சித்ரா பௌர்ணமி மழை

சித்ரா பௌர்ணமி

"சித்ரா பௌர்ணமிக்கு மழ
வரும்ல" என்றபடியே
அங்கலாய்த்தது
தங்கம் ஆச்சி.
எப்பொழுதும் ஆச்சி
இப்படித் தான்-
தன் விருப்பங்களை
எல்லாம்
அனுமானங்களாக
அவிழ்த்து விடும்...

செம்பருத்தி செடியைப்
பதியம் போட்டு
மண்ணை உதறிய
உள்ளங்கை நிறத்தில்
தங்கம் ஆச்சி
இருக்கும்.
ஒருமுறை
மடியில் போட்டு
தலை கோதுகையில்
அந்த வாசம்தான்
வந்தது.
அரைநெல்லி இலை
பருமனில் தான்
என்றைக்கும் ஆச்சி
சேலை உடுத்தும்...
ஒரு
"சித்ரா பௌர்ணமி"
மழை மதியத்தில்
நனைந்துவிட்டு வந்த
என் "கரிசல்"கால்களை
அந்தச் சேலையில்தான்
ஒற்றியெடுத்தது...
பூமிநாதன் கோயில்
கிணற்று வாளி
சத்தத்தில்
ஆறுகால பூசையுமென
அள்ளி இறைத்தத்
தண்ணீரை
ஆச்சி சேலை
உள்வாங்கி
விரவிக்கொண்டது...
கால்களை ஒற்றி
நகப்பதம் பார்த்து
ஒருமுறை முகத்தைத்
தடவி
"மகாராசாவா போப்பா"
என்றது..
ஆச்சி சேலை
போலவே
மிருதுவான ப்ரியங்களை
விரவியபடி
நமக்கும் கொஞ்சம்
பரிமாறும்.
பேரன் வரும்
விடுமுறை நாட்களில்
மட்டும்
நல்லெண்ணெய் விட்டு
புளிக்குழம்பு சமைத்து
ஒவ்வொரு வாய்க்கும்
"உரைக்குதா" எனக்
கேட்கும்.

நடுநிசியில்
கால்களை
விரித்துவைத்து
நாள்பட்ட
முழங்கால் வலியை
"பூமிநாத சுவாமி"யிடம்
புகாரிடும்...
சத்தம் கேட்டுப்
புரண்டு படுத்தால்
என் கால்களை
அமுக்கிவிடும்...
நேரத்திற்கு வரும்
ஒரு நாய்க்கென
சாப்பாட்டை
மிஞ்சவைக்கும்...
ஆச்சிக்கு
ஒரு குவளை
பழையது தான்...
சுண்டவத்தலும்
நார்த்தங்காயும்
மிதக்க மிதக்கக்
குடித்துவிட்டு
சப்புக் கொட்டும்..
உச்சிவெயிலில்
தண்ணீர் தூக்கி
வந்தத்
தாகத்தையெல்லாம்
இப்படித்தான்
சப்புக் கொட்டும்..
வானம் பார்க்கும்
முற்றத்தின்
நடுவே இறங்கி
தான் தூக்கிச்
சுமந்த
பூமிநாதன் கிணற்று
தண்ணீர் குடிக்கும்
அணிலைப்
பார்த்தமாத்திரத்தில்

"சித்ரா பௌர்ணமிக்கு
மழ வரும்ல" என்றபடிதான்
அங்கலாய்த்தது..

ஆச்சி
எப்பொழுதும்
மழையை
நனைத்துக்கொண்டே
இருந்தது....

8/5/2020
23.48


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....