ட்ரோன் - க்வாரண்டைன் சிறுகதை.

ஹலோ..வணக்கம் சார்! நீங்க சொன்னமாதிரி தகரத்தை வச்சு இரண்டு பக்கமும் அடைச்சுட்டோம். அந்த இரண்டு வழியிலும் யாரும் ஏறி குதிச்சுக்கூட வரவும் முடியாது போகவும் முடியாது. இந்த ஒரு வழில மூணு பேரி கார்ட போட்டோம் சார். கம்பி வச்சு கட்டிருக்கோம். தண்ணிலாரி ஆம்புலன்ஸ் எதாச்சும் வந்தா நகர்த்திக்கிரலாம். நீங்க சொன்னமாதிரியே வச்சுட்டோம் சார். ஃபோட்டோ எடுத்து வாட்சப்ல அனுப்பிட்டேன் சார்" என்று தன்னோட மேலதிகாரிக்கு ரிப்போர்ட் கொடுத்தார் மாநகராட்சி அலுவலர்.
கொரொனோ ஊரடங்கு வந்ததிலிருந்து அழகரை எல்லாப் பக்கமும் வேலை வாங்குகிறார்கள். தினம் ஒரு வார்டு. இன்று 30ம் நம்பர் வார்டு.
பேரிகார்டுக்குப் பக்கத்தில் ஒரு பெரிய மேஜை போட்டார்கள். இரண்டு சேர்கள். ஒரு நோட்டு. ஒரு பேனா.
அழகர் அதில் உட்கார்ந்துகொண்டார். பக்கத்தில் இருந்தசேரில் காவல் துறை எஸ்.ஐ உட்கார்ந்துகொண்டார்.
காலை மணி ஏழு.
ரெண்டு பக்கம் அடைச்சுட்டானுக, ஒரு பக்கம் தான் திறந்திருக்குனு அந்த முன்னூறு வீடும் அல்லோலப்பட்டது. அந்தத் தெருவில் குடியிருந்த ஒரு பட்டாளத்துக்காரர் வேகமாக வந்தார்.
பேரிகார்ட் பக்கத்துல யாரும் இருக்காங்களா எனப் பார்த்தார். போலிசும் அழகரும் அமர்ந்திருந்ததைப் பார்த்துவிட்டுப் போனார். போனவர் , அவ்வளவுதான் அடைச்சுட்டானுக, இனி மேல் எதுவும் உள்ளே வராது' எனப் பொத்தம்பொதுவாய் தெருவின் நடுவில் இருந்து கூறினார். ஒவ்வொருவரும் பட்டாளத்துக்காரர் சொன்னாரென்று பீதியடைந்து அவரவர் வீட்டு வாசலில் வந்து நின்றுகொண்டு வேடிக்கைப் பார்த்தனர்.
எதிர் வீட்டு மாடியில் நின்ற இணையப் போராளி ஒருவர் தகரத்திற்கு அருகில் சென்று ஒரு செல்ஃபி எடுத்துக்கொண்டார். பத்து நிமிடம்கூட ஆகவில்லை, முகநூலில் , ப்ரே ஃபார் மீ..என்று அதைப் பதிவேற்றியிருந்தார். ஒரு பழைய மஞ்சள் நெளிஞ்ச செம்பை 'டேக் கேர்" ஸ்மைலியாய் அனைவரும் அமுக்கி வைத்திருந்தனர். செம்பு இன்னும் நெளிந்தவாறு இருந்தது.
ப்ரவீன், அந்த ஏரியா வாலண்டியருக்கு ஃபோன் செய்து இரு பக்கமும் தகரங்கள் வைத்து அடைத்ததற்குக் காரணம் கேட்டான். பிறகு தெருவில் நின்ற மக்களிடம் வந்து, 'இது ஏற்கனவேஇருக்கும் நடைமுறை தான், பயப்படத்தேவையில்லை, காய்கறி ,குப்பை, தண்ணீ னு எல்லாம் வரும். பயப்படாதீங்க என்றான்.
அனைவரும் பட்டாளத்தாரை முறைத்துவிட்டுச் சென்றனர்.

