அழுத்தம்

வெள்ளைக்காரனால் பெயர் வைக்கப்பட்ட வெஸ்ட் கிரேட் காட்டன் சாலையில் தானும் ஒரு துணி வியாபாரியாய் பிரயாணிப்பது மருதப்பனுக்குக் கௌரவமாகவே தெரிந்தது.

இந்தியர்களின் நூலைக் காட்டிலும் சிறந்த நூலை வெள்ளைக்காரன் வைத்திருந்ததாகவும் ஆதலால் அதை ஏற்றுமதி செய்ய துறைமுகம் செல்லும் சாலைக்கு அப்படி ஒரு பெயரை வைத்ததாகவும் கேள்விபட்டிருக்கிறார் மருதப்பன். . இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை. அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை என வியாபாரம் சம்பந்தமாக தூத்துக்குடிக்கு அவர் பலமுறைகள் வந்திருக்கிறார் .

துணி மில் வைத்திருக்கிறார்.
 ஏற்றுமதி படு ஜோர்.
 வட இந்திய வியாபாரமும் ஜோர்.
 தமிழ்நாடு முழுதும் சுற்றுவார்.
. முதலாளியே நேரில் வருகிறாரென வாடிக்கையாளார்கள் அதிகமாய் அவருக்குக் கிடைத்தனர்..
சின்னவயதில் படிக்க முடியாமல் ஒரு துணி மில்லில் வேலைக்குச் சேர்ந்து சைக்கிளில் மிதித்து வேலை பார்த்த அந்த வெஸ்ட் கிரேன் காட்டன் சாலையில் இப்பொழுது காரில் சென்றுகொண்டிருக்கிறார்.
 கையில் விற்கப்போகும் துணி போல் ஒரு சட்டை தைத்து அணிய வேண்டும் என்று ஏங்கிய அவருக்கு அப்பொழுது வயது 11. அந்த காலத்தில் அவர் வசம் 2 சட்டைகள் தான். அதை எப்பொழுதும் அவர் நினைப்பார். படித்திருந்தால் இன்னும் உயர்ந்திருக்கலாமோ என்று கூட அவர் கவலைப்பட்டிருக்கிறார்.

முதல்ல லாட்ஜுக்கு போ...ரூம் போட்ரலாம்...என டிரைவருக்கு சொன்னார்.
சோமா லாட்ஜ் அவரது வாடிக்கையான லாட்ஜ் . அங்கு தான் தங்குவார். அன்று அங்கு தங்கி அந்த நாள் வேலை பார்த்துவிட்டு அடுத்த நாள் திருநெல்வேலி செல்வார். இது தான் அவரதுவழக்கம்.
அவர் லாட்ஜுக்குச்சசென்றதும்  லாட்ஜ் மேனேஜர் எழுந்து வரவேற்பு கொடுத்தார்.
அய்யா எத்தன நாளுங்கய்யா
ஒரே நாள் தான்
301 ங்கய்யா...ஏசி ரூம்...
சாவியை வாங்கிக்கொண்டார்...
நீங்க போங்கய்யா....ரூம் பாய் ட்ட அட்வான்ஸ் ரிசிப்ட் கொடுத்துவிடுகிறேன் என்றார்.
மருதப்பன் 301 ரூம்க்குச் சென்றார். உள்ளே திறந்து அறையின் பின் கதவைத் திறந்தார் . சிவன் கோயில் கோபுரம் தெரிந்தது. வணங்கினார்.அவருக்கு இப்பொழுது ஒரு காப்பி தேவைப்பட்டது.
ரூம் பாய்க்கான அழைப்பு மணியை அழைத்தார்.
வழக்கமாய் இசக்கி என்ற ரூம்பாய் தான் வருவார். 45 வயது இருக்கும். காது கொஞ்சம் மந்தம்.
டீ வாங்கி வா என்றால் காப்பி வாங்கி வருவார்.
பிஸ்கட் வாங்கி வா என்றால் என்ன சிகரெட் வேணும் னு கேட்பார். ஆதலால் மருதப்பன் இப்பொழுது கொஞ்சம் சத்தமாய் பேசுவதற்குத் தயாராகி இருந்தார். 50 ரூபாய் நோட்டை எடுத்து வைத்துக்கொண்டார்.
சிறிது நேரம் ஆகியும் இசக்கி வரவில்லை. மறுபடியும் அழைப்பு மணியை அழைத்தார்.
சில நேரத்தில் சார் என்று ஒரு சத்தம் கேட்டது.
15 அல்லது 16 வயதில் ஒரு சிறுவன் வந்து நின்றான்.
என்ன னு கேட்டார் மருதப்பன்
கூப்பிட்டிருந்தீங்க சார்
நீ யாரு
ரூம்பாய் சார்
புதுசா
ஆமா சார்
இசக்கிஎங்க .
லீவு சார்
சரி வா...ஏன் வெளியேவே நிக்குற
கேக்காம வரக்கூடாதுல...
எப்பொழுதும் வேலைக்குச் சேர்ந்து கொஞ்ச நாளுக்கெல்லாம் நாம் சொல்லிக்கொடுத்த விதிகளை அப்படியே மதித்து நடப்போம். அந்தச் சிறுவனும் அப்படித் தான் செய்கிறான் அப்படித்தான் அவனுக்குச் சொல்லிக்கொடுத்திருக்கிறார்களென மருதப்பனுக்குத் தெரியும்.

