கைகளைக் கொடேன்

கைகளைக் கொடேன்..
ஏன் இப்பொழுது
எல்லாம்
உன் கைகளைத்
தர மறுக்கிறாய்...
தூரங்களைத்
தூரமாகவே
வைத்துக்கொள்ளும்
உன் இயல்பை
மாற்றிக்கொள்ள
நீ
கைகளைக் கொடுத்துதான்
ஆக வேண்டும்..
சிறு தாவரங்களுக்கு
அப்பால் வளர்ந்த
ஒருவனின் நுனிவிரலில்
நரம்புமுடிச்சுத் தூண்டல்களை
உணர்ப்பிக்க
நீ
கைகளைக் கொடுத்துதான்
ஆக வேண்டும்..
கைகளைப்
பற்றிக்கொண்ட
முந்தைய தருணத்தில்
ரேகைகளில் ஒன்று
இன்னொருவரின் கைகளுக்குப்
புலம் பெயர்ந்திருக்கலாம்...
ஞாபகங்களை 
மீட்டெடுப்பதைப் போல
ரேகைகளுக்கென
ஒரு வலசை
செய்து கொடுக்கலாம்....
உனக்கு ஒரு
மழையை
ஞாபகப்படுத்த
ஒரு பாடல் 
தேவைப்படலாம்..
ஒரு சிறுதாவரம்
போதுமானதாயிருக்கலாம்...
உன் கைப்பிடி
அளவு மட்டுமே
எனக்கு இருக்கிறது..
கைகளைப் பற்றுதல்
என்பது
பெருஞ்சத்தத்திற்கு
அடைக்கலம் நாடும்
ஒரு நாய்க்குட்டியின்
பாதுகாப்பு உணர்வு...
கைகளிலிலிருந்து
விடுபட்ட நூலைப்
பிடித்த மாத்திரத்தில்
வானை மீட்டெடுக்கும்
பட்டமாகுதல் அது...

"கூடவே இரு"
என்பதை
பத்தாயிரம் முறை
சொல்வதற்கு 
ஒரு முறை
கைகளைப் பற்றிக்கொள்..
ஏன்
இப்பொழுதெல்லாம்
உன் கைகளைத்
தர மறுக்கிறாய்?
கைகளைக் கொடேன்...













கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நானுனக்கு...

பூ தொடுத்தல்

இது தம்மு...இது ரம்மு....