ஒன்பதரை மணி, மேஜை போட்டிருக்கும் அந்த வழிக்கு அருகில் இருக்கும் வீட்டுக்காரரான அரசு உத்யோகர் , அரசு ராஜ் வாக்கிங்க்கிற்காக வெளியே வந்தார். மனுஷனுக்கு தகரங்கள் வைத்து அடைத்தது தெரியாது. அவர் ஒருவர் தான் இந்த க்வாரண்டைனைக் கொண்டாடுவதாக இணையப் போராளி ஒரு ஸ்டேடஸ் போட்டிருந்தான். அதில் அரசு ராஜ் கையில் விஸ்கி பாட்டிலுடன் காட்சி அருளியிருந்தார்.
இரவு எல்லாம் தீர்த்தங்கள் உள்ளே இட்டுக்கொண்டவர் பாதி போதையில் காலையில் நடக்க வருவார், யாராவது கேட்டால் , வாக்கிங்க் இஸ் குட் ஃபார் ஹெல்த் ' என்பார். அதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம் அவருக்குப் போதை தெளியவில்லை என்று. வெளியே வந்தவர் பேரிகார்ட் க்கு அந்தப் பக்கம் அமர்ந்திருந்த அழகரைப் பார்த்தார்.

என்ன வேணும் சார், என்றார் அழகர்.
ஏன் இங்க உட்கார்ந்திருக்கீங்க என்றார் அரசு

'எங்க வேலை , இங்க வந்து உட்கார்ந்திருக்கோம், உங்களுக்கென்ன.'.
'பி.எம், வொர்க் ஃப்ரம் ஹோம் சொல்லியிருக்கார்ல, ஏன் வந்தீங்க' என்றார் அரசு.

அதற்கப்புறம் தான் அழகர், அரசுவை ஏற இறங்க பார்த்தார்.
அரசு மெதுவாய் நடந்துகொடுக்க ஆரம்பிச்சார்.

தெருவின் அடைக்கப்பட்ட இன்னொரு மூலையில் இருந்து ஆஜனபாகுவாய் ஒருவர் வந்தார்.
பேரி கார்ட் க்கு வெளியில் வந்து எதிரில் இருக்கும் கடைக்குப் போனார்,
அதைப் பார்த்த அழகர்,
'சார்! இங்க வாங்க, எங்க போறீங்க' என்றார்.
ஆஜனபாகு, சிரித்துக்கொண்டே,
இந்தா, இந்தக் கடைக்குத்தான் ..'
'இங்க எதுக்கு எங்கள போட்டுருக்காங்க, எங்கட்ட சொல்லிட்டுப் போகனும்ல" என்றார் அழகர்,
"ஆஜனபாகு குழைவாய் சிரித்துக்கொண்டே, என் மனைவி ஒரு டீச்சர், இப்ப சமைக்குறப்பத்தான் பருப்பு இல்லனாங்க, அதான் வாங்க வந்தேன்' என்றார்.

'சார், நீங்க பருப்பு வாங்குங்க அடுப்பு வாங்குங்க, நோட் ல எழுதிட்டு போங்க "
ஆஜனபாகு என்ட் ரி போட்டு கடைக்குப் போனார்.
' வரவன் போறவன் இப்படி நோட்ல எழுதிட்டு போறதுக்கு நம்ம ஏன் உட்காரனும்" அழகர் அருகிலிருந்த எஸ் .ஐ கேட்டார்.
'தெரியல சார்,
'வந்தவன் பொண்டாட்டி டீச்சர்னான், டீச்சர்னா பருப்பு வாங்க விடுவீங்களா' என்றார் எஸ் ஐ.
'சார், நானே இங்க வந்து உட்காந்திருக்கிறதே எதுக்குனு தெரியாம உட்காந்திருக்கேன், இதுல டீச்சர் பருப்பு வாங்குனா என்ன, டீச்சர் புருஷன் வாங்குனா என்ன சார், நீங்கவேற' என்றார் அழகர்.
 பருப்பை வாங்கிவிட்டு உள்ளே போகும்போது அழகருக்கு ஒரு சலாம் வைத்தார் ஆஜனபாகு
" யுவர்ஸ் ஒபிடியன்ட்லி டீச்சர் வீட்டுக்காரர்"என்றார் எஸ் ஐ.