காப்பி வாங்கி வரறீயா...
சரிங்க சார்
இந்தா என 50 ரூபாய் கொடுத்தார். கொஞ்ச சந்தேகத்துடன் மீதி சில்லறை வாங்கிட்டுவந்து ருவீயா இல்லாட்டி சில்லறையாவே தந்துரவா...
இல்ல சார் மாத்தி தர்றேன்னு அந்தச் சிறுவன் வாங்கிவிட்டு
சிகரெட் வேணுமா சார் னு கேட்டான்
மிக அதிர்ச்சியுடன் மருதப்பன் பார்த்தார். அவன் எவ்வளவு இயல்பாக கேட்கிறான். அவன் வயதிற்கு எத்தனைத்தனமான மனிதர்களை அவன் பார்க்கிறான். எத்தனை மனிதர்கள் அந்தச் சிறுவன் கையால் வாங்கி புகைத்திருப்பார்களோ என பார்த்துக்கொண்டே...அவர் புகைப்பதில்லை எனவும், காப்பி மட்டும் வாங்கிவா  என்றும் அனுப்பி வைத்துவிட்டு யோசனையில் இருந்தார் மருதப்பன்.
அந்தப் பையன் சிகரெட் வேணுமா எனக் கேட்டது ஒரு வலியைத் தந்தது. அந்தப் பையனுக்கு புகை பிடிக்கும் பழக்கத்திற்கு அது ஆளாக்கிவிடுமோ என்றும் தோணிற்று.
அந்தப் பையனை எத்தனை மனிதர்கள் சிகரெட் வாங்கச் சொல்லியிருப்பார்கள். பெற்றவர்கள் தங்கள் மகன் களைச்  சொலவர்ர்களா..

