சைரன்..

நேற்று ஒரு நண்பருடன் பேசிக்கொண்டிருந்த பொழுது அவரது உறவினரை ஒரு உடல் உபாதைக்காக ஒரு கார்ப்பரேட் மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகக் கூறினார். ஒரு மருத்துவத் துறையில் வியாபாரப் பணிகள் மேற்கொள்ளும் ஒரு சிற்றறிவாளன் என் கிற முறையில் எனக்கு அதில் உடன்பாடு இல்லை. என்ன நோய்க்கு எந்த மருத்துவரைப் பார்க்கவேண்டும் எந்த மருத்துவமனைக்குச்  செல்ல வேண்டும் என்பது இப்பொழுது பெரும் குழப்பம்.

நான் இளங்கலை படிக்கும்பொழுது மாவட்ட பதிவு அலுவலகத்தில் பகுதி நேர தட்டச்சு வேலைக்குச் சென்றேன். மாவட்டப்பதிவாளரின் நேரடி அதிகாரிக்குத் தேவைப்படும் தரவுகளைத் தட்டச்சுச் செய்ய ஆள் அப்பொழுது இல்லை என்பதால் பார்ட் டைம் ஆக நான் சென்றேன். பிறகு முதுகலை நான் செல்ல என்னால் அங்கு செல்ல இயலவில்லை. அங்கும் ஆள் எடுத்து இருந்தார்கள். பிறகு நான் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலைக்குச் சேர்ந்த சமயம். ஒரு பேருந்து நிறுத்தத்தில் எனக்குத் தட்டச்சு வேலை சொல்லும் அந்த அதிகாரியைப் பார்த்தேன். என்னைப் பற்றி விசாரித்தார். என் வேலையைச் சொன்னதும் அவர் கேட்ட கேள்வி ஆச்சரியத்திற்குரியது. ஒரு பேப்பர் பேனா எடுத்துக்கொண்டார். அவர் இப்படி கேட்டார்.

" தம்பி, நம்ம மதுரையில் எந்த எந்த நோய்க்கு எந்த எந்த மருத்துவர் சிறந்த நிபுணர் . எந்த மருத்துவமனைக்கு நம்ம அவசரம்னா போகலாம். நான்லாம் ஆபிஸே கதினு இருக்கிறவன். எனக்கு இதுலாம் தெரியாது. நீங்க இந்தத் துறை. அதுனால சொல்லுங்களேன் "

அப்பொழுது எனக்கு அந்தத் துறையில் வெறும் மூன்று மாதம் என்பதால் என்னால் சொல்ல முடியாமல் இரண்டு நாட்கள் கழித்துச் சொன்னேன்.

அவர் கேட்ட கேள்வி எவ்வளவு ஆழமானது என்பது நமக்குத் தெரியவேண்டும்.

பொதுவாக நாம் எப்படி எந்த மருத்துவமனையை அணுக வேண்டும் என்பது ஒரு முக்கியமானச் செய்தி

ஒரு ஞாயிற்றுக்கிழமையில் மதுரையில் ஒரு பெரிய கார்ப்பரேட் மருத்துவமனையில் எந்தத் தலைமை மருத்துவரும் இல்லாமல் டூட்டி டாக்டர்கள் ( பகுதி நேர மருத்துவர்கள்) கொண்டு இயங்குவது எத்தனைபேருக்குத் தெரியும். அதில் பாதி பேர் அலோபதி படிக்காமல் சித்தா ஆயுர்வேத மருத்துவம் படித்து அலோபதி மருத்துவர்களிடம் வேலை பார்க்கிறார்கள் என எத்தனைபேருக்குத் தெரியும்.

உண்மையில் இந்த கார்ப்பரேட் மருத்துவமனையின் டூட்டிடாகடர்கள் யாராக இருக்கலாம் எனப் பார்க்கலாமா.

 அ) MBBS  படித்துவிட்டு முதுகலைக்கு entrance test க்குப் படிக்கும் தருவாயில் வேலைக்கு வந்திருக்கலாம்.

 ஆ) படித்துக்கொண்டே வேலை பார்க்கும் அனுபவ அறிவு வேண்டி வரும் விருப்பமுள்ள மருத்துவ மாணவர்களாக இருக்கலாம்.

