க்யூ

க்யூ ஃபீவர் என்றழைக்கப்படும் க்யூ என்ற மின் புத்தகத்தை முன்வைத்து...

கதையின் மையச் சரடிற்கும் என் தொழிலுக்கும் நிறைய சம்பந்தங்கள் உண்டு. நோய் ,மருத்துவர், மருத்துவம் போன்ற காரணிகளால் கதை கட்டமைக்கப்பட்டதே அதற்குக் காரணம். என்னால் ஒரு குறு நாவலை வேகமாகப் படிக்கமுடிந்ததற்கும் அதே காரணம்.

நோயாளிகள் வாழும் மருத்துவமனை படுத்துக்கிடக்கும் படுக்கை ஐசியூக்கள் பயிற்சி மருத்துவர்களின் வாழ்க்கை என எல்லாமே நான் நேரில் கேட்பதும் பார்ப்பதுமான எதார்த்தக் களம் இந்த க்யூ.

கீழிருந்து மேல் ஒரு நிகழ்வும் மேலிருந்து கீழ் ஒரு நிகழ்வும் மையத்தில் ஒரு நிகழ்வும் ஒருங்கிணைய கதை முழு பெற்று உரு அடைந்து முடிகிறது.

க்ளாசிக் வகைமையான நாவல்களிலிருந்து பின்நவீனத்துவ படைப்பாளிகள் தன்னை வேறுபடுத்திக்காட்டிக்கொண்டாலும் க்ளாசிக் வகைமை வர்ணனை எழுத்துகளையும் கதை போக்கையும் தக்கவைப்பார்கள். புதியதாய் உருவெடுத்துவரும் இளம் படைப்பாளிகளில் சிலர் , புதியதாய் வாசிக்கவருவோர்க்கு நல்ல சுவாரஸ்யத்தை அள்ளித்தருகிறார்கள். வாசிக்க அயர்ச்சியாய் உணரும் புதிய வாசகர்களை வாசிப்புப்பழக்கம் நோக்கி நகர்த்த இது போன்ற சுவாரஸ்ய கதைசொல்லிகள் அவசியம் தேவைப்படுகின்றனர். அந்த வகைமையில் எழுத்தாளர் பொன்ராஜ் ராமுவின் சுவாரஸ்யக் கதைசொல்லல் பாங்கு வெற்றி பெறுகிறது.
அறிவியல் வசப்படாத வாசகர்களுக்கு அறிவியலின் நிலவரத்தைத் தொட்டுச் செல்கையில் தன் பலமான வேகமான கதை நகர்த்தலைச் சற்று நிறுத்தி நகர்வது அத்தகைய வாசகர்களுக்கு சுவாரஸ்யத்தைத் தரும்.

வர்ணனைகளைக் கொண்டு எழுத்துகளால் வாசகனின் மனதில் கதைப்போக்கிற்கான ஒரு சித்திரத்தை வரைவது எழுத்தின் வீச்சு. வாசகனின் நேரடி அனுபவத்தின் மூலம் அப்படியொரு வாசிப்பனுபவத்தை உணர்தலை எட்டுவது எளிது. ஆனால் வாசகன் அனுபவித்திராத அல்லது அதுவரை உணர்ந்திடாத அல்லது பார்த்திராத உலகத்தை எழுத்தின் மூலம் உணரச்செய்வது எழுத்தின் வெற்றி. க்யூ வில் மருத்துவமனை பயிற்சி டாக்டர்களின் போக்குகளின் மூலம் அது சிறப்பாகச் செய்யப்பட்டிருக்கிறது. வரலாற்றுப் புனைவுகளில் கையாளப்படும் சான்றுகளுக்கானத் தனித்தொணியும் வாசகனை வரலாற்றோடே இயங்கவைக்கலாம். காற்றின் மூலமாக விரவ எத்தனிக்கும் ஓர் அறிவியல்காரணியைப் புனைவுகளிலிருந்து தனித்து எடுத்து கதையின் சரடுகளில் திணிப்பதில் நாவல் சுவாரஸ்யம் பெறுகிறது.
இருந்தபொழுதும் பாண்டியமன்னனின் வலியைச் சொல்லும் இடம் அவனிருக்கும் மாடத்தைப் போல் உயர்ந்த இடமாகப் பட்டாலும் அது குறித்த குறிப்புகளில் வலி கடத்தப்படவில்லை என்றே தோன்றுகிறது. கதையின் மையக் கருவில் அது இல்லை என்றாலும் கூட வாசகனின் உணர்வை நாவல் பல இடங்களில் தொட்டெழ வேண்டும் என்று அளவை வைத்தால் அதில் பாண்டியமன்னன் நிற்கும் மாடக் காட்சி வரும்.

உணர்வுவயப்படுதலின் பல சாத்தியக்கூறுகளை அஸ்வின் சாரா காட்சிகள் எழுதப்பட்டு நெடிய வசனத்தின் ஊடே உடைந்தழுவது போன்று உணர்வுவயத்தில் இருந்து உணர்ச்சிகளின்வயமாய் எழுத்து உருமாறுகிறது. காதலை எழுதி எந்த எழுத்தாளனும் தீர்ந்துபோவதில்லை என்ற நம்பிக்கையை எழுத்தாளர்.பொன்ராஜ்ராமு கருத்தில்கொள்ளவேண்டுமென குறும்பாய் கண்ணடித்துக் கேட்டுக்கொள்கிறேன்.

எனக்கு புத்தக வாசிப்புப் பழக்கம் இல்லை என அயர்ச்சியுறுவோர் க்யூ வை முயற்சிக்கலாம். வாசிப்புப் பழக்கம் கைகூடலாம். அதற்கான ஆர்வத்தை க்யூ தூண்டலாம்.

க்யூ , சுவாரஸ்யங்களின் டி என் ஏ வைத் தக்கவைத்து நிற்கிறது.

பழனிக்குமார்
மதுரை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....