 பெற்றவர்கள் தங்கள் மகனை அனுப்பி சிகரெட் வாங்கி வரச் சொல்வார்களானால் இது என்ன சமூகம். அப்படிப்பட்ட தகப்பன் களை என்ன செய்வது.
தன் மகனாயிருந்தால் இங்கு வருபவர்கள் இந்தச் சிறுவனை சிகரெட் வாங்கச் சொல்வார்களா...மருதப்பனுக்குக் கவலையெல்லாம் அந்தச் சிறுவன் மீதே இருந்தது.
தான் அந்தச் சிறுவன் வயதில் யாருக்கும் சிகரெட் வாங்கி தந்திருக்கிறாரா என யோசித்தார். பிறகு இந்தப் பையனின் பெயரைக் கூடக் கேட்கவில்லை அவன் ஏன் இப்படி இந்த லாட்ஜிற்கு வந்தான் எதற்காக் வேலை பார்க்கணும். இதையெல்லாம் அவனிடம் கேட்க எண்ணிக்கொண்டிருந்தார்.
மருதப்பன் எப்பொழுதும் அப்படித்தான். தானும் கடினப்பட்டு வளர்ந்ததால் கடினப்படுபவர்களுக்கு உதவுவார்.
மறுபடியும் சார் என அச் சிறுவன் அழைத்தான்.
உள்ளே வா...
அவன் தான் வாங்கி வந்த பிளாஸ்க்கில் இருந்து ஒரு பேப்பர் கப்பில் காபியை ஊற்றி க் கொடுத்துவிட்டு, மீதி காப்பி இதிலிருக்கு ஊத்திக்கோங்க சார் என்று மீதி காசை கொடுத்தான்.
பத்து ரூபா பார்சல் காப்பி மீதி நாற்பது ரூபா சார் னு சொல்லிக்கொடுத்தான்.
ஒரு பத்து ரூபாயை அவனிடம் கொடுத்தார் மருதப்பன்.
சிரித்துக்கொண்டே வாங்கிக்கொண்டான்.
மீதி காப்பியை இன்னொரு டம்ளரில் ஊற்றச்சொல்லி அவனுக்கே கொடுத்து அவனிடம் பேச ஆரம்பித்தார்
உம் பேர் என்ன
முருகன் சார்..
எப்ப வேலைக்கு சேர்ந்த...
2 மாசம் ஆச்சு சார்
அப்பா என்ன பண்றாங்க அம்மா என்ன பண்றாங்க..கூட பிறந்தவங்க இப்படி ம்ருதப்பன் கேட்க முருகன் சொன்ன குடும்பக் கதை இது தான்
அப்பா இஸ்திரி தேய்ப்பவர் . அம்மா வீடுகளில் வேலை பார்ப்பவர். தங்கச்சி 4ம் வகுப்பு. தனியார் பள்ளிக்கூடத்தில் படித்தவன் முருகன். அப்பாவிற்கு டெங்கு காய்ச்சல் வந்து கொஞ்ச நாள் படுத்ததிலிருந்து வேலைக்குச் செல்லவில்லை. இப்பொழுதுதான் மறுபடியும் ஆளே நடமாடி வேலைக்குச் செல்கிறார். இந்த காரணத்தை பள்ளிக்கூட நிர்வாகம் கட்டணம் செலுத்தாதற்கு எடுத்துக்கொள்ளாது. படிப்பை நிறுத்திவிட்டான்.

அவன் பேசுவதை நிதானமாய் கேட்டார ம்ருதப்பன்.
சரி அரசாங்கப்பள்ளியில் சேரவேண்டியது தான....
டி.சி அங்க இருக்கு சார்
வாங்கு
பழைய காசு கொடுத்துட்டு வாங்கிட்டு போ னு சொல்லிட்டாங்க சார்
மருதப்பன் அலுத்துக்கொண்டார்.
பள்ளிக்கூடம் போனா படிப்பியா னு கேட்டார்.
படிப்பேன் சார்...நான் தான் 3 வது ரேங்க் வாங்குவேன் தெரியுமா னு அவன் கேட்டபோது மருதப்பன் கொஞ்சம் ஆதங்கப்பட்டுக்கொண்டார்.
அப்பொழுது இன்னொரு அறையிலிருந்து அழைப்பு மணி அழைக்க முருகன் ஓடினான்.
ம்ருதப்பனும் வந்த வேலை நிமித்தமாக கிளம்பினார். காரில் செல்லும்பொழுது முருகன் நினைப்பாவே இருந்தது. இன்னும் இன்னும் அவனிடம் பேச வேண்டும் என்றே அவருக்குத் தோன்றியது. மாலை வேலை முடித்து ரூம் சென்றதும் அவனை எப்படியாவது பள்ளிகூடத்திற்கு செல்லச் சொல்ல வேண்டும். கையில் காசை ப் பார்த்துவிட்டால் முருகனுக்கு படிக்கவேண்டும் என்ற அக்கறை இல்லாமல் போய்விடும் அதனால் அதைப் பற்றியெல்லாம் பேசவேண்டும் என யோசித்திருந்தார்.