மறுநாள் ஒரு ட்ரோன் கொண்டுவந்து படம் எடுக்கப்போவதாக காவல்துறை ஆள் ஒருவன் சொன்னான்.
அழகர் அவனுக்கு பேரிகார்டை நகர்த்திவிட்டு வழிவிட்டு அவரும் உள்ளே வந்தார்.
அங்கு தற்சமயத்திற்கு ஒலிபெருக்கி வைத்திருந்தார்கள். அதில் காவல்துறை எஸ்.ஐ ட்ரோன் பறந்து உங்களைக் கண்காணிக்கப்போகிறது. மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கவும் என்று அறிவிப்பு கொடுத்தார்.
ட்ரோன் பறக்க ஆரம்பித்தது.
நடுரோட்டில் அரசு வாக்கிங்க் வந்தார்.
 ட்ரோன் இயக்கும் டெக்னிஷியன் கையிலிருக்கும் ஸ்கீரீனில் அவர் வாக்கிங்க் வருவது தெரிந்தது.
ட்ரோன் , அரசின் தலைக்கு மேல் நின்றது . அரசு கேமராவைப் பார்த்து டாட்டா காண்பித்தார்.
அழகர் அதைப் பார்த்துவிட்டு வேகமாக ஓடி, அரசிடம், சார் உள்ள போங்க, யாரும் வெளிய வரக்கூடாது என்றார்.
'ஏன் குண்டு போடப்போறீங்களா' என்றார் அரசு.
'ஐயோ சார், இது ட்ரோன்'
உடனே ட்ரோனைப் பார்த்து அரசு, க்ளேட் டூ மீட் யூ என்றார்.
ஸ்கீரினைப் பார்ப்பவனுக்கு அல்லையைப் பிடித்தது.

'சார், இதுல படம் எடுக்குறோம். எடுத்து அனுப்பனும், அதான் எங்க வேலை' என்றார் அழகர்.
'அப்படினா, என் நம்பர குறிச்சுக்கோங்க, எனக்கு வாட்ஸ்ப்ல அனுப்புங்க, நான் நடக்குறது வரும்ல ' என்றார்.
இவர்கள் பேசும்வரை ட்ரோன் தலைக்கு மேல் பறந்துகொண்டிருந்தது. பேசும்போது அரசு, அதற்காகவே கேமராவைப் பார்த்தே பேசினார்.
இவர்கள் நகர்ந்தபாடில்லை என டெக்னிஷியன், ட்ரோனை கீழே இறக்கினான்.

'என்ன? எடுத்தாச்சா' எனக்கேட்டார் அழகர்.
'இல்ல சார், நான் வேற ஏதாச்சும் ஏரியாவ எடுத்து இங்கனு போட்டுக்கிறேன்' னான்.
ட்ரோன் எப்படி பறக்கிறது என வேவு பார்த்துக்கொண்டிருந்த பட்டாளத்துக்காரர் மெதுவாய் வந்தார்.
'எடுத்தாச்சா? என்றார்
'ம்..எடுத்தாச்சு' என்றார் அழகர்.
'என் ஃபோட்டோலாம் வரும்..வாட்ஸப்ல அனுப்புவாங்க ' என்றார் அரசு.
பட்டாளத்துக்கு பொறாமையாய் இருந்தது.
'சார், என் வீட்டு முன்னாடி இருந்து ஒரு ஃபோட்டோ எடுங்கனார் ' பட்டாளம்.
'இது பறக்கும்ல, மாடில போய் நிண்டுக்கோங்க, இது பறந்து வந்து எடுக்கும்' என்றார் அரசு.
'அப்பனா ஒண்ணு செய்யுங்க, வீட்ல தண்ணீ தொட்டி மூணாவது மாடிக்கும் மேல வச்சுட்டேன், மேல ஏற முடியல, தொட்டில தண்ணீ எவ்ளோ இருக்குனு பாத்திரலாமா, ' என்றார் பட்டாளம்.
'அதுலாம் எடுப்பாங்க, ஆனா, ந்யூஸ்ல தந்திராதீங்க தம்பி' என்றார் அரசு.
டெக்னிஷியனுக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. ஏதோ ப்ளம்பர் என்று நினைத்து இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர்.
அரசுவாவது இரவு போதையில் இருக்கிறார் இப்படி பேசுகிறார். இந்தப் பட்டாளத்துக்காரர் ஏன் இப்படி பேசுகிறார் என அழகருக்குக் குழப்பம்.

'சார் இது ட்ரோன்' என்றார் அழகர்,
'வேற பேர் வையுங்க..இது நல்லால ' என்றார் அரசு.
டெகினிஷியன் , ட்ரோனை ஒரு பெட்டியில் வைத்து பூட்டினான்.
'சார், லடாக் ல ட்ரோன நானே உள்ள உக்காந்து ஓட்டிட்டுப் போவேன், நான் தான் அங்க டேம் ல எவ்ளோ தண்ணி இர்க்குனு பேப்பர்க்கு சொல்லுவேன், பெட்டி செய்தியா டேம் தண்ணி இருப்புனு வரும், ஆயிரம் சொல்லுங்க, மிலிட்டரி மிலிட்டரி தான், போலிஸ் போலிஸ்  தான் ' என்றார் பட்டாளம்.






கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....