 இ) mbbs  படித்துத் துறை சார்ந்த முதுகலையும் படித்து அனுபவ அறிவு வேண்டும் என்பதற்காகப் பயிற்சிக்காக வந்திருக்கலாம். உதாரணமாக MS அறுவை சிகிச்சை படித்து முடித்திருக்கலாம். போதிய அனுபவத்திற்காக கார்ப்பரேட் மருத்துவமனையில் MS அறுவை சிகிச்சை மருத்துவரின் உதவியாளராக வந்திருக்கலாம்.

மேலே கண்டவற்றுள் சம்பளப் பிரச்சினைகள் இருக்கலாம். குறைந்த சம்பளத்திற்கு alternate medicine படித்தவர்கள் அதாவது சித்தா ஆயுர்வேதம் படித்தவர்கள் வந்திருக்கலாம்.

இது எல்லாம் சாதாரணமாக வந்திருக்கும் ஒரு சாமானியன் நோயாளிக்குத் தெரியுமா...தெரியாது. எல்லாப் பயலும் சிவப்பா இருப்பான். வெள்ளை கோட் போட்டிருப்பான். ஸ்டெத்தஸ்கோப் போட்டுருப்பான். நம்ம எல்லாரையும் நிபுணத்துவன் னு நம்புவோம்.

ஆக, நாம் எப்படி ஒரு மருத்துவமனையைத் தேர்ந்தெடுப்பது.

ஒரு ஊரில் சர்க்கரைக்கு , இதயத்திற்கு, சிறுநீரகத்திற்கு, எலும்பு முறிவு என்று நிறைய மருத்துவர்கள் இருப்பார்கள். தனித் தனியே இருப்பார்கள். அதாவது ஒரு இருதய நிபுணர் தனியாக கிளினிக்கோ, அல்லது மருத்துவமனையோ கட்டியிருப்பார். அங்கு அவர் மட்டும் தான் இருப்பார். காய்ச்சல் தலைவலி எல்லாம் பார்க்கமாட்டார். வெறும் இருதயப் பிரச்சினைகள். இப்படி.

இன்னொரு ரகம் ஒரு கார்ப்பரேட் மருத்துவமனை இருக்கும். எல்லா மருத்துவர்களும் இருப்பார்கள். ஆனால் ஒரு குறிப்பிட்ட மருத்துவர் மட்டும் வெகு பிரபலமாக இருப்பார். ஏதாவது ஒரு துறையில் பயங்கர பிரபலமாக இருப்பார். இது இப்படி.

ஆக ஒரு மருத்துவ மனையைத் தேர்ந்தெடுப்பது எப்படி.

உங்களுக்கு வயது நாற்பத்தைந்து. நடக்கும்பொழுது இடது மார்பில் லேசாக வ்லி ஏற்படுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக வலி அதிகமாகிறது. நடக்க நடக்க வலி ஏற்படுகிறது. பல நாட்களாக வலியைத் தாங்கி கொள்கிறீர்கள். இதை எந்த மருத்துவரிடம் காண்பிப்பது.

இப்பொழுது உங்களுக்கு சிறுநீர் கழிக்கும்பொழுது மிகுந்த நுரையுடன் செல்கிறது. நீங்கள் பல நாட்களாகக் கவனிக்கவில்லை. ஒரு நாள் சிறுநீர் கழிக்கையில் எரிச்சல் ஏற்படுகிறது. எந்த மருத்துவரிடம் நாம் போக வேண்டும்.

உங்களுக்கு வயது நாற்பது. உங்களுக்குச் சர்க்கரை நோய் வந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன என்பது உங்களுக்குத் தெரியாமலே இருந்திருந்தால்..? எப்படி கண்டுபிடிப்பது.

நீங்கள் அலோபதி மட்டுமல்ல மாற்று எந்த மருத்துவமுறைகளையும் மேற்கொள்ளுங்கள். ஆனால் எப்பொழுது எதைச் செய்ய வேண்டும் என்பது தெரியுமா...?


குழப்பமா இருக்கா...

யோசிச்சிட்டே  இருங்க.... அடுத்தப் பதிவில் பார்க்கலாம்...


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....