மாலை ரூம் க்கு வந்ததும் முருகனை அழைத்தார்.
சார் காப்பியா...
ஆமா..
காசைக் கொடுத்தார்.
வாங்கி வந்தான். மறுபடியும் அவனிடம் பேச ஆரம்பித்தார் . அரசாங்கப் பள்ளியில் படித்தால் செலவிருக்காது. இதை உங்கள் அப்பாவிடம் சொன்னியா..
இல்லசார்
நீ போய் சொல்...அரசாங்க பள்ளியில் சேர்க்கச் சொல். பழைய பள்ளிக்கூடத்தில் இருந்து அதற்காகவாவது டி.சி யை வாங்கி வரச் சொல். படித்தால் இப்படி வேலை பார்க்கத்தேவையில்லை....என்று சொன்னார்.
அரை மணி நேரம் தான் கடினப்பட்டதையும் படித்திருக்கலாம் என்று அவர் ஏங்கியதையும் சொன்னார்.
சரிங்க சார் அப்பாட்டசசொல்றேன்
இந்தா என ஒரு ஐநூறு ரூபாய் நோட்டை அவன் சட்டைப் பையில் திணித்தார்.
நான் விடியகாலை கிளம்பிருவேன். அடுத்தத்தடவை வரும்பொழுது நீ இங்க வேலை செய்யக்கூடாதுனு மருதப்பன் சொன்னப்ப , அவனுக்கு சிரிக்கவும் முடியாமல் அழுகவும் முடியாமல் இருந்தான்.
ம்ருதப்பனுக்கு ஓரளவு சந்தோசம். இந்தப் பையனுக்கு படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது என்று.
இவன் இதே உணர்வோடு அப்படியே அப்பாவிடம் சொன்னால் அவரும் அரசுப் பள்ளியில் சேர்த்துவிடுவார் என்று மருதப்பன் நம்பினார்.
ஒருவேளை அது நடக்கவில்லை என்றால் , அடுத்த தடவை இங்குவரும்பபொழுது முருகன் வீட்டிற்கே சென்று அவன் அப்பாவிடம் பேசிவிடவேண்டும் என முடிவு பண்ணி அடுத்த நாள் விடியற்காலை கிளம்பி விட்டார்.

3 மாதங்கள் கழிந்தன.

இந்த முறை மறுபடியும் மருதப்பன் தூத்துக்குடி வந்து கொண்டிருந்தார். வரும்வழியெ ல்லாம் அவருக்கு பழைய யோசனை. முந்திய முறை கிரேட் காட்டன் சாலையில் தான் சைக்கிளில் வேலை பார்த்த கதை நியாபகம் வந்த மருதப்பனுக்கு, இந்த முறை முருகனின் நியாபகம்.
அவனது அப்பா அவனை பள்ளிக்கூடத்தில் சேர்த்திருப்பாரா...பள்ளியில் சேர்ந்திருப்பானா என்று சநதேகம்.
நேராய் சோமா லாட்ஜிற்குச் சென்றார்.
காரை விட்டு இறங்கியதும் முருகனைத் தேடினார்.
ரிசப்ஸனில் ரூம் பதிவு செய்துவிட்டு மேனேஜரிடம் முருகன் இருக்கானா னு கேட்டார்.
இல்ல சார்....அவன் வேலைய விட்டு 2 மாசத்துக்கு மேலாச்சு...என்று சொன்னார்.
மருதப்பனுக்கு சந்தோசம். அவன் இந்நேரத்திற்கு பள்ளிக்கூடத்திற்குச் சென்றிருப்பான்.
மிக உற்சாகமாய் ரூமிற்குச் சென்று ஓய்வு எடுத்துவிட்டு வேலைக்குக் கிளம்பினார்.
காரில் அமர்ந்து ஒவ்வொரு வாடிக்கையாளராய் போய் பார்க்க டிரைவரை வண்டி ஓட்டச் சொன்னார்.
தான் சிறுவனாக இருந்த பொழுது இருந்த ஏக்கம் அந்தச் சிறுவனுக்கும் இருக்கும் என்பதை அவர் அறிந்திருந்தார்.
தனக்குக் கிடைக்காத உதவியை நாம் அடுத்தவருக்கு அது போன்ற தருணத்தில் அப்படி ஒரு உதவியைச் செய்வது வரம். அது ஒரு மகிழ்ச்சி. அதை அவர் செய்த திருப்தியில் இருந்தார்.
 மாலை 4 மணிக்கெல்லாம் ஒரு துணிக்கடைக்குச் சென்றார். அந்த கடைக்கு இவர் தான் துணி சப்ளை. இவர் சைக்கிள் மிதித்த காலத்திலிருந்து அந்தக் கடைக்கு அவர் செல்கிறார். 2 தலைமுறைகளை அவர் பழகிவிட்டார். அந்தக் கடை முதலாளியும் இவரது உழைப்பிற்கு மதிப்பு தந்து இவர் வருகையில் நன்கு உபசரிப்பார்.
அந்தக் கடையின் முதலாளி தன் வேலைக்காரனை அழைத்து காப்பி வாங்கச் சொல்கிறார். அது முருகன்.
 கொஞ்சம் சப்தம் அடங்கி போய்விட்டார் மருதப்பன்.
முருகன் அவரைப் பார்த்துவிட்டு...என்ன சார் நீங்க இங்க ஏன் வந்தீங்க என்றான்.
இதைக் கேட்டு அவனது முதலாளிக்குக் கோபம் வந்துவிட
 ...யாருட்ட எப்படி பேசனும் தெரியாது....போக்கத்தவனே...எனத் திட்டினார்.
அவன் தலை குணிந்து நகர்ந்து விட்டான்.
மருதப்பனுக்கு அதற்கப்புறம் நிதானமாய் இருக்க முடியவில்லை.
அந்த முதலாளியிடம் எதையும் காட்டிக்கொள்ளவில்லை.
அங்க வைத்தே ஏன் பள்ளிக்கூடத்திற்கு போகலையா எனக் கேட்டால் அந்த கடையின் முதலாளி என்ன நினைப்பாரோ..
ஒரு தோல்வியைக் கண்டது போல் உணர்வு. சலிப்பு. வெறுப்பு. ஒரு ஏமாற்றம். எல்லாம் கலந்த கலவையாய் அவரது முகம் இருந்தது.

