள் வாய் பிளக்கும் காட்சி , அந்த ஆலையின் கட்டுமானத்தின் பிரம்மாண்டத்தைக் காட்டுகிறது.
'முகிலினி' நாவல், தந்தை -மகன்- பேரன் என்று மூன்று காலங்களைப் பேசக்கூடியது.  இதில் மகன் என்ற காலத்தில் பெரியதாய் பேசவில்லை. ஆனால் தாத்தா காலத்திலும் பேரன் (நிகழ்காலம்) காலத்திலும் முகிலினி நிறைய விசயங்களைப் பேசுகிறது.
எதார்த்த நிகழ்வுகளை தன்னுடைய புனைவு போன்ற நாவலுக்குள் கொண்டுவரும்போது அது நடந்த காலகட்டங்களையும் அதுசார் அரசியல் நிகழ்வுகளையும் மக்களின் வாழ்வியல்முறைகளையும் சேர்த்திருப்பதில் 'முகிலினி' சுவாரஸ்யத்தைத் தருகிறது.
நான் என் அப்பாவிடம் கேட்ட அவரது இளமைக்கால தேசிய உணவு பஞ்சம் போன்ற நிகழ்வுகளை 'முகிலினி' கண் முன்னே காட்டுகிறது.
வரும் கதாபாத்திரங்களுக்கு வாரம் ஒரு முறை அரிசி சோறு என்று குறிப்பிடப்படுவதும்,
தினம் அரிசி சோறா என்று ஒரு கதாபாத்திரம் இன்னொரு கதாபாத்திரத்திடம் சொல்வதும்,
ரோட்டில் செல்லும் உணவு லாரியை நடுவில் கட்டைவண்டியைக் கிடத்தி அதைக் கொள்ளை அடிக்கும் கிராம மக்கள் 'வெறும் சோளம் தானா, அரிசியாய் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்" என்று கூறுவதும் நேருக்குப் பின்பான சாஸ்திரி ஆட்சியில் வாரம் ஒரு நாள் இரவு உணவைத் தியாகம் செய்யுங்கள் என்ற கூற்றும் நாட்டில் நிலவிய உணவு பஞ்சத்தைத் தெளிவாக விளக்குகிறது.
உச்சகட்டமாய் உணவிற்கான தானியங்கள் பற்றாக்குறையும் ஆடியில் விதைத்து தை யில் அறுவடை, நடுவே ஐப்பசி புயலுக்கு அதுவும் மிஞ்சவேண்டும். ஐப்பசி புயலுக்கு முன் அறுவடை செய்ய I R 8 என்ற அரிசியை அறிமுகப்படுத்துதலும் , கெமிக்கல் உரங்களைக் கொண்டுவருதலும் உணவு பஞ்சத்தைப்போக்கும் காரணிகள் என்று ஒரு குழு ஆய்வறிக்கை கொண்டுவந்த  , உண்மையில் நிகழ்ந்த வரலாற்றை 'முகிலினி' பேசுகிறது.
1950- அறுபதுகளில் நடந்த அரசியல் போட்டிகளாக காங்கிரஸ்-கம்யூனிஸ்ட் போட்டிகளும், காங்கிரஸிற்கு எதிராக இருப்பவர்கள் கம்யூனிஸத்திற்கும் போகமுடியாமல் இருந்ததைக் காட்டும்பொழுது மூன்றாம் கட்ட நகர்தலுக்கு எப்பொழுதும் மக்களை காலம் நகர்த்திக்கொண்டு தான் இருக்கிறது என்பது தெரிகிறது.
எங்கு எல்லாம் தொழிலாளித்துவம் / கம்யூனிசம் பலவீனப்படுகிறதோ அங்கு எல்லாம் முதலாளித்துவம் மதவாதத்தை ஆதரிக்கிறது என்ற ஒரு வரி 1954-60ல் நடந்த நிகழ்வுகளை மையமாக வைத்துச் சொன்னாலும் , அந்தக் கருத்து 2020ல் கூட மாறாததாய் இருக்கிறது.
ராஜாஜி-காமராசர்-அண்ணா இந்த மூன்று பேர்களின் அரசியல் காலகட்டங்களில் தொழில் துறை சார்ந்த மாற்றங்களும் குறிப்பாக தொழிலாளர்களின் வாழ்வில் நடந்த மாற்றங்களை 'முகிலினி' பேசுகிறது.
சுதந்திரத்திற்குப் பிறகு காங்கிரஸின் தலைமையைக் காந்தியவாதிகள் கைப்பற்றாததன் விளைவுகள் என்று ஒரு கதாபாத்திரம் சித்தரிக்கப்படுகிறது. இரவிந்திரநாத் தாகூரின் கர் பாயிரே என்ற நாடகம் தான் காந்தியத்தின் மீதான அரசியல் விமர்சனம் என்று அந்தக் கதாபாத்திரத்தின் மூலம் கருத்து தெரிவிக்கப்படுகிறது.
'முகிலினி'யின் முக்கியமான ஒரு கருத்தாக , ஜே.சி. குமாரப்பா போன்றோர் முன்மொழிந்த சுய சார்பு பொருளாதாரத்தின் ஆரம்பகால நிகழ்வுகளில் இருக்கும் ஆரோக்கியமான எண்ணங்களும், அதற்கு முன்னோடியாக இருப்பவர்களின் முன்னெடுப்புகளையும் வைத்துப்பார்த்தால், இப்பொழுது பிஜேபியின் மோடி ஆட்சி சொல்லும் 'சுய சார்பு பொருளாதாரம்' எவ்வளவு பெரிய ஈ அடிச்சான் காப்பி என்றும் தெரிகிறது.

ஒரு நாவல் நமக்கு உள்ளக் கிளர்வுகளைத் தூண்டலாம். அது வெறுமனே புனைவுகளின் வழியே கூட சாத்தியப்படலாம். அங்கு எதார்த்தங்கள் மிகைப்படுத்தப்பட்டிருக்கலாம். அல்லது எதார்த்தங்களைப் பற்றி எள்ளளவும் கவலையில்லாமல் கதை கூறப்படலாம். அது வேறு வகையான ரசனை. ஆனால் ஒரு நாவலின் மூலம் கடந்த கால அரசியல் வரலாற்றையும் மக்கள் அனுபவித்த துன்பியல் சம்பவங்களையும் ஆவணப்படுத்தி அதன் மூலம் ஒரு கதையைப் புனைவதும் அதைப் படிப்பதும் வேறுவிதமான எதார்த்தமான இரசனை.
'முகிலினி' நாவலைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் ஓர் ஆலையின் எழுச்சியும் வீழ்ச்சியும் என்று முடித்துவிடலாம்.
கவிஞர் சமயவேல் பிரியமாய் என்னுடன் உரையாடிக்கொண்டிருந்தபோது இரசனைப்போக்கில் நீங்கள் படைப்புகளை அணுகுகிறீர்கள் என்று சொல்லியிருந்தார். எனக்கு அவருடன் அலைபேசி செய்தி வழியாக அப்படிப் பேசியது உவகை தான். ஒரு படைப்பைப் படித்துவிட்டு தோன்றுவதை எழுதும்பொழுது எந்தவகையில் அது தொணிக்கிது என்பதைக் கவிஞர் .சமயவேலிடம் பேசியபிறகு தான் கொஞ்சம் திரும்பிப்பார்த்தேன். முருகவேள் போன்ற எதார்த்தங்களைப் பேசும் ஜாம்பவான் களின் படைப்புகளில் வித்தியாசமாகக் குறிப்பாக 'முகிலினி' யை விமர்சனப்போக்காய் அணுகினால் என்ன என்று தோன்றியது. ஒரு படைப்பு உருவாவதற்கானச் சிரத்தைகளைச் சமாளிப்பதும் , அதற்கானத் தரவுகளை ஒரு படைப்பாளி தன் படைப்பின் ஊடே ஆங்காங்கே தெளித்து செய்தலும் பிரம்மிப்பானவை. அவற்றிற்கு மரியாதை செய்யும்பொருட்டு ' இரசனை போக்கு' கை கொள்தல் இலகுவானது. விமர்சனப்போக்கை நான் இப்படி எடுத்துக்கொள்கிறேன். மாதப்பிறப்பு என்று சாம்பார் வைத்திருந்தார்கள் எங்கள் வீட்டில். அதற்குக் காய் ,கல்யாண வீடுகளில் வைப்பது போன்று சேனைக்கிழங்கு பொரியல் வைத்திருந்தார்கள். சேனைக்கிழங்குவிற்காக இன்னும் சாப்பிடலாம் என்று நினைக்கும்பொழுது கடைசியாகச் சாப்பிட வந்தக் காரணத்தினால் சேனைக்கிழங்கு தீர்ந்துபோயிருந்தது. அடடா..இன்னும் கொஞ்சம் இருந்திருக்கலாமே என்று தோன்றியது. வயிறு நிறைந்திருந்தது. சாம்பார் அதை நிறைத்துவிட்டது. சேனைக்கிழங்கு என்பது craving , தூண்டலை ஏற்படுத்தியிருந்தது.
'முகிலினி' யில் கூட எனக்கு சேனைக்கிழங்காய் ஒரு கதாபாத்திரம் பிடித்திருக்கிறது. அந்தக் கதாபாத்திரம் தான், தான் பிறந்த நொய்யல் ஆற்றை ஞாபகத்தில் கிளர்த்தி, பவானி ஆற்றுடன் ஒன்றுகிறது. வெறுமனே பவானி ஆற்றுடன் பேசுகிறது. நாவலில் பல பக்கங்களுக்குப் பிறகு தனக்குப் பிறக்கும் மகளுக்குக் கூட பவானியை அறிமுகப்படுத்துகிறது. சில பக்கங்களுக்குப்பிறகு , மகள் தன் கணவனுக்கு பவானியுடனான இருப்புகளைச் சொல்கிறாள். அவர்களுக்குப் பிறந்த ஒரு மகன் , இன்னும் சில பக்கங்களுக்குப்பிறகு 'முகிலினி' நாவலின் முக்கியமான கதை நகர்த்தியாகவும் இயற்கை விவசாயம் மற்றும் அதன் பாதுகாப்பு பற்றியும் யோசித்தபடி பவானியின் கரையில் நிற்கிறான். அப்படியானத் துவக்கத்தைக் கொடுத்த அந்த பாத்திரம் தான் பவானியை - முகிலினி எனப் பெயர் வைக்கிறது. தமிழ் பற்றாளனாக இருக்கிறது. ஆடலரசி என்ற நாடகத்தை எழுதி கையில் வைத்திருக்கிறது.

தோழர். இரா.முருகவேள் அவர்களிடம் கேட்க நினைப்பது எனக்குப் பிடித்த சேனைக்கிழங்கிற்கான பக்கங்கள் ஏன் குறைக்கப்பட்டுள்ளன என்பது தான், ஆலை முதலாளியின் பேரனும், வெளிநாட்டிலிருந்து வந்தவனும், கடைசி நீதிமன்றங்களில் வாதாடியவனும் , விடுதலையாகி வெளிவந்து இயற்கை விவசாயத்திற்குத் திரும்பியவனும் வயிற்றை நிறைத்துவிட்டார்கள்.
'முகிலினி' பெயர் வைத்துக் கொஞ்சியவனின் தமிழ் பற்றும் அந்த ஆடலரசியும் எனக்கான சேனைக்கிழங்கு. அதை எந்த நாவலில் தொடரப்போகிறீர்கள் சார்.....

குறிப்பு : மேற்கண்ட கட்டுரையில் கதையும் , கதாபாத்திரங்களின் பெயர்களும் வேண்டுமென்றே குறிப்பிடப்படவில்லை. சுவாரஸ்யமான அரசியல் பின்னணி, க்ராசிம்-டெக்கான் ரேயான் வியாபார பின்னணி , நம்மாழ்வார், மேதாபட்கர் இயற்கை விவசாய முன்னெடுப்புகளின் பின்னணி இவற்றை எல்லாம் குறிப்பிடவில்லை. மேலும் தெரிந்துகொள்ள " முகிலினி" யை அணுகவும்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....