சுதாரித்துக்கொணட மருதப்பன் அந்த முதலாளியிடம் விடை பெற்று கிளம்பினார். டிரைவரை ஓரமாய் காரை நிறுத்தச் சொல்லி கொஞ்சம் தள்ளி நின்றார். முருகன் வெளியே வரமாட்டானா...
சிறிது நேரத்திற்கெல்லாம் முருகன் சைக்கிள் எடுத்து வெளியே கிளம்பினான். குறுக்கே போய் நின்றார் மருதப்பன்.
அவன் அப்படியே வாயடைத்து நின்றான்.
என்னாச்சு....என்ன சொன்னேன்...என்ன பணற...உனக்குப் போயி அறிவுரை பண்ணேன் பாரு...இரக்கப்படவே கூடாது என அவனிடம் சொன்னார்.
முருகன் மெல்ல ஆரம்பித்தான்.
சார் நீங்க சொன்னீங்கனு அப்பாட்ட சொன்னேன். உட்னே அப்பா அம்மாட்ட சொன்னாரு...நம்ம பிள்ளை மேல யாரோ ஒருத்தர் அக்கறை பட்டுருக்காரு...நம்ம கஷ்டப்பட்டாவது படிக்க வைப்போம்டி னு சொல்லி  டி.சி வாங்க போனோம்....
அடுத்த நாள் அரசாங்க பள்ளிக்கூடத்துல சேத்துவிடுறேனு சொல்லிட்டு வேலைக்குப் போனாரு...ரோட்டைக் கிராஸ் பண்றப்ப ஒரு லாரி மோதி....அப்பா...என்று தொண்டை தழுதழுக்க..நிறுத்தினான் முருகன்.
அவன் பேச்சை நிறுத்தவில்லை...அவனால் முடியவில்லை....ஆனாலும் அழவில்லை...
மருதப்பன் அப்படியே உறைந்து நின்றார்.
அழத் திராணி அற்று கிடப்பவர்கள் இந்தச் சமூகத்தில் ஆழமாகப் பாதிக்கப்பட்டவர்களாகவே இருப்பர்.
அழுதே தீரவேண்டியத் தருணத்தில் கூட அதை மென்று முழுகும் வலி செரிக்கத்தெரிந்த பால்யம் கொண்டவர்கள் தான் நம் முன்னோர்கள் என அனுபவம் பாடம் சொல்லும்.
முருகன் மறுபடியும் ஆரம்பித்தான்...
அப்பாவின் மீது லாரி மோதியது....ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றோம்...20 நாளாய் மருந்து மாத்திரையாய் இழுத்தது உயிர்...பேச்சு மூச்சு இல்ல...அப்புறம் போயிட்டார்.....
மருதப்பனுக்கு என்ன சொல்றதுனு தெரியல....
முத தடவ என்ன பாத்தத விட இப்ப எனக்குக் கடன் ஜாஸ்தி சார்....அப்பா ஆஸ்பத்திரிக்கு மருந்துனு கடனாகி நிக்குது....நான் தான் சார் வேலைக்குப் போகனும்....தங்கச்சி படிக்கிறா..அவ படிக்கட்டும் சார்.....
மருதப்பனுக்கு என்ன சொலவதென்று தெரியவில்லை...அவனது வார்த்தையில் ஒரு முதிர்ச்சி தெரிந்தது..அடுத்தது என்ன என்ற நிலைக்கு வந்துவிட்டான். புயலுக்குப் பிறகான செயல் போல் அது. தோல்விக்குப் பிறகான அமைதி ஆழமானது..நம்மை அமுக்கிவிடும்.. இவன் எழுந்து விட்டான். என்ன செய்ய வேண்டும் என்பதை விட எதையாவது செய்யவேண்டும் என எழுந்து நிற்கிறான்...மருதப்பன் முருகனையே பார்த்தார்...
அதான் சார் நீங்க அடுத்த தடவ அந்த லாட்ஜில் இருக்கக்கூடாது னு சொல்லிட்டீங்க.....அடுத்து வந்தா பள்ளிக்கூடம் போகலையானு கேப்பீங்க...காசு வேற கொடுத்துட்டீங்க..
எனக்கு பதில் சொல்லத்தெரியாது...அதான் இடத்த மாத்திட்டேன் சார்....
மருதப்பன் அவன் தோளைத் தட்டிக்கொடுத்தார். டிரைவரை வரச் சொல்லி காரிலிருந்த ஒரு கவரிலிருந்து ஒரு சட்டைத் துணியை எடுத்துக் கொடுத்தார்.
வேணாம் சார் என்றான்...
சும்மா வச்சுக்க...பண்டிகைக்கு எடுக்க வேணாம் இதையே வச்சுக்க என்றார்..
எதுவும் சொல்லாமல் வாங்கிக்கொண்டவன்.. வர்றேன் சார்..முதலாளி வேல கொடுத்துருக்காரு....என்று சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தான்...
அவன் நகர ஆரம்பித்ததும் மருதப்பன் கேட்டார்..
அடுத்த தடவ நான் வர்றப்ப இந்த கடையிலேயே இருப்பியா...
சார்...அது கிடைக்குற சம்பளத்தப் பொறுத்து னு கத்திட்டே சைக்கிளை ஏறி நின்று அழுத்த ஆரம்பித்தான்.....

அந்த அழுத்தம் அவனது காலுக்கு அடியில் இருந்து வரவில்லை. மனதிலிருந்து வந்தது.
சில பறவைகளின் பறத்தல் கூட இறகுகளுக்கு அடியிலிருக்கும் அழுத்தத்தில் தானே....

முருகன் அழுந்தும் அந்த அழுத்தம்  அப்படி ஒரு உயரத்தை நோக்கி இருக்கட்டும் என பெருமூச்சு விட்ட படி மருதப்பன் அடுத்த கடைக்குச் சென்றார். அங்கு ஒரு சிறுவன் வாசலைக் கூட்டிக் கொண்டு இருந்